அனைவரையும் கட்டிப்போட்டு ஈர்த்த ஒரே படம்.. கேரளாவின் மாஸ் ஹீரோக்கள்!
கேரள மக்கள் மீனவர்களை அதிகமாக பாராட்டி வருகின்றனர்.
Recommended Video
சென்னை: ராணுவம், கடற்படை, விமானப்படை என எது வந்திருந்தாலும் சரி, எங்கள் மனதில் ஹீரோவாக உயர்ந்து நிற்பது இவர்கள்தான் என கேரள மக்கள் கை காட்டுவது மீனவர்களைதான்.
வரலாற்றிலேயே இவ்வளவு பெரிய அழிவையும், இழப்பையும் அம்மாநிலம் சந்தித்திருக்குமா என தெரியாது. ஆனாலும் உதவிக்கரங்கள், பெயர் தெரியாத மூலை முடுக்கில் இருந்து எல்லாம் நீண்டு வருகிறது. உதவியில் சிறியது ஏது, பெரியது ஏது, எல்லாமே மாண்பின் மகத்துவத்தை பொறுத்தது! மனசின் ஈரத்தை பொறுத்தது! அப்படித்தான் கேரள மாநிலமும் உலக மக்கள் பார்வையில் இன்று காணப்படுகிறது.
அப் டு டேட்
இந்த கேரள வெள்ளத்தில் பிரதான இடத்தை பிடித்தது சமூகவலைதளங்கள்தான். இவைகள் இல்லையென்றால் ஒரு மாநிலத்தின் அவலம் இந்த அளவுக்கு அரங்கேறி வலம் வந்திருக்குமா என தெரியாது. வெள்ள பாதிப்பு நிலவரம், தேவைப்படும் உதவிகள், மீட்பு நிலவரம், நிவாரண பணிகள், நிதியுதவி தொகைகள் என எல்லாவற்றையும் அப் டு டேட்டாகவும், அப்பட்டமாகவும் காட்டி வருகிறது சமூக வலைதளங்கள்தான்.
மாஸ் ஹீரோக்கள்
அப்படிப்பட்ட பல்வேறு வெள்ள தகவல்களின் மத்தியில் ஒரு நெகிழ்ச்சி தகவலும் மிதந்து வருகிறது. அது அம்மாநிலத்திலுள்ள மீனவர்களை பற்றிதான். கடல்தான் மூச்சு... கடல்தான் வாழ்க்கை.. கடல்தான் உலகமே என்றிருந்த மீனவர்கள்தான் இந்த வெள்ள மீட்பு பணியில் மாஸ் ஹீரோவாக உருவாகியுள்ளனர். இவர்களைதான் பாதிக்கப்பட்ட மக்கள் உட்பட எல்லோருமே தூக்கி வைத்து கொண்டாடி வருகின்றனர். வெள்ள மீட்புகளில் இவர்களின் உதவி சொல்லி மாளாது.
தோளோடு தோள்
ஒரு பக்கம், ஊர், உலகமே கோடிகளை ரூபாய்களாக கொட்டி கொடுத்து கொண்டிருக்கிறது, மற்றொருபுறம் பல்வேறு வகை பொட்டலங்கள் மூலம் மனிதாபிமானம் குவிந்து வருவதை கண்ட மீனவர்கள், தன் மக்களுக்காக எதையாவது செய்தே ஆக வேண்டும் என களம் காண புறப்பட்டனர். விளைவு, தங்களுக்கு சோறு போடும் தெய்வமாக நினைக்கும் சொந்த படகுகளை வெள்ளத்தில் இறக்கி விட்டனர். பாதிக்கப்பட்ட இடங்களில் மீட்பு நடவடிக்கைகளில் இறங்கிவிட்டனர். கடலோர காவல்படை மற்றும் மீட்பு படையினருக்கு தோளோடு தோள் கொடுத்தது இவர்கள்தான்.
