ப்ளீஸ் பில்டர்ஸ், பால்கனில ஒரு கதவு வைங்க... ஆபத்துக் காலத்துல தப்பிக்க உதவும்!
சென்னை: சென்னை வெள்ளத்தில் முதல் மற்றும் இரண்டாவது தளம் மூழ்கிய நிலையில், கட்டிடத்தில் இருந்து வெளியேற அடுக்குமாடிக் குடியிருப்புவாசிகள் மிகவும் சிரமத்திற்கு ஆளாயினர். பால்கனிகளில் கதவுகள் வைக்கப் பட்டிருந்தால் தாங்கள் எளிதாக மீட்கப் பட்டிருக்கலாம் என்பது அவர்களது கருத்து.
தலைநகர் சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் கண்ணுக்கெட்டிய தூரம் வரை பிளாட்டுகளின் ஆதிக்கம் தான். பிளாட்டுகளுக்கு செல்வதற்கு குறுகிய படிக்கட்டுகள் மட்டுமே வழி.
இந்நிலையில் கடந்த வாரம் பெய்த கனமழை காரணமாக பிளாட்டுகளின் முதல் மாடி வரை நீர் நிரம்பியது.
மூழ்கிய படிக்கட்டுகள்...
படிக்கட்டுகளையும் நீர் சூழ்ந்ததால் மக்களால் படிக்கட்டுகள் வழியாக கீழே இறங்க இயலாத நிலை. மீட்புப் பணிக்கு படகுகள் வந்த போதும், பலரால் வீடுகளை விட்டு வெளியேற இயலவில்லை.
மூடப்பட்ட பால்கனிகள்...
காரணம் வீட்டு பால்கனிகள் முழுவதும் கம்பிகளால் அடைக்கப் பட்டிருந்தது தான். பால்கனிகளில் சிறிய கதவுகள் வைக்கப் பட்டிருந்தவர்கள் சுலபமாக அதன் மூலம் வீட்டை விட்டு வெளியேறினர்.
மூழ்கி விடுவோமோ என்ற பீதி...
மற்றவர்கள் வீட்டை விட்டு எவ்வாறு வெளியேறு என தெரியாமல், வீட்டிற்குள்ளேயே நீரில் சிக்கி மூழ்கி விடுவோமோ என்ற அச்சத்துடன் இருந்தனர். பெரும்பாலான இடங்களில் படகுகளில் மீட்க வந்தவர்களும் தொழில்முறை மீட்புப் பணி தெரிந்தவர்கள் அல்ல.
குழம்பிய குடும்பத் தலைவர்கள்...
இதனால் வீட்டில் இருந்த பெண்கள் மற்றும் குழந்தைகளை எவ்வாறு பத்திரமாக வெளியே அழைத்துச் செல்வது என குடும்பத்தலைவர்கள் குழம்பிப் போனார்கள். கயிறு கட்டி படகில் இறக்குவதும் சவாலானதாகவே இருந்தது.
வீட்டில் இருப்பதே பாதுகாப்பு...
அவ்வாறு செய்யும் போது தப்பித்தவறி நீரில் விழுந்து விட்டால் என்ன செய்வது என்ற அச்சமும் இருந்தது. இவ்வளவு ரிஸ்க் எடுத்து வெளியேறுவதற்கு பேசாமல் நீர் வடியும் வரை வீட்டிற்குள்ளேயே இருக்கலாம் என்ற மனநிலைக்கு பலர் தள்ளப் பட்டனர்.
பால்கனிகளுக்கு கதவு...
இப்படி ஒரு நிலை வரும் என யாரும் நினைத்திருக்க மாட்டார்கள். இதனை ஒரு எச்சரிக்கையாகக் கொண்டாவது இனி வரும் காலங்களில் வீட்டு பால்கனிகளில் சிறிய கதவு ஒன்றை வைக்க பில்டர்கள் ஏற்பாடுகள் செய்யலாம்.
நீங்களும் தான்...
அதே போல், இனி புது வீடு வாங்குபவர்களும் மழை வெள்ளம் வந்தால் தப்பிப்பதற்கு வழி இருக்கும் வகையில் வீடு அமைந்துள்ளதா என்பதை செக் செய்து விட்டு பிளாட் வாங்குவது நலம்.
இதையும் செக் பண்ணிக்கோங்க...
அதற்கு முன்பு அந்த ஏரியாவில் மழை பெய்தால் வெள்ளம் வருமா.. வெள்ளம் வந்தால் தப்ப வழி உள்ளதா என்பதை உறுதி செய்து கொள்வது மிக மிக முக்கியம்.