பொன்னார் மற்றும் உதயக்குமார் மூலமாக மோடியைச் சந்திக்கிறார் கெஜ்ரிவால்?
டெல்லி: கூடங்குளம் அணு உலை எதிர்ப்புக் குழுவின் தலைவரும், ஆம் ஆத்மி கட்சியின் கன்னியாகுமரி வேட்பாளராகப் போட்டியிட்டவருமான உதயக்குமார் உள்ளிட்ட குழுவினர் பிரதமர் மோடியைச் சந்திக்கவுள்ளனர்.
இக்குழுவில் ஆம் ஆத்மி தலைவர் கெஜ்ரிவாலும், அவரது கட்சியின் யோகேந்திர யாதவும் இடம் பெற்றுள்ளதாகவும் கூறப்படுகிறது.
உதயக்குமார் உள்ளிட்டோர் கடந்த மாதம் மத்திய அமைச்சர் பொன் ராதா கிருஷ்ணனை சந்தித்து பிரதமரை சந்திக்க அனுமதி வாங்கித்தருமாறு கேட்டனர். அதற்கு அவர் 5 பேருக்கு மட்டுமே அனுமதி கிடைக்கும் என்றார்.
அதன்படி உதயகுமார், மைபா ஜேசுராஜன், தயாமணி பர்லா, அரவிந்த் கெஜ்ரிவால், யோகேந்திர யாதவ் ஆகிய 5 பேரும் பிரதமர் மோடியை சந்திக்க வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. தற்போது தமிழகத்திலிருந்து உதயக்குமார் உள்ளிட்டோர் டெல்லியில் முகாமிட்டுள்ளனர்.
மோடியை எதிர்த்து மோதிய கெஜ்ரிவால்
அரவிந்த் கெஜ்ரிவால், வாரணாசி தொகுதியில் பிரதமர் மோடியை எதிர்த்துப் போட்டியிட்டுத் தோல்வியைத் தழுவியவர் என்பது நினைவிருக்கலாம்.