ஆறாத வடுவாக கீழ்வெண்மணி படுகொலை.. 49வது சோக தினம் இன்று!
ஆண்கள், பெண்கள், குழந்தைகள் என்று பாராபட்சமில்லாமல் 49 பேர் இரக்கமின்றி எரிக்கப்பட்ட நாள் இன்று
நாகை: நாகப்பட்டனம் மாவட்டம் கீழ்வெண்மணி கிராமத்தில் தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த ஏழை விவசாய கூலித்தொழிலாளிகள் கூண்டோடு எரிக்கப்பட்ட 49வது நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது.
நாகை மாவட்டம் கீழ்வெண்மணி என்ற கிராமத்தில் ஆதிக்க சாதியினரின் இரும்பு பிடியிலிருந்த தாழ்த்தப்பட்டவர்கள் அவர்களை எதிர்த்து கேள்வி கேட்க ஆரம்பித்ததன் விளைவு தான் இந்த சம்பவம். ஊதியத்தை உயர்த்திக்கேட்டதில் தொடங்கிய இந்த பிரச்சனை, நில உரிமையாளர்களுக்கும் விவசாயி கூலிகளுக்கும் இடையே பெரும் பகைமையை உண்டு செய்தது.
1968ம் ஆண்டு டிசம்பர் 25ம் தேதி உலகமே கிறிஸ்துமஸ் சந்தோஷத்தில் முழ்கி இருந்ததால், தமிழகத்தில் ஏதோ ஒரு மூலையில் தீயில் கருகிக்கொண்டிருந்த 44 பேரின் அலறல் சத்தம் யாருக்கும் கேட்கவில்லை. வயது மற்றும் பாலின பேதமின்றி, 20 பெண்கள், 19 சிறுவர்கள், 5 ஆண்கள் என்று ஒரே குடிசையில் வைத்து உயிருடன் எரிக்கப்பட்டனர்.
கீழ்வெண்மணி சம்பவத்தை பற்றி இன்றைய தலைமுறைக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை. இந்த சம்பவம் நடந்தேறி 49 ஆண்டுகள் ஆனாலும் ஆறாத வடுவாகவும், தாழ்த்தப்பட்டோரின் அவலநிலையை உலகிற்கு எடுத்து சொல்லும் சம்பவமாகவும் தற்போதும் இது சுட்டிக்காட்டப்படுகிறது.