மூணாறு நிலச்சரிவு- நேரில் பார்வையிட்ட பினராயி விஜயன் -நீதி கோரி தனி மனுஷியாக போராட்டம் நடத்திய கோமதி
மூணாறு: மூணாறில் 55 தமிழர்களை காவு கொண்ட நிலச்சரிவு பகுதியை அம்மாநில ஆளுநர் ஆரிப் முகமது கான், முதல்வர் பினராயி விஜயன் ஆகியோர் நேரில் பார்வையிட்டனர். அப்போது புதையுண்ட தமிழருக்கு நீதி கோரி தனி மனிதராக போராட்டம் நடத்திய செயற்பாட்டாளர் கோமதி கைது செய்யப்பட்டார்.
மூணாறு ராஜமலை அருகே பெட்டிமுடி எஸ்டேட் பகுதியில் 7 நாட்களுக்கு முன்னர் பயங்கர நிலச்சரிவு ஏற்பட்டது. இதில் தேயிலை தோட்டத்தில் பணிபுரிந்து வந்த 80-க்கும் மேற்பட்ட தமிழர்கள் மண்ணோடு மண்ணாக புதையுண்டு போயினர்.
இஸ்ரேல்- ஐக்கிய அரபு எமிரேட்ஸ் இடையே வரலாற்றுச் சிறப்புமிக்க அமைதி உடன்பாடு: டொனால்ட் டிரம்ப்
தமிழக தமிழர்கள்
இவர்களில் பெரும்பாலானோர் தமிழகத்தின் தூத்துக்குடி கயத்தாறு பகுதியைச் சேர்ந்தவர்கள். இதுவரை 55 பேரின் உடல்கள் மட்டும் மீட்கப்பட்டுள்ளன. தொடர்ந்து மீட்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதனால் தமிழக அரசியல் கட்சிகளும் இந்த பிரச்சனையில் கேரளா அரசுக்கு அழுத்தம் கொடுத்து வந்தன.
முதல்வர் மீது அதிருப்தி
ஆனால் மூணாறு நிலச்சரிவு மீட்புப் பணிகள், முதல்வர் பினராயி விஜயன் அறிவித்த நிவாரண அறிவிப்பு ஆகியவை பெரும் சர்ச்சையாகின. கோழிக்கோடு விமான விபத்தில் மீட்பு பணிகள் போர்க்கால அடிப்படையில் மேற்கொள்ளப்பட்டன. ஆனால் மூணாறில் மந்தகதியில்தான் மீட்பு பணிகள் 1 வாரமாக நடைபெறுகிறது என்பது புகார்.
நிவாரண அறிவிப்பில் பாகுபாடு
இதேபோல் கோழிக்கோடு விமான விபத்தில் பலியானோருக்கு ரூ10 லட்சம் நிவாரணம் அறிவிக்கப்பட்டது. ஆனால் மூணாறு நிலச்சரிவில் சிக்கி மாண்ட தமிழர் குடும்பங்களுக்கு ரூ5 லட்சம்தான் நிதி உதவி வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது. கேரளா அரசின் இந்த பாரபட்சமும் சர்ச்சையானது. இந்த நிலையில் 7 நாட்களுக்குப் பின்னர் மூணாறு நிலச்சரிவு பகுதிகளை பினாரயி விஜயன் இன்று பார்வையிட சென்றார். அவருடன் ஆளுநர் ஆரிப்கானும் சென்றார்.
தனிஆளாக போராட்டம்
அவர் அப்பகுதிக்கு சென்ற போது தமிழருக்கு நீதி கோரி தனி ஒருவரா சாலையில் தோட்ட தொழிலாளர்களின் செயற்பாட்டாளர் கோமதி போராட்டம் நடத்தினார். அவரை போலீசார் தடுத்து நிறுத்தி கைது செய்தனர். தமிழருக்கு நிலம் வழங்கி தனியே வீடுகள் கட்டித்தர வேண்டும் என்ற கோரிக்கையை கோமதி முன்வைத்திருந்தார்.
|
பினராயி விஜயன் அறிவிப்பு
இந்த நிலையில் நிலச்சரிவு பகுதிகளைப் பார்வையிட்ட முதல்வர் பினராயி விஜயன் செய்தியாளர்களிடம் பேசுகையில், பாதிக்கப்பட்ட தோட்ட தொழிலாளர்களுக்கு நிலம் வழங்கி தனி வீடுகள் கட்டித்தரப்படும் என்றார். மேலும் நிலச்சரிவில் உயிரிழந்தவர்களின் குழந்தைகளின் கல்வி செல்வை மாநில அரசு ஏற்கும் என்றும் பினராயி விஜயன் அறிவித்தார்.