நெல்லையில் மேலும் ஒரு ஆண் குழந்தை மீட்பு.. 2 பெண்கள் உட்பட 9 பேர் கைது.. 2 பேர் தலைமறைவு
ஆலங்குளத்தில் குழந்தையை கடத்தி விற்ற 2 பெண்கள் உட்பட 9 பேர் கைது செய்யப்பட்டனர். மேலும் தலைமறைவாகியுள்ள இருவரை போலீசார் தேடி வருகின்றனர். மீட்கப்பட்ட குழந்தை அரசு காப்பகத்தில் ஒப்படைக்கப்பட்டது.
நெல்லை: நெல்லை மாவட்டம் ஆலங்குளத்தில் குழந்தை கடத்தல் தொடர்பாக நேற்று முன்தினம் 7 பேர் கைது செய்யப்பட்ட நிலையில், தற்போது கடத்தல் கும்பலிடம் இருந்து விற்கப்பட்ட மற்றொரு ஆண் குழந்தை மீட்கப்பட்டது. இது தொடர்பாக 9 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 2 பேர் தலைமறைவு ஆகியுள்ளனர்.
குமரி மாவட்டம் மார்த்தாண்டம் கொடுங்குளத்தை சேர்ந்தவர் வில்சன் (49). இவரது மனைவி குமாரி (47). இவர்களுக்கு திருமணமாகி 20 ஆண்டுகளாகியும் குழந்தைகள் இல்லை. இதனால் தம்பதியினர் குழந்தையை தத்தெடுக்க முடிவு செய்தனர். அதன்படி ஈரோட்டிலிருந்து கொண்டு வரப்பட்ட ஆண் குழந்தையை 1-1-2௦16 அன்று ரூ. 2.15 லட்சம் கொடுத்து ஒரு கும்பலிடம் வாங்கினர். தத்தெடுக்க முறையான ஆவணம் இல்லாததால் குழந்தையை கொடுத்தவர்களிடம் வில்சன் அதற்கான ஆவணம் கேட்டுள்ளார். இந்த குழந்தை விற்பனை தொடர்பாக பணப்பிரச்சனை ஆலங்குளம் பஸ் நிலையம் எதிரில் உள்ள ஒரு ஓட்டலில் வைத்து நடந்துள்ளது.
இதில் அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது. இதனை கவனித்த சிலர் ஆலங்குளம் போலீசுக்கு தகவல் அளித்தனர். சம்பவ இடத்திற்கு ஆலங்குளம் இன்ஸ்பெக்டர் ஐயப்பன் ,எஸ் ஐ கார்த்திகேயன் மற்றும் போலீசார் அவர்களிடம் விசாரணை நடத்தினர். இதில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின. குழந்தையில்லாத தம்பதிகளை சில புரோக்கர்கள் அணுகி, குழந்தைகளை தத்தெடுத்து தருவதாக கூறி சில லட்சங்களை வாங்கி கொண்டு உரிய ஆவணம் இன்றி குழந்தைகளை விற்பனை செய்து வருவது தெரிய வந்தது.
அதே போலதான் வில்சன், குமாரி தம்பதியினரிடம் கீழபாவூரை சேர்ந்த மயில்ராஜ் ஈரோட்டை சேர்ந்த செல்வி என்பவர் மூலம் ஒரு பெண்ணிடம் ரூ.2.15 லட்சம் கொடுத்து ஆண் குழந்தை வாங்கி கொடுத்துள்ளனர். இது தொடர்பாக தத்தெடுத்தற்கு உரிய ஆவணம் கேட்கும் போது தான், இவர்களுக்குள் பிரச்சனையாகி ஓட்டலில் நடந்த பேச்சுவார்த்தையில் தகராறு ஏற்பட்டுள்ளது.
இதில் ஈரோட்டை சேர்ந்த சிவசக்தி என்பவரது மனைவி ப்ரியா (29), கன்னியாகுமரி ராமன்புதூரை சேர்ந்த ஜெரால்டு வில்லியம் ரோச் (53), விளவங்கோடு ராஜ்(54), கூடங்குளம் ராஜ் குமார்(39), ஈரோடு பெருமாள்சாமி மகன் சரவணகுமார்(28), அவரது மனைவி செல்வி, பாவூர்சத்திரம் அடைக்கலப்பட்டிணத்தை சேர்ந்த சிம்சோன் குமார் (37), நாமக்கல் கால் டாக்சி டிரைவர் ரவிச்சந்திரன்(40) நாங்குநேரி குணேசேகரன் ஆகிய 9 பேரை போலீசார் கைது செய்தனர். கீழபாவூரை சேர்ந்த மாடகன்னு மகன் மயில்ராஜ் (43), மேலமெஞ்ஞானபுரம் ஆத்தியப்பன் மகன் செல்வம் ஆகியோர் தலைமறைவானார்கள்.
