கீழடியில் 3ம் கட்ட ஆய்வு தொடக்கம்.. அருங்காட்சியகம் அமைக்கப்படுமா… ஸ்ரீராம் விளக்கம்
தோண்டத் தோண்ட தமிழர் நாகரிகத் தொன்மங்கள் கிடைத்த கீழடியில் 3ம் கட்ட ஆய்வு இன்று தொடங்கியது. ஆய்வின் இறுதியில் அருங்காட்சியகம் வைக்கப்பட வாய்ப்பிருப்பதாக ஸ்ரீராம் தெரிவித்துள்ளார்.
மதுரை: கீழடியில் 3ம் கட்ட அகழாய்வு பணி இன்று காலை தொடங்குகிறது. மத்திய தொல்பொருள் கண்காணிப்பாளர் ஸ்ரீராம் தலைமையில் பணிகள் தொடங்கி உள்ளன.
மதுரை அருகே கீழடியில் அகழ்வாராய்ச்சி மேற்கொண்ட போது அங்கு சுமார் 2500 ஆண்டுகளுக்கு முந்தைய தமிழர்களின் வரலாற்று பொக்கிஷம் கண்டுபிடிக்கப்பட்டது.
சுமார் 5300 தொன்மம் மிக்க பண்டைய பொருட்களும் அங்கே கண்டறியப்பட்டன. மேலும், அகழாய்வு குழியின் இடை அடுக்கில் எடுக்கப்பட்ட பொருட்களில் நடத்தப்பட்ட கரிம பகுப்பாய்வு சோதனையில் கீழடி நகர நாகரிகம் கி.மு. 2ம் நூற்றாண்டுக்கு முந்தையது என்பது உறுதிபடுத்தப்பட்டது.
3ம் கட்ட ஆய்வு தொடக்கம்
இதனைத் தொடர்ந்து, 3ம் கட்ட ஆய்வுப் பணிகள் இன்று தொடங்கியுள்ளன. கண்காணிப்பாளர் ஸ்ரீராம் தலைமையில் தொடங்கும் இந்த ஆய்வில் 15 தொல்லியலாளர்கள் இடம் பெற்றுள்ளனர்.
ஆய்வின் முடிவு
இதுகுறித்து தலைமை கண்காணிப்பாளர் ஸ்ரீராம் செய்தியாளர்களிடம் கூறியதாவது: இந்த ஆய்வின் முடிவில்தான் பல செய்திகள் தெரியவரும். இந்த இடத்தில் நிச்சயம் மனிதர்கள் வாழ்ந்திருக்கிறார்கள். ஆனால் ஊராக வாழ்திருக்கிறார்களா, விவசாய நிலமாக இருந்ததா என்பதெல்லாம் ஆய்வின் முடிவில் வெளியாகும்.
அருங்காட்சியகம்
ஆய்வில் கிடைக்கும் பொருட்களை வைத்து ஆய்வு செய்த பின்னரே அருங்காட்சியகம் அமைப்பது தொடர்பாக முடிவெடுக்கப்படும். இது அரசின் கொள்கை முடிவாக உள்ளது. எனவே, அருங்காட்சியகம் வைக்க வாய்ப்புகள் இருக்கிறது.
ஆதரவிற்கு நன்றி
இந்த ஆய்விற்கு மத்திய மற்றும் மாநில அரசு தொடர்ந்து ஆதரவு அளித்து வருகின்றன. அனைத்து வகையிலும் உதவிகரமாக இருக்கின்ற மாநில அரசுக்கு நன்றி சொல்லிக் கொள்கின்றேன். இந்த ஆய்வு செப்டம்பர் மாதம் வரை நடைபெறும் என்ற ஸ்ரீராம் தெரிவித்தார்.