பெண் வேடத்தில் அம்மனுக்கு நன்றி சொன்ன ஆண்கள் - கொற்றன்குளக்கரை சமய விளக்குத் திருவிழா
வேண்டுதலை நிறைவேற்றி தந்த அம்மனுக்காக ஆண்கள் பெண் வேடமிட்டு நன்றி செலுத்தும் விழா கடந்த 24, 25ஆம் தேதி கொற்றன்குளக்கரை பகவதி கோவிலில் நடைபெற்றது.
நெல்லை: கேரளாவில் உள்ள கொற்றன்குளக்கரை பகவதி அம்மன் கோவிலில் நடைபெற்ற சமய விளக்குத் திருவிழாவில் ஏராளமான ஆண்கள் பெண்கள் வேடமிட்டு அம்மனுக்கு நன்றி செலுத்தினர்.
பெண்கள் வேடமிட்ட ஆண்களின் கரங்களில் அன்னையின் அருளைபெற கரங்களில் தாம்பூல தட்டுக்களில் விளக்குக்களை ஏந்தி காண்போர் விழிகளை வியக்கவைக்கும் வண்ணம் வண்ண விளக்கொளிகளின் ஒளிசிதறல்கள் காண்போரை மெய் சிலிர்க்க வைக்கிறது.
வாழ்வில் தீராத பிணியையும்,தேவைகளையும் நிறைவேற்றித் தந்த அம்மனுக்கு நன்றி செலுத்தும் விதமாக, ஆண் பக்தர்கள் பெண் வேடமிட்டுக் கோவிலைச் சுற்றி வலம் வந்து விளக்கேற்றி வழிபடும் தலமாகக் கேரளாவில் கொல்லம் மாவட்டத்தில் அமைந்திருக்கும் கொற்றன்குளக்கரை பகவதி கோவில் திகழ்கிறது.
வரலாற்று சிறப்பு மிக்கதொரு ஆலயம் இங்குள்ளது இப்போதுதான் கேரளமாநிலத்திலேயே பிரசித்திபெற்று வருகிறது.
சமயவிளக்கு திருவிழா
இக்கோவிலில் வழிபடும் ஆண் பக்தர்கள் தங்கள் வேண்டுதல் நிறைவேறினால், சமயவிளக்குத் திருவிழாவின் போது, பெண் வேடமிட்டுக் கோவிலுக்கு வந்து விளக்கேற்றி வழிபட்டு நன்றி தெரிவிப்பதாக வேண்டிக் கொள்கின்றனர். சிலர் சமயவிளக்குத் திருநாட்களில் பெண் வேடமிட்டு வந்து வேண்டி வழிபடுவதும் உண்டு.
வரலாற்று சிறப்பு
இக்கோவிலின் பழங்கால வரலாற்றையும், சிறப்பையும் நினைவுபடுத்தும் விதமாக, ஒவ்வொரு ஆண்டும் குருத் தோலைப் பந்தல் விழா நடத்தப்படுகிறது. இந்த விழாவின் போது, ஆலயத்தின் பழங்காலக் கோவில் அமைப்பின் மாதிரி வடிவம் குருத்தோலைகளால் உருவாக்கப்பட்டு, பக்தர்களின் பார்வைக்காக வைக்கப்படுகிறது.
அம்மன் கோவில்
இக்குருத்தோலைப் பந்தல் விழாவின் போது, பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்து நின்று இறைவியை வழிபட்டுச் செல்கின்றனர். இந்த ஆலயத்தில், கேரளாவில் அனைத்து அம்மன் கோவில்களிலும் நடத்தப்படும் ஜீவதா எழுநல்லது' எனும் விழாவும் சிறப்பாகக் கொண்டாடப்பட்டு வருகிறது.
பங்குனி திருவிழா
இக்கோவிலில் ஆண்டுதோறும் மார்ச் மாதம் 24,25 ஆகிய தேதிகளில் இரண்டு நாட்கள் மலையாள நாட்காட்டியின் படி மீனம் தமிழ் பங்குனி மாதம் 10 மற்றும் 11 ஆகிய தேதிகளில் ‘சமயவிளக்கு' எனும் திருவிழா மிகச் சிறப்பாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. மலையாள மொழியில் ‘சமயம்' என்பதற்கு ‘ஒப்பனை' என்று பொருள். ஆண்கள்... பெண்களைப் போன்று ஒப்பனை செய்து கொண்டு விளக்கேற்றி வழிபடும் திருவிழா என்பதால், அது ‘சமயவிளக்குத் திருவிழா' என்று அழைக்கப்படுகிறது.
பெண்ணாக மாறிய ஆண்கள்
இவ்விழா நாட்களில் கொல்லம் மாவட்டத்தை சார்ந்தவர்கள் ஆண்டுக்கு ஐந்தாயிரத்துக்கும் அதிகமான ஆண்கள், பெண் போன்று வேடமிட்டுக் கோவிலைச் சுற்றி வந்து விளக்கேற்றி வழிபடுவதைக் வழக்கமாக கொண்டிருந்த கால கட்டத்தில் இப்போது இந்த ஆலயத்தின் புகழ் பலமாநிலங்களில் பரவி இலட்சக்கணக்கான மக்கள் திரண்டுவந்து தங்களது வேண்டுதலை நிறைவேற்றி சென்றவண்ணம் உள்ளனர்.
விடிய விடிய திருவிழா
இந்நாட்களில் சிறுவர்,சிறுமியர்கள் மட்டுமின்றி திருமணமான,திருமணமாகாத ஏராளமான ஆண்கள் பெண் போன்று, அவர்களது வயதுக்கேற்றபடி பல ஒப்பனைக் கலைஞர்களைக்கொண்டு தங்களை முழுமையாக வேண்டுதல் நாளில் மட்டும் பெண்களாகவே மாற்றி கொண்டு விடுகின்றனர்.
அன்னையின் அருள்
விடிய..விடிய நடக்கும் இந்த திருவிழா கடந்த 24, 25ஆம் தேதிகளில் நடைபெற்றது. இரவில் எங்கும் பெண்கள் வேடமிட்ட ஆண்களின் கரங்களில் அன்னையின் அருளைபெற கரங்களில் தாம்பூல தட்டுக்களில் விளக்குக்களை ஏந்தி காண்போர் விழிகளை வியக்கவைக்கும் வண்ணம் வண்ண விளக்கொளிகளின் ஒளிசிதறல்கள் காண்போரை மெய் சிலிர்க்க வைத்தது.
எப்படி செல்வது
கேரளா மாநிலம் மட்டுமின்றி வெளிநாடுகளில் இருந்தும் நியூசிலாந்து, லண்டன் உள்ளிட்ட பல நகரங்களில் இருந்தும் ஆண்கள் இந்த விழாவில் பங்கேற்றனர்.கேரளாமாநிலம் கொல்லத்திலிருந்து 12 கிலோமீட்டர் தொலைவில் அமைந்திருக்கும் இத்தலத்திற்குக் கொல்லம் மட்டுமின்றி மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து 100க்கும் அதிகமான பேருந்து வசதிகள் இருக்கின்றன.