நீட் தேர்வு எழுத வரும் தமிழக மாணவர்களுக்கு உதவ கேரள முதல்வர் பினராய் விஜயன் உத்தரவு!
நீட் தேர்வு எழுத வரும் தமிழக மாணவர்களுக்கு உதவ கேரள முதல்வர் பினராய் விஜயன் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
Recommended Video
திருவனந்தபுரம்: நீட் தேர்வு எழுத வரும் தமிழக மாணவர்களுக்கு உதவ கேரள முதல்வர் பினராய் விஜயன் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
மருத்துவ படிப்புகளுக்கான நீட் தேர்வு இந்தியா முழுவதும் நாளை நடைபெறுகிறது. தமிழகத்தில் போதுமான போதுமான நீட் தேர்வு மையங்கள் அமைக்காததால் தமிழக மாணவர்கள் பலருக்கு நீட் தேர்வு எழுத ராஜஸ்தான், கேரளா, சிக்கிம் போன்ற மாநிலங்களில் தேர்வு மையம் ஒதுக்கப்பட்டுள்ளது.
வெளிமாநிலங்களுக்கு நீட் தேர்வு எழுத செல்லும் மாணவர்களுக்கு இலவச இரண்டாம் வகுப்பு ரயில் டிக்கெட் மற்றும் பஸ் டிக்கெட், முன்பணமாக ரூ 1000 வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.
தமிழக அரசு அறிவிப்பு
மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள் மூலம் மாணவர்களுக்கு முன்பணம் வழங்க நடவடிக்கை எடுக்கப்படுகிறது. நீட் தேர்வுக்கான நுழைவுச் சீட்டு, அடையாள அட்டையை காண்பித்து முன்பணம் வாங்கி கொள்ளுமாறு மாணவர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
எர்ணாகுளத்தில் மையம்
தமிழக மாணவர்கள் 5,371 பேர் கேரள மாநிலம் எர்ணாகுளத்தில் நீட் தேர்வு எழுதுகின்றனர் என தெரியவந்து உள்ளது. மதுரையிலிருந்து 1,550 பேர், திருச்சியிலிருந்து 1,520 பேர், நெல்லையிலிருந்து 2,301 பேர் கேரள மாநிலம் எர்ணாகுளத்திற்கு சென்று தேர்வு எழுதுகின்றனர்.
பலர் உதவி கரம்
வெளிமாநிலங்களுக்கு தேர்வு எழுத செல்லும் தமிழக மாணவர்களுக்கு உதவ பலர் ஆதரவு கரம் நீட்டி உள்ளனர். அதுவும் ராஜஸ்தான் மாநிலம் வெகுதொலைவில் இருப்பதால் அங்கு செல்லும் மாணவர்களுக்கு உதவ பலர் முன்வந்து உள்ளனர்.
உதவி அறிவிப்பு
கேரள மாநிலம் தமிழகத்துக்கு அருகில் இருந்தாலும் தேர்வு மையங்களை கண்டுபிடிப்பதில் தமிழக மாணவர்கள் சிரமப்படக்கூடாது என்பதற்காக கேரளாவில் வாழும் தமிழர்கள் பலரும் தமிழக மாணவர்களுக்கு உதவுவதாக அறிவித்துள்ளனர்.
பினராய் விஜயன் உத்தரவு
இந்நிலையில் நீட் தேர்வு எழுதவரும் தமிழக மாணவர்களுக்கு தேவையான உதவிகளை செய்யுமாறு கேரள அதிகாரிகளுக்கு அம்மாநில முதல்வர் பினராய் விஜயன் உத்தரவிட்டுள்ளார்.
நீட் தேர்வு எழுத கேரளா வரும் தமிழக மாணவர்களுக்கு உதவ முக்கிய பேருந்து நிலையங்கள், ரயில் நிலையங்களில் உதவி மையங்களை அமைக்க மாவட்ட ஆட்சியர்கள், காவல் கண்காணிப்பாளர்களுக்கு கேரள முதல்வர் பினராயி விஜயன் உத்தரவிட்டு உள்ளார். தமிழக மாணவர்களுக்கு தேவையான போக்குவரத்து மற்றும் தங்கும் வசதிகளை ஏற்படுத்தவும் உத்தரவிட்டு உள்ளார்.