பவானி ஆற்றின் குறுக்கே புதிய தடுப்பணைகள் - கேரள அரசால் தமிழக விவசாயிகளுக்கு சிக்கல்
பவானி ஆற்றின் குறுக்கே புதிய தடுப்பணைகள் கட்டும் கேரள அரசு திட்டமிட்டிருப்பதால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்.
பவானி: காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கப்பட்டுவிட்டால், பவானி ஆற்றின் குறுக்கே தடுப்பணைகள் கட்டுவதில் சிக்கல் ஏற்படும் என்பதால், அதற்கு முன்பாக தடுப்பணைகள் கட்டிவிட வேண்டுமென்கிற முனைப்பில் கேரள அரசு செயல்பட்டு வருவதாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது.
பவானி ஆற்றின் குறுக்கே தேக்குவட்டை, மஞ்சகண்டி, சோலையூர், பாடவயல், தீரக்கடவு, சாவடியூர் ஆகிய ஆறு இடங்களில் தடுப்பணைகள் கட்டி நீரைத் தேக்க கேரள அரசு முடிவு செய்தது.
அப்படி கட்டினால், தமிழகத்தில் பவானி ஆற்றின் நீர்வரத்து குறைந்து திருப்பூர், ஈரோடு ஆகிய மாவட்டங்களில் விவசாய நிலங்களுக்கும், குடிநீருக்கும் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் ஏற்படும்.
கேரள அரசின் செயல்
எனவே, கேரள அரசின் இந்த முடிவைக் கைவிடக்கோரி பல்வேறு அரசியல் மற்றும் விவசாய இயக்கங்கள் சார்பில் தொடர்ந்து போராட்டம் நடத்தப்பட்டு வந்தது. ஆனால், இதைப் பொருட்படுத்தாமல், தேக்குவட்டை, மஞ்சகண்டி ஆகிய இடங்களில் பொதுப்பணித்துறையின் உதவியோடு கேரள அரசு தடுப்பணைகள் கட்டு முடித்தது.
புதிய தடுப்பணைகள்
இந்த தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் வழக்குத்தொடரப்பட்டுள்ளது. இந்நிலையில், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கப்பட்டுவிட்டால் கேரளாவில் புதிய தடுப்பணைகள் கட்ட முடியாது என்பதால், மேலாண்மை வாரியம் அமைவதற்குள் மீதம் இருக்கும் இடங்களில் தடுப்பணைகள் கட்ட கேரள அரசு தீவிரமாகச் செயல்பட்டு வருகிறது.
கோவையில் போராட்டம்
கடந்த சில நாட்களுக்கு முன்பு சோலையூர் பகுதியில் மூன்றாவது தடுப்பணை கட்டும் பணி தொடங்கியதைக் கண்டித்து, கோவையில் போராட்டம் நடந்தது. அனைத்து கட்சி சார்பில் தமிழக எல்லையான ஆனைகட்டிப் பகுதியில் முற்றுகைப்போராட்டமும் நடத்தப்பட்டது.இதற்கிடையே அடுத்தகட்டமாக திட்டமிட்ட இடத்தை விடுத்து அட்டப்பாடி அருகேயுள்ள ரெங்கநாதபுரம் பகுதியில் தடுப்பணை கட்ட முடிவு செய்யப்பட்ட பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
தமிழக அரசு நடவடிக்கை
இந்நிலையில், இந்த தடுப்பணைகள் கட்டப்பட்டால், வாழ்வாதாரம் பாதிக்கப்படும் என்பதால் தமிழக விவசாயிகளிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. இந்த விவகாரத்தில் தமிழக அரசு உடனடியாக தலையிட்டு தடுப்பணைகள் கட்டப்படுவதைத் தடுக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளனர்.