ஜெ. உடல் நிலையில் முன்னேற்றம்... விரைவில் பணிகளைத் தொடர்வார்... கேரள கவர்னர் சதாசிவம் நம்பிக்கை
சென்னை: சென்னை அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வரும் தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் உடல் நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டு வருகிறது என்றும் விரைவில் பணிகளை தொடர்வார் என்றும் கேரள ஆளுநர் சதாசிவம் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
சென்னை அப்போலோ மருத்துவமனையில் கடந்த 18 நாட்களாக தமிழக முதல்வர் ஜெயலலிதா சிகிச்சை பெற்று வருகிறார். அவரது உடல் நிலை குறித்து விசாரிக்க பல்வேறு அரசியல் கட்சித் தலைவர் அப்போலோ வந்து மருத்துவக் குழுவிடமும், தமிழக அமைச்சர்களிடமும் விசாரித்து செல்கின்றனர். அந்த வகையில் இன்று கேரளாவின் கவர்னர் சதாசிவம் மற்றும் அம்மாநில முதல்வர் விஜயன் பினராய் ஆகிய இருவரும் சென்னை வந்துள்ளனர். அப்போலோ மருத்துவமனைக்கு சென்ற அவர்கள் இருவரும் மருத்துவக் குழுவிடம் ஜெயலலிதாவின் உடல் நிலை குறித்து விசாரித்தனர்.
பின்னர், அவர்கள் இருவரும் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது, தமிழக முதல்வர் உடல் நிலையில் முன்னேற்றம் அடைந்து வருவதாகவும், அவர் விரைவில் குணமடைந்து பணிகளைத் தொடர்வார் என்றும் கேரள கவர்னர் சதாசிவம் கூறினார். மேலும், நாங்கள் இருவரும் முதல்வரின் உடல் நலம் குறித்து விசாரிக்கவே இங்கு வந்தோம். அவரது உடல் நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டு வருவதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். அவர் விரைவில் குணமடைய பிராத்தனை செய்கிறேன் என்று விஜயன் பினராய் தெரிவித்தார்.