சென்னையில் ஒரு நம்பர் லாட்டரி விற்பனை அமோகம்; புதை குழியில் சிக்கும் தொழிலாளர்கள்
சென்னை: ஒரு நம்பர் லாட்டரி சீட்டு விற்பனை, ஆளும் கட்சி ஆதரவுடன் ஜோராய் நடந்து வருகிறது. ஆளும் கட்சியினர் தலையீட்டால், போலீசார் நடவடிக்கை எடுக்கத் தயங்கி வருவதாக புகார் எழுந்துள்ளது.
லாட்டரி சீட்டு விற்பனையால் ஏழை, எளிய கூலி தொழிலாளர்கள் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர்.
லாட்டரி சீட்டுகளுக்கு தமிழகத்தில், கடந்த பல ஆண்டுக்கு முன்னரே, தடை விதிக்கப்பட்டது. முதல்வர் ஜெயலலிதா அரசால் மேற்கொள்ளப்பட்ட, இந்த தடை உத்தரவு, பொதுமக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது.
தடை உத்தரவு அமல்படுத்தப்பட்ட கால கட்டத்தில், போலீஸாரும் தீவிரமாக லாட்டரி சீட்டு விற்பனையை கண்காணித்து, அவற்றை விற்றவர்களை கண்டுபிடித்து பறிமுதல், கைது நடவடிக்கையை மேற்கொண்டனர். இதனால் ஏழை, எளிய கூலி தொழிலாளர்கள், லாட்டரி மோகத்தில் இருந்து மாறினர்.
ஆனாலும், தமிழகத்தில் அங்கொன்று, இங்கொன்றுமாக லாட்டரி விற்பனை அவ்வப்போது தொடர்ந்தது. குறிப்பாக லாட்டரி சீட்டு விற்பனை தடைக்கு பின், ஒரு நம்பர் சுரண்டல் லாட்டரி விற்பனை, கேரளாவில் இருந்து வாங்கி வந்து, தமிழகத்தில் சென்னை, ஈரோடு உள்ளிட்ட நகரங்களில் அமோகமாக விற்பனையாகி வருகிறது.
சென்னையில் கனஜோர்
மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயில் குளம் - ஆர்.கே.மடம் சாலை பகுதிகளில் ஒரு நம்பர் லாட்டரி விற்பனை தினமும் கனஜோராக நடைபெற்று வருவதாக புகார் எழுந்துள்ளது. சின்ன பீடாகடை போல காணப்படும் கடைகளில்தான் இந்த ஒரு நம்பர் லாட்டரி சீட்டுக்கள் விற்பனை செய்யப்படுகின்றன.
நல்லநேரம், ரோஜா
இந்த ஒரு நம்பர் லாட்டரி சீட்டுக்கள் முன்பு இருந்த பழைய லாட்டரி சீட்டு போலவே, 'தங்கம், நல்ல நேரம், குமரன், குயில், ரோஜா, விஷ்ணு' என்ற பெயரில் விற்பனை செய்யப்படுகின்றனவாம்.
60 ரூபாய் முதல் 500 ரூபாய் வரை
60 ரூபாய், 100 ரூபாய், 200 ரூபாய், 400 ரூபாய், 500 ரூபாய் வரை லாட்டரிச்சீட்டுகள் விற்பனை செய்யப்படுகின்றன. ஒரு துண்டு சீட்டில் இந்த லாட்டரி சீட்டு பெயரையும் ஆறு நம்பரையும் தேதி போட்டு எழுதி கொடுக்கின்றனர். பரிசுத் தொகையும் ஒரு லட்சத்தில் இருந்து 15 லட்சம் ரூபாய் வரை உண்டாம்.
முதல்வர் வீட்டின் அருகில்
கோழிப்பண்ணை கிரவுண்ட், ஆலயம்மன் கோயில் முதல்வர் வீட்டுக்கு பின்புறம் இருக்கும் தேனாம்பேட்டை போயஸ் ரோடு ஆகிய பகுதிகளிலும் இந்த லாட்டரி சீட்டு வியாபாரம் நடத்தப்படுகிறதாம்.
