முல்லை பெரியாறு குறுக்கே புதிய அணை: மேலும் 13 இடங்களில் கேரளா ஆய்வு நடத்தியது!!
தேனி: தமிழகத்தின் கடும் எதிர்ப்புக்கு இடையே முல்லை பெரியாறில் புதிய அணை கட்டுவதற்காக 13 இடங்களில் ஆய்வை கேரளா அரசு தொடர்ந்து நடத்தி முடித்துள்ளது.
முல்லை பெரியாறு அணை பலவீனமாக உள்ளதாக பொய் பிராச்சாரம் செய்து வரும் கேரளா அரசு புதிய அணை கட்டுவதற்கான முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. இந்த புதிய அணையின் ஆய்வுக்காக 28 இடங்கள் ஏற்கனவே தேர்வு செய்யப்பட்டன. அவற்றில் 15 இடங்களில் கடந்த 2007ம் ஆண்டு புதிய அணைக்கான முதற்கட்ட ஆய்வை கேரள அரசு நடத்தியது.
இதனையடுத்து மீதமுள்ள 13 இடங்களில் தற்போது ஆழ்துளைகள் போடப்பட்டு மண் மற்றும் பாறைகளின் மாதிரிகள் சேகரிக்கப்பட்டன.
இதற்காக முதற்கட்டமாக 20 அடி நீளமுள்ள ஐந்து குழாய்கள் 100 ஆழத்துக்கு பூமிக்குள் இறக்கப்பட்டு அந்த இடத்தின் மண் மாதிரிகள் சேகரிக்கப்பட்டன. 13 இடங்களில் சேகரிக்கப்பட்ட மண் மற்றும் பாறைகளின் மாதிரிகள் திருச்சூரில் உள்ள ஆய்வு மையத்துக்கு அனுப்பப்பட்டன
கேரளாவின் இந்த தொடர் முயற்சியால் முல்லை பெரியாறு பாசன விவசாயிகள் கடும் கொந்தளிப்படைந்துள்ளனர்.