காணாமல் போன வேலூர் மாணவர் ஐஎஸ் இயக்கத்தில் சேர்ந்தது எப்படி?
வேலூரில் காணாமல் போன எம்.டெக் மாணவர் ஐஎஸ் பயங்கரவாத அமைப்பில் எப்படி சேர்ந்தார் என்பது குறித்து தெரியவந்துள்ளது.
வேலூர்: கேரளாவை சேர்ந்த வேலூர் கல்லூரி மாணவர் ஐஎஸ் பயங்கரவாத அமைப்பில் சேர்ந்துள்ளது குறித்த பரபரப்பான தகவல்கள் வெளியாகியுள்ளன.
கேரள மாநிலம், மலப்புரம் பகுதியைச் சேர்ந்தவர் அப்துல் நசீப். இவர் வேலூரில் உள்ள ஒரு கல்லூரியில் படித்து வந்தார். கடந்த ஆகஸ்ட் மாதம் முதல் வாரத்தில் விடுமுறையையொட்டி கேரள மாநிலத்துக்கு சொந்த ஊருக்கு சென்றார்.
பின்னர் விடுமுறை முடிந்து ஆகஸ்ட் 11-ஆம் தேதி தேதி மீண்டும் கல்லூரிக்கு செல்வதாக தனது குடும்பத்தாரிடம் தெரிவித்துவிட்டு புறப்பட்டு சென்றார். ஆனால் அவர் கல்லூரிக்கு வரவில்லை எனக் கூறப்படுகிறது.
மேலும் கடந்த சில நாட்களுக்கு முன்பு அப்துல் நசீப்பின் தாயாருக்கு தொலைபேசி ஒன்றில் இருந்து அழைப்பு வந்தது. அதில் பேசிய நபர் அப்துல் நசீப் ஐ.எஸ். இயக்கத்தில் சேர்ந்து விட்டதால் அவரைத் தேட வேண்டாம் என கூறிவிட்டு அந்த மர்மநபர் தொலைபேசி இணைப்பை துண்டித்துவிட்டாராம்.
இதனை தொடர்ந்து கேரள மாநிலம் மலப்புரம் காவல் துறை கண்காணிப்பாளர் தேபேஷ்குமாரிடம் மாணவனின் தாயார் புகார் அளித்துள்ளார். இதனை அடுத்து போலீஸார் விசாரணையில் ஈடுபட்டனர். அப்துல்நசீப் கடந்த ஆகஸ்ட் 11-ஆம் தேதி கேரளாவிலிருந்து புறப்படும் திருவனந்தபுரம்- ஹைதராபாத் விரைவு ரயிலில் பயணம் செய்துள்ளார்.
காட்பாடியில் இறங்க வேண்டிய அவர் ஹைதராபாத் வரை சென்று அங்கிருந்து விமானம் மூலம் ஈரானுக்கு சென்றுள்ளது விசாரணையில் தெரியவந்துள்ளது. மாணவர்களுக்கு வலைவிரித்து ஐ.எஸ். பயங்கரவாத அமைப்பில் சேர கேரளாவில் இருந்து பலர் ஈராக், சிரியா, ஈரான் உள்ளிட்ட நாடுகளுக்கு சென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.