சபரிமலையை வைத்து அரசியல் செய்கிறார் பினராயி.. தமிழிசை குற்றச்சாட்டு
சபரிமலை கோவிலை வைத்து கேரள முதல்வர் பினராயி விஜயன் அரசியல் செய்வதாக தமிழக பாஜக தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார்.
திருவனந்தபுரம்: சபரிமலை கோவிலை வைத்து கேரள முதல்வர் பினராயி விஜயன் அரசியல் செய்வதாக தமிழக பாஜக தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார்.
சபரிமலை கோவிலுக்குள் பெண்கள் நுழைவிற்கு எதிராக 2வது நாளாக போராட்டம் நடந்து வருகிறது. கலவரம் நடப்பதை தடுக்க அங்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
இதனால் அங்கு பரபரப்பான சூழ்நிலை நிலவுகிறது. இதனால் அங்கு பம்பை, நிலக்கல், சன்னிதானம் பகுதிகளில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் சென்னையில் தமிழக பாஜக தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் பேட்டி அளித்தார். பல்வேறு கேள்விகளுக்கு அவர் பதில் அளித்தார்.
அதில், கேரள முதல்வர் பினராயி விஜயனின் செயல் கண்டிக்கத்தக்கது. சபரிமலை பிரச்சனையின் மூலம் பினராயி குளிர்காய்கிறார். சபரிமலை கோவிலை வைத்து பினராயி விஜயன் அரசியல் செய்து வருகிறார்.
கேரளாவில் போலீஸ் அராஜகம் நடக்கிறது. மக்களின் வாகனத்தை போலீஸ் எப்படி அடிக்கலாம். அங்கு போராடிய மக்களை போலீஸ் வேண்டும் என்றே திட்டமிட்டு தாக்கியுள்ளது.
கேரளாவில் அவ்வளவு பிரச்சனை நடக்கிறது. ஆனால் கேரளா முதல்வர் பினராயி இந்த நேரம் பார்த்து அரபு நாடுகளுக்கு சென்று இருக்கிறார்.
மத்திய இணை அமைச்சர் எம்.ஜே அக்பரின் பதவி விலகலை மதமாக பார்க்க கூடாது. அதை மணமாக பார்க்க வேண்டும் என்று குறிப்பிட்டு இருக்கிறார்.