புற்றுநோயாளிகளை உருவாக்கும் கேரள ரப்பர் எஸ்டேட்கள் - பரிதவிக்கும் இலங்கை அகதிகள்
தென்காசி: நெல்லை மாவட்டத்திலிருந்து சற்று தொலைவில் இருக்கும் கேரளாவின் தென்மலை ரப்பர் எஸ்டேட்டுகளில் இலங்கை அகதிகள் அடிமையாக நடத்தப்படுவதும், பலரும் புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளதும் அதிர்ச்சியினை ஏற்படுத்தியுள்ளது.
கேரள மாநிலத்தின் கொல்லம் மாவட்டத்திற்கு உட்பட்ட ஆர்.பி.எல் ரப்பர் எஸ்டேட் மத்திய அரசிற்கு சொந்தமானது. இங்கு கிட்டதட்ட 5 ஆயிரம் ஏக்கரில் ரப்பர் மரங்கள் உள்ளன. இப்பகுதி செங்கோட்டையில் இருந்து 40 கிலோ மீட்டர் தூரத்தில் அமைந்துள்ளது.
இங்கு கடந்த 35 ஆண்டுகளுக்கு முன்பு இலங்கை அகதிகள் 650 குடும்பங்களாக வந்து தொழிலாளர்களாக வேலை பார்த்து வருகின்றனர். தற்போது இந்த குடும்பங்கள் பெருகி 1,500 தொழிலாளர்கள் வேலை செய்து வருகிறார்கள். சில ஆண்டுகளுக்கு முன்பு இருந்து கேரள மாநில அரசும், இதனை பராமரித்து வருகிறது. இந்த தொழிலாளர்களுக்கு தினமும் ரூபாய் 300 சம்பளம் வழங்கப்படுகிறது. இதில் இருந்து தான் பி.எப் போன்ற பிடித்தங்கள் பிடிக்கப்படுகின்றன.
இந்த சம்பளத்தில் தான் தொழிலாளர்கள் தங்களது குடும்பத்தை நடத்துகிறார்கள். ஒரு வீட்டிற்கு 2 பேர் மட்டும் தான் வேலை செய்ய முடியும். இது இந்த கம்பெனியின் விதி. இவர்களது வீடுகளுக்கு ஆஸ்பெஸ்டாஸ் ஷீட்டுகள் மேற்கூரையாக போடப்பட்டுள்ளது. இந்த சம்பளம் இவர்களது குடும்பத்திற்கு போதுமானதாக இல்லை. இவர்களது தேவைகளுக்காக யாரும் போராட முடியாத சூழ்நிலையில் உள்ளதாகவும், தாங்கள் அடிமை போல் நடத்தப்படுவதாகவும் இந்த பகுதியில் வாழும் இலங்கை அகதிகள் கூறுகின்றனர்.
இங்குள்ள தொழிலாளர்களுக்கு புற்று நோய் அதிகமாக வருகிறது என்று கூறப்படுகிறது. 35 சதவீதம் பேர் இந்த நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். இங்கு இறந்தவர்களில் பெரும்பாலானோர் புற்று நோயால் தான் இறந்துள்ளனர்.
இந்த நோய் ஆஸ்பெஸ்டாஸ் ஷீட்டுகளால் தான் வருகிறது என்கிறார்கள் ஒரு சிலர். வேறு சிலர் தொழிற்சாலையில் இருந்து வெளியேறும் கழிவு நீரால் வருகிறது என்கிறார்கள். ரப்பர் மரத்தில் இருந்து அதிக பால் எடுப்பதற்காக எத்திப்போன் என்ற ரசாயன மருந்து உபயோகிக்கப்படுகிறது. இது விஷத்தன்மை கொண்டதாகும். இதனால் கூட இந்த நோய் வரலாம் என்றும் கூறுகிறார்கள். ஆனால், இதற்கான சரியான காரணம் இன்னும் கண்டறியப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.