கக்கூஸ் ஆவணப்பட இயக்குநர் திவ்யாபாரதி மீது கடத்தல் புகார்
பெண்களை கடத்தியதாக கக்கூஸ் ஆவணப்படத்தை இயக்கிய திவ்யாபாரதி மீது கார்த்திகா தேவி என்பவர் புகார் அளித்துள்ளார்.
சென்னை: கக்கூஸ் ஆவணப்படத்தை இயக்கிய திவ்யாபாரதி மீது கார்த்திகா தேவி என்பவர் கடத்தல் புகார் அளித்துள்ளார்.
கல்லூரி மாணவி, துப்புரவு தொழிலாளி ஆகிய இரண்டு பேரை திவ்யாபாரதி கடத்தி விட்டதாக தென்மண்டல ஐஜி சைலேஸ்குமார் யாதவிடம் புகார் அளித்துள்ள கார்த்திகா தேவி குறிப்பிட்டுள்ளார்.
திண்டுக்கல் அண்ணா பல்கலைக்கழக உறுப்புக்கல்லூரியில் தினக்கூலி துப்புரவுப்பணியாளராக நான் உட்பட 12 பேர் பணிபுரிந்து கொண்டிருக்கிறோம். எங்களை மிரட்டி சக தொழிலாளர்களான தேக்கமலையும் அவர் மனைவியும் டீன் சித்திரைசெல்வி மீது ஆட்சியரிடம் புகார் கொடுக்க வைத்தார்கள்.
இதற்குப் பின்னால் 'கக்கூஸ்' படத்தை எடுத்தவரும், தீவிர கம்யூனிஸ்ட் இயக்கத்தைச் சேர்ந்தவருமான திவ்யபாரதி இருந்துள்ளார். இந்த உண்மையை பின்பு தெரிந்துகொண்டு நாங்கள் டீனிடம் மன்னிப்பு கேட்டு தற்போது கல்லூரியில் பணிபுரிந்து வருகிறோம்.
சம்பந்தப்பட்ட தேக்கமலையையும் அவர் மனைவியையும் கடத்தி வைத்துக்கொண்டு டீன் சித்திரை செல்விக்கு எதிராக அவதூறு பரப்பி வருகிறார்கள். இதுபற்றி நாங்களும் ரெட்டியார்சத்திரம் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளோம். எனவே, சமூகத்தில் குழப்பத்தை ஏற்படுத்தும் திவ்யபாரதி அவரது சகாக்கள்மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று கார்த்திகாதேவி புகார் மனு அளித்துள்ளார்.
கையால் மலம் அள்ளும் கொடுமை குறித்து கக்கூஸ் எனும் ஆவணப்படத்தைச் சமூக ஆர்வலர் திவ்யபாரதி அண்மையில் இயக்கி வெளியிட்டார். இதனைத் தொடர்ந்து, கடந்த 2009ம் ஆண்டு பதிவு செய்யப்பட்ட ஒரு வழக்கில் ஆஜராகாமல் இருந்ததால் போலீசாரால் அவர் கைது செய்யப்பட்டார்.
உடனடியாக அவருக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கப்பட்டது. இந்நிலையில், இயக்குநர் திவ்ய பாரதி, கக்கூஸ் ஆவணப்படத்தில் குறிப்பிட்ட ஒரு சமூகத்தை இழிவுப் படுத்தி காட்டியிருப்பதாகக் கூறி புதிய தமிழகம் கட்சியின் இளைஞர் அணி செயலாளர் வழக்கறிஞர் பாஸ்கரன் மதுரம் போலீசில் புகார் அளித்துள்ளார்.
இதனிடையே தனக்கு கொலை மிரட்டல் வருவதாகவும், பாஜக, புதிய தமிழகம் கட்சியினர் தொலைபேசியில் மிரட்டுவதாகவும் புகார் கூறியிருந்தார் திவ்யாபாரதி. இந்த நிலையில் திவ்யாபாரதி மீது கடத்தல் புகார் அளித்துள்ளார் கார்த்திகா தேவி.