ரூ.3000 தரப்படும்
தங்கள் படகுகள் மூலம் மக்களை வேகவேகமாக சென்று காப்பாற்றுகின்றனர். அதிலும் மக்களை ஈர்த்தது மீனவர்களின் அதிரடிதான். மீன்குட்டிக்கு நீந்த கற்றுத்தர வேண்டுமா என்ன? மீனவர்களுக்கு, வெள்ள நீரில் படகை விரைந்து செலுத்தி மக்களை மீட்க முடியாதா என்ன? மீனவர்களின் இந்த செயல் அம்மாநில முதல்வரையே ஈர்த்துவிட்டது. "எங்கள் சொத்து மீனவர்கள்தான் என்றும், அவர்களது சேவை கண்டிப்பாக அங்கீகரிக்கப்படும்" என்றார். ஆனால் முதல்வர் இத்தோடு நிறுத்தியிருந்தால் பரவாயில்லையே... மீனவர்கள் ஆற்றிய பணிக்கு அவர்களுக்கு பணம் வழங்கப்படும், அதுவும் 3000 ரூபாய் என என்று சொல்லிவிட்டார்.
காசுக்கா வந்தோம்?
முதல்வரின் இந்த வார்த்தைதான் மீனவர்களை மிகவும் புரட்டி போட்டது. யாருமே கூப்பிடாமல் தாங்களே மனமுவந்து தங்கள் சகோதர, சகோதரிகளுக்கு உதவ வந்தால், அதற்காக பணம் தருகிறேன் என்று முதலமைச்சர் சொன்னதை மீனவர்களால் தாங்கி கொள்ளவே முடியவில்லை.
"முதலமைச்சர் எங்களை பாராட்டினார், அது சந்தோஷமாக இருந்தது. பெருமையாகவும் இருந்தது. ஆனால் பணம் கொடுப்பேன் என்று கூறிவிட்டது எங்களுக்கு வலிக்கிறது. காசு கொடுப்பீங்கன்னு நெனச்சா வந்தோம், என் மக்கள் கஷ்டப்படறாங்களேன்னு நினைச்சுதானே வந்தோம்' என்ற மீனவர்களின் பதிலடி பேச்சு இன்னும் அனைவரையும் திகைக்கவே செய்கிறது.
|
கார்ட்டூன்களில் நன்றி
எல்லாவற்றையும் இழந்து தவிக்கும் நிலையில் கேரள மக்கள் இருந்தாலும், மீனவர்களின் இந்த உதவி அவர்களின் கண்களை விட்டு அகலவில்லை. அவர்களின் ஈடுபாடுகளுக்கு தங்கள் நன்றியை தெரிவிக்காமல் இருக்க முடியவில்லை. அதனால், மீனவர்களுக்கு ‘மாநிலத்தின் ஆர்மி' என்ற பெயர் சூட்டியுள்ளனர் மக்கள். தங்கள் நன்றிகளை சமூகவலைதளங்களில் பதிவிட்டு குதூகலிக்கின்றனர். "சூப்பர் ஹீரோஸ்" என்று புகழ்ந்து தள்ளுகின்றனர். ஒருசிலர் கார்ட்டூன்களை வரைந்தும் நன்றி கூறுகின்றனர்.
மகத்துவம் குறைவதில்லை
அதில் மிகவும் ஹைலைட்டானது ஒரு படம். செங்கனூரில் மீட்பு பணி முடிந்ததும், மீனவர்கள் லாரிகளில் படகுகளை ஏற்றிக் கொண்டு கிளம்பி செல்கின்றனர். அப்போது, வழிநெடுகிலும் பொதுமக்கள் நின்றுகொண்டு கண்ணீருடன் நன்றிகளை அந்த மீனவர்களுக்கு உரித்தாக்குகின்றனர். இந்த புகைப்படத்துக்குத்தான் ஏகபோக மவுசு. மனிதாபிமானம் என்றால் என்ன, நன்றி என்றால் என்ன அனைத்தையும் உணர்த்துவதாக உள்ளது இந்த ஒரே படம். எதிர்பாராத நேரத்தில் செய்த உதவிகளுக்கும், அதற்கான நன்றிகளை மறந்துவிடாமல் உடனடியாக காட்டும் பாங்கிற்கும் என்றுமே மகத்துவம் குறைவதில்லை என்பதற்கு உதாரணம்தான் இந்த படம்.