தோண்டத் தோண்ட தமிழர் நாகரிகம்.. பல தடைகளைக் கடந்து.. கீழடியில் 3ம் கட்ட ஆய்வு தொடக்கம்
தோண்டத் தோண்ட தமிழர் நாகரிகத் தொன்மங்கள் கிடைத்த கீழடியில் 3ம் கட்ட ஆய்வு இன்று தொடங்குகிறது.
மதுரை: கீழடியில் 3ம் கட்ட அகழாய்வு பணி இன்று காலை தொடங்குகிறது. மத்திய தொல்பொருள் கண்காணிப்பாளர் ஸ்ரீராம் தலைமையில் பணிகள் தொடங்க உள்ளன.
மதுரை அருகே கீழடியில் அகழ்வாராய்ச்சி மேற்கொண்ட போது அங்கு சுமார் 2500 ஆண்டுகளுக்கு முந்தைய தமிழர்களின் வரலாற்று பொக்கிஷம் கண்டுபிடிக்கப்பட்டது.
சுமார் 5300 தொன்மம் மிக்க பண்டைய பொருட்களும் அங்கே கண்டறியப்பட்டன. மேலும், அகழாய்வு குழியின் இடை அடுக்கில் எடுக்கப்பட்ட பொருட்களில் நடத்தப்பட்ட கரிம பகுப்பாய்வு சோதனையில் கீழடி நகர நாகரிகம் கி.மு. 2ம் நூற்றாண்டுக்கு முந்தையது என்பது உறுதிபடுத்தப்பட்டது.
பாதியில் நிறுத்தம்
இந்நிலையில், மத்திய அரசு இந்த ஆராய்ச்சியை பாதியிலேயே நிறுத்தியது. இதனை எதிர்த்து தமிழகத்தில் உள்ள அனைத்து அரசியல் கட்சித் தலைவர்களும், சமூக ஆர்வலர்களும் எதிர்த்தனர்.
3ம் கட்ட ஆய்வு அனுமதி கோரல்
இதனிடையே, மதுரை அருகே கீழடியில் புதைந்திருந்த தமிழர் நாகரிகத்தை வெளிக் கொண்டு வந்த புகழ்மிக்க பணியின் கண்காணிப்பாளராக பணியாற்றிய அமர்நாத் ராமகிருஷ்ணன் 3ம் கட்ட ஆய்விற்கான நிதி கேட்டு மத்திய அரசிடம் வேண்டுகோள் வைத்தார்.
இடமாற்றம்
இந்நிலையில், கீழடி தொல்லியல் ஆய்வுகளுக்கு தலைமையேற்று நடத்திய அமர்நாத் ராமகிருஷ்ணன் தமிழகத்தில் இருந்து அசாம் மாநிலத்திற்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டார். மத்திய அரசு தனது புதிய கொள்கை முடிவுகளைக் காரணம் காட்டி இந்த பணியிட மாற்றத்தை நிகழ்த்தியது.
ஆய்வில் தொய்வு
அதிகாரியின் அதிரடி மாற்றத்தால் கீழடி அகழ்வாய்வு பணிகளில் தொய்வு ஏற்பட்டது. இதற்கு தமிழ் ஆர்வலர்களும், வரலாற்று பிரியர்களும் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
எதிர்ப்பு
தமிழகத்தில் இருந்து இதற்கு கடுமையான எதிர்ப்பு கிளம்பியது. இதனையடுத்து, 3ம் கட்ட ஆய்விற்கு மத்திய அரசு அனுமதி வழங்கியது. மேலும், பதிய கண்காணிப்பாளராக ஸ்ரீராம் என்பவரை நியமித்தது.
3ம் கட்ட ஆய்வு தொடக்கம்
இதனைத் தொடர்ந்து, 3ம் கட்ட ஆய்வுப் பணிகள் இன்று தொடங்குகிறது. கண்காணிப்பாளர் ஸ்ரீராம் தலைமையில் தொடங்கும் இந்த ஆய்வில் 15 தொல்லியலாளர்கள் இடம் பெற்றுள்ளனர்.