காங்கிரசுக்கு அறிவுரை கூறும் குஷ்பு... கட்சி வளர்ச்சிகாக என்ன செய்துள்ளார்?
சென்னை: டெல்லி சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸ் படுதோல்வி அடைந்துள்ள நிலையில் அக்கட்சியின் செய்திதொடர்பாளரான குஷ்பு சொந்தக் கட்சிக்கே அறிவுரைகள் கூறியுள்ளார்.
அப்படி அவர் அறிவுரை கூறும் அளவுக்கு இதுவரை கட்சிக்காக குஷ்பு என்ன செய்திருக்கிறார் என ஆராய்ந்து பார்த்தோம் என்றால் ஒன்றுமில்லை என்பது தான் பதிலாக கிடைக்கிறது.
காங்கிரஸ் தோல்வி குறித்து பேசும் குஷ்பு, டெல்லியில் கடைசி இரண்டு நாட்கள் மட்டும் கடமைக்கு வந்து பிரச்சாரம் செய்ததாகவும், நட்சத்திரப் பேச்சாளர் பட்டியலில் அவர் பெயர் இடம்பெற்றும் வெளிநாட்டிற்கு பறந்துவிட்டதாகவும் கூறுகின்றனர் காங். நிர்வாகிகள்.
3 ராஜ்ய சபா எம்பி சீட்டு.. அதிமுகவில் இப்போதே கடும் போட்டி.. தேமுதிகவும் மல்லுகட்டுது!
தாவல்
குஷ்பு ஒரு காலத்தில் ஜெயலலிதாவின் அபிமானியாக வலம் வந்தவர். ஜெயா தொலைக்காட்சியில் அவர் தொகுத்து வழங்கிய ஜாக்பாட் நிகழ்ச்சி உள்ளிட்ட பல பேட்டிகளில் ஜெயலலிதாவின் புகழ் பாடியுள்ளார். ஆனால் அதிமுகவில் அதிகாரபூர்வமாக இணையவில்லை. ஒரு கட்டத்தில் ஜெயா தொலைக்காட்சி நிர்வாகத்திற்கும் குஷ்புவுக்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அந்த ஜாக்பாட் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிவிட்டார். பின்னர் சில மாதங்களிலேயே அப்போதைய திமுக தலைவர் கருணாநிதியை சந்தித்து திமுகவில் தன்னை இணைத்துக்கொண்டார்.
தாறுமாறு கருத்து
திமுகவில் இணைந்ததும் அக்கட்சிக்கு பிரச்சார பீரங்கியாக வலம் வந்தார். கடந்த 2014 நாடாளுமன்ற தேர்தல் வரை திமுகவில் இருந்தார். திமுக வேட்பாளர்களை ஆதரித்து 2011 சட்டமன்ற தேர்தல், 2014 மக்களவைத் தேர்தலில் பிரச்சாரம் செய்தார். பின்னர், கட்சியின் தலைமை பதவி குறித்து அவர் கருத்துக்கூறியது திமுகவில் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. திருச்சி பெமினா ஹோட்டலில் அவர் தங்கியிருந்த நிலையில் அங்கு அவர் முற்றுகையிடப்பட்டார். சென்னையில் உள்ள அவரது இல்லம் முன்பு திமுகவினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கட்சி விலகல்
பின்னர் திமுகவிலிருந்து விலகிய குஷ்பு சிறிது காலம் அமைதியாக இருந்தார். அவர் திமுகவில் இருந்து விலகிய போது, கடந்த 2014 மக்களவைத் தேர்தலில் தென் சென்னை எம்.பி.சீட் எதிர்பார்த்தார் அது கிடைக்கவில்லை என்பதால் விலகிவிட்டார் எனக் காரணம் கூறப்பட்டது. ஆனால் திமுகவில் இருந்து விலகியதற்கான காரணத்தை அவர் இதுவரை கூறவில்லை. இதனிடையே ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவராக இருந்தபோது குஷ்புவை காங்கிரஸ் கட்சிக்கு கொண்டு வந்தார். குஷ்புவின் கணவர் சுந்தர் சி ஈரோடு மாவட்டம் கோபியை சேர்ந்தவர். சொந்த ஊர் என்பதால் அவர் மூலம் குஷ்புவை தொடர்பு கொண்ட இளங்கோவன் தரப்பு குஷ்புவை காங்கிரஸில் இணைய வைத்தது.
முக்கிய பதவி
காங்கிரஸில் இணைந்த சில மாதங்களில் குஷ்புவுக்கு தேசிய செய்திதொடர்பாளர் பதவி கிடைத்தது. அந்தப் பதவியை பொறுத்தவரை காங்கிரஸில் மிக முக்கிய பதவி. ஆனால் அந்த பதவியை குஷ்பு முறையாக பயன்படுத்துகிறாரா என்றால் இல்லை. காங்கிரஸை கலங்கடித்து வரும் எந்த ஒரு விவகாரத்தை பற்றியும் அவர் வாயே திறந்ததில்லை. அவ்வப்போது ட்விட்டரில் மட்டும் 4 வரிகளை எழுதிவிட்டு தனது வேலைகளை கவனிக்க சென்றுவிடுவார். அண்மையில் நடைபெற்ற டெல்லி சட்டமன்ற தேர்தலில் கூட, நட்சத்திரப் பேச்சாளர் பட்டியலில் குஷ்பு பெயர் இடம்பெற்றும் அவர் வெளிநாடு சுற்றுலா சென்றுவிட்டார். தேர்தலுக்கு முந்தைய இரண்டு நாட்கள் மட்டும் மாலை நேரத்தில் பிரச்சாரம் செய்தார்.
என்ன செய்தார்?
காங்கிரஸ் செயல்பாடு பற்றி குஷ்பு ட்வீட்டரில் கருத்து பதிவிட்டுள்ளது பற்றி மகளிரணி நிர்வாகி ஒருவரிடம் பேசிய போது, குஷ்பு காங்கிரஸில் தான் இருக்கிறாரா? என்ற நைய்யாண்டியோடு தொடங்கிய அவர், குஷ்புவை வெளுத்துக்கட்டினார். அவர் கூறியதாவது,''இந்தம்மா இதுவரை சென்னையில் ஒரு பிரஸ்மீட்டாவது நடத்தி காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவாக குரல் கொடுத்துள்ளார்களா, பிரஸ்மீட் கூட வேண்டாம் கட்சி பொதுக்கூட்டம், ஆர்ப்பாட்டம், நிகழ்ச்சிகள் என அதிலும் அவர்கள் கலந்துகொள்ளமாட்டார். பேசினால் சோனியா காந்தியோடு மட்டும் தான் அவர் பேச வேண்டும் என இருக்கிறார். வருடத்தில் பாதி நாட்கள் வெளிநாடுகளில் வாழும் இவர் காங்கிரஸ் கட்சிக்கு அறிவுரை கூறுவதை ஏற்க இயலாது எனத் தெரிவித்தார்.