இணையதள வழி வியாபாரம்
ஒரு நம்பர் லாட்டரிக்கு தலைமையகம் கேரளாதான் என்கின்றனர். இணையதளம் மூலமாகத்தான் இங்கே இந்தத் தொழில் நடக்கிறது. நம்பர் லாட்டரியில் கடைசி மூன்று எண்கள்தான் பரிசுக்கு உரியது. அதுபோல லாட்டரி சீட்டுகளிலும் ஆறு எண்கள் எழுதித்தருவார்கள். அந்த எண்களில் பரிசுக்குரிய எண்கள் மறுநாள் காலை பிரின்ட்-அவுட்டாக இவர்கள் வைத்திருப்பார்கள். அதைப் பார்த்து பரிசைத் தெரிந்துகொள்ளலாம்.
எஸ்.எம்.எஸ் மூலம் விற்பனை
சென்னையில் பல இடங்களில் இருந்து லாட்டரி சீட்டு வாங்க ஆட்கள் வருகிறார்கள். வெளியூர்களில் இருந்துகூட எஸ்.எம்.எஸ் முறையில் நம்பரை அனுப்பி லாட்டரி டிக்கெட், ஒரு நம்பர் சீட்டு எடுக்கிறார்கள் என்றும் கூறப்படுகிறது.
ஆளுங்கட்சி பிரமுகர்கள்
ஆளுங்கட்சி பிரமுகர் ஒருவர் எல்லாமுமாக இருந்து தொழிலை நடத்த உதவி செய்கிறாராம். தினமும் பல லட்சங்கள் புழங்கும் இந்தத் தொழிலில் எந்தப் பிரச்னையும் வராமல் இருக்க பல லட்சங்கள் மாதா மாதம் கைமாறுகிறதாம். மேலும் இதில் முக்கிய எதிர்க் கட்சி பிரமுகர்களுக்கும் கட்டிங் கிடைப்பதால் எந்தத்தடங்களும் இன்றி நம்பர் லட்டரி விற்பனை நடைபெறுகிறது.
ஈரோட்டிலும் விற்பனை
ஈரோடு மாநகரில் ஆட்டோ ஸ்டாண்ட்கள், மினி வேன், வேன், லாரி ஸ்டாண்ட்கள், சுமை தூக்குவோர் நடமாடும் பகுதிகளில், ஒரு நம்பர் லாட்டரி விற்பனை, தினமும் நடக்கிறது. ஈரோடு கருங்கல்பாளையம் கே.ஏ.எஸ்., நகர் மற்றும் காவிரிக்கரை முனியப்பன் கோவில் பகுதிகளில் இருந்து தான், மாநகரின் பல்வேறு பகுதிக்கும், பெருமளவில், ஒரு நம்பர் லாட்டரி சீட்டுகள் சப்ளையாகிறதாம்.
நடவடிக்கை எடுக்க தயக்கம்
பாதிக்கப்பட்டவர்கள், சமூக ஆர்வலர்கள், போலீஸ் அதிகாரிகளுக்கு, நேரடியாக இதுகுறித்து புகார் தெரிவித்தும், ஆளும் கட்சியினர் ஆதரவால் நடவடிக்கை எடுக்க தயங்குகின்றனர்.
அ.தி.மு.க., மாணவரணி முன்னாள் நிர்வாகி ஒருவர், ஒரு நம்பர் லாட்டரி விற்பனைக்கு மூளையாக இருந்து செயல்படுகிறார். அவருக்கு ஆதரவாக, முன்னாள் அமைச்சரின் விசுவாசிகளான, மாநகராட்சி ஆளும் கட்சி ஆளுமை நிறைந்த, மூவர் செயல்படுகின்றனர்.
முதல்வரின் நடவடிக்கை பாயுமா?
முதல்வர் ஆணையை மதிக்காமல், காற்றில் பறக்கவிட்டு, ஆளும் கட்சியினரே லாட்டரி சீட்டுகளை விற்பனை செய்வதால், லட்சக்கணக்கான அடித்தட்டு மக்கள், லாட்டரி புதைமணலில் மாட்டிக்கொண்டு தவிக்கின்றனர். எனவே காவல்துறையினர் மட்டுமின்றி, மாவட்ட நிர்வாகமும் கவனம் செலுத்தி, நடவடிக்கை எடுக்க வேண்டும், என்பது சமூக ஆர்வலர்களின் கோரிக்கையாகும்.