கருணாநிதிக்கு மகள்.. இளங்கோவனுக்கு பாட்டி.. குஷ்புவுக்குதான் எத்தனை டிமாண்ட்
சென்னை: கருணாநிதி தனக்கு தந்தை போன்றவர் என்று காங்கிரஸ் கட்சியின் அகில இந்திய செய்தித்தொடர்பாளர் குஷ்பு கூறியிருந்த நிலையில், அவர் தனது பாட்டி போன்றவர் என காங்கிரஸ் கட்சியின் தமிழ் மாநில தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் பொதுக்கூட்டம் ஒன்றில் தெரிவித்தார்.
ஈரோட்டில் கடந்த, 11ம் தேதி காங்கிரஸ் சார்பில் பொதுக்கூட்டம் நடந்தது. இதில் நடிகை குஷ்பு, மாநில தலைவர் இளங்கோவன் பங்கேற்றனர்.
குஷ்பு பேசும் போது, நான் ஈரோட்டின் மருமகள் என்றார். இதனால், தொண்டர்களுக்கு என்ன சொல்கிறார் என்பது புரியாமல் இருந்தது.
இளங்கோவன் பேச்சு
ஆனால், இதன்பிறகு ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் பேசியதுதான் டாப். குஷ்புவை தனது பாட்டி என்றாரே பார்க்கலாம். இதனால் கூட்டத்தில் பெரும் கரவொலி. ஆனால் எதற்கு அவ்வாறு சொன்னார் என புரியாமலே கைதட்டினர்.
பெரியார் மனைவி
இளங்கோவன் பேசியதாவது: குஷ்பு எனக்கு ஒரு வகையில் பாட்டி முறை ஆகிறார். பெரியார் திரைப்படத்தில் பெரியாராக நடிகர் சத்யராஜூம், அவரது மனைவி மணியம்மையாக குஷ்புவும் நடித்திருந்தார்.
ஒரே குடும்பம்
பெரியாரின் மனைவி என்றால் பெரியாரின் பேரனான எனக்கு குஷ்பு பாட்டி முறை தானே ஆகிறது?. நாம் ஒரு கூட்டமாக இல்லாமல் ஒரே குடும்பத்தை சார்ந்தவர்களாக பழகுவது தான் காங்கிரஸ் கட்சியின் சிறப்பாகும்.
பதவி தியாகம்
மக்களுக்காக தியாகம் செய்த ஒரே தலைவர் சோனியாகாந்தி. தன்னை தேடி பிரதமர் பதவியே வந்த போதிலும் அதை ஏற்க மறுத்த உன்னதமான தலைவர் சோனியா.
வெளிநாட்டுக்கார விமர்சனம்
அவரை வெளிநாட்டுக்காரர் எனக்கூறி எதிர்கட்சிகள் விமர்சனம் செய்த போதிலும், தனது கணவர், மாமியாரின் வழியில் இந்த நாட்டை காப்பாற்ற வேண்டும் என்பதற்காக அரசியலுக்கு வந்து இந்திய பெண்களின் மானம் காத்தவர். இவ்வாறு இளங்கோவன் பேசினார்.