சென்னையில் காவல் நிலையம் மீது மண்ணெண்ணை குண்டு வீச்சு
சென்னை தேனாம்பேட்டை காவல்நிலையத்தில் இன்று அதிகாலையில் மண்ணெண்ணை குண்டு வீசப்பட்டுள்ளது. இந்த சம்பவத்தில் யாருக்கும் காயமோ, பொருட்களுக்கு சேதமோ ஏற்படவில்லை.
இன்று அதிகாலை நான்கு மணியளவில் சென்னை அண்ணா சாலையில் அமைந்துள்ள E - 3 தேனாம்பேட்டை காவல்நிலையத்தில் இரு சக்கர வாகனத்தில் வந்த இருவர் மண்ணெண்ணை நிரப்பிய பாட்டிலில் தீ வைத்து காவல்நிலையம் முன்பாக தூக்கி ஏறிந்துவிட்டுச் சென்றதாக சொல்லப்படுகிறது.
காவல்நிலையத்தின் முன்பாக வைக்கப்பட்டுள்ள சிசிடிவி கேமராக்கள் வேலை செய்யவில்லை என்பதால் இந்த சம்பவத்தில் ஈடுபட்டவர்களை கண்டுபிடிப்பதில் சிரமம் ஏற்பட்டுள்ளது.
இந்த சம்பவம் குறித்து காவல் துறை ஆணையர் விஸ்வநாதன், நேரில் வந்து ஆய்வுசெய்தார். இந்த சம்பவத்தில் ஈடுபட்டவர்களைப் பிடிப்பதற்காக நான்கு தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன.
பாட்டில் வீசப்பட்ட இடம் தற்போது சுத்தப்படுத்தப்பட்டுள்ளது. இது குறித்து மேலதிகத் தகவல்கள் எதையும் தருவதற்கு காவல்துறையினர் மறுத்துவிட்டனர்.
சென்னையின் பிரதனமான பகுதியில் அமைந்திருக்கும் காவல் நிலையத்தில் நடந்திருக்கும் இந்த சம்பவம், பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
பிபிசியின் பிற செய்திகள்:
அன்னை தெரசாவின் சீரூடை சேலைக்கு பிராண்ட் அடையாளம்
துரத்தும் ஊழல் விசாரணை: கலங்கி நிற்கும் நவாஸ் ஷெரீப்
''சேரி பிஹேவியர் என்ற வார்த்தையை நான் காயத்ரிக்கு சொல்லிக்கொடுக்கவில்லை''