வில்சன் தம்பதியிடம் விற்கப்பட்ட குழந்தையை மீட்டு மாவட்ட குழந்தை பாதுகாப்பு அலுவலர் தேவானந்த், தத்து மைய ஒருங்கிணைப்பாளர் முகமதி ஆகியோரிடம் இன்ஸ்பெக்டர் ஐயப்பன் ஒப்படைத்தார். இது குறித்து போலீஸ் தரப்பில் கூறபட்டதாவது " ஈரோடு முனிசிபல் காலனியை சேர்ந்த சரவணகுமார் மனைவி செல்வி (27) அங்குள்ள தனியார் மருத்துவமனைக்கு கரு முட்டை தானம் செய்யும் நபராகவும், கருமுட்டை தானம் செய்யும் பெண்கள் மற்றும் குடும்ப கட்டுபாடு செய்யும் பெண்களை அழைத்து சென்று அதற்கான கமிஷன் பெற்று கொள்ளும் ஏஜெண்டாகவும் இருந்துள்ளார்.
அதே போல கீழப்பாவூர் சேர்ந்த மயில்ராஜ் ஈரோட்டில் உள்ள தனியார் மில்லில் சில காலம் பணியாற்றி உள்ளார். அதே போல தனியார் மில்லுக்கு பெண்களை வேலைக்கு அனுப்பும் ஏஜெண்டாகவும் இருந்து வருகிறார். மார்த்தாண்டம் கொடுங்குளத்தை சேர்ந்த வில்சன் , குமாரி தம்பதிகள் குழந்தை இல்லாததால் பக்கத்து வீட்டில் உள்ள மேரி என்ற பெண்ணிடம் கூறியுள்ளனர். மேரியின் உறவினர் ரியல் எஸ்டேட் புரோக்கர் ஒருவர் மூலம் அவரது நண்பர்களான ரியல் எஸ்டேட் தொழில் செய்யும் ராஜ்குமார், குணசேகர், ஜெரால்டு வில்லியம் ரோச், ராஜ் ஆகியோருக்கு குழந்தை தத்தெடுப்பது தொடர்பான தகவல் வந்துள்ளது.
இதனையடுத்து கூடங்குளம் ராஜ்குமாருக்கு அவரது உறவினர் ரியல் எஸ்டேட் தொழில் செய்யும் அடைக்கலபட்டினம் சிம்சோன்குமார் மூலம் கீழப்பாவூர் மயில்ராஜ் அறிமுகமானார். அதன்படி ஏற்கனேவே ஈரோடு செல்வி அவரது தோழியான கரு முட்டை தானம் மற்றும் குடும்ப கட்டுப்பாடுக்கு பெண்களை அழைத்து செல்லும் ஏஜண்டாக உள்ள கிருபா என்பவர் ஒரு பெண் கர்ப்பமாக உள்ளதாகவும் குழந்தை பிறந்ததும் விலைக்கு பெற்று கொள்ளலாம் என கூறியதை மயில் ராஜிடம் செல்வி கூறியிருந்துள்ளர். மயில்ராஜ் குழந்தையை கொடுப்பதற்கு ஜெரால்டு வில்லியம் ரோச் மூலமாக வில்சனிடம் ரூ.2.75 லட்சம் என பேரம் பேசி முடிவில் ரூ.2.15 லட்சத்திற்கு குழந்தையை கொடுப்பதற்கு முடிவானது.
ஈரோட்டில் இருந்து செல்வி அவரது கணவர் சரவணகுமார், சிவசக்தி மனைவி பிரியா கால் டாக்சி டிரைவர் ரவிச்சந்திரன் ஆகியோர் குழந்தையுடன் 1-11-2016அன்று வந்துள்ளனர். ஆலங்குளம் அருகே உள்ள அடைக்கலபட்டினம் தனியார் மில் அருகே ..மயில்ராஜ் , செல்வம் உட்பட அனைத்து புரோக்கர்களும் கூடி முன்பு பேசிய பணத்தை விட அதிகம் கேட்டதால் குழந்தையை வாங்காமல் வில்சன் தனது ஊருக்கு திரும்பியுள்ளார். சிறிது நேரத்திற்கு பின்பு புரோக்கர்கள் அனைவரும் நாகர்கோயில் அழகியமண்டபம் முளகுமுடு பகுதியில் ஒன்றாக சென்று மீண்டும் பேரம் பேசி ரூ.2.15 லட்சம் வாங்கி கொண்டு குழந்தையை வில்சன் தம்பதியினரிடம் ஒப்படைத்துள்ளனர்.
இதனிடையே வாங்கிய பணத்தை புரோக்கர்கள் அனைவரும் பங்கு பிரித்தது போக ஈரோடு செல்வி தரப்பிற்கு சேரவேண்டிய பங்கு தொகையில் ரூ.60ஆயிரம் கொடுக்காமல் பாக்கி வைத்துள்ளனர். ஈரோட்டில் இருந்து செல்வி பணம் கேட்டும், வில்சன் குழந்தைக்கு உரிய ஆவணம் கேட்டும் மயில்ராஜை அடிக்கடி தொடர்பு கொண்டுள்ளனர். இதனால் கடந்த 6 ஆம் தேதி இருதரப்பையும் ஆலங்குளம் பஸ் நிலையம் எதிரில் உள்ள ஹோட்டல் வந்து பணத்தையும், குழந்தைக்கு உரிய ஆவணத்தையும் பெற்று கொள்ள மயில்ராஜ் கூறியுள்ளார். இதில் மயில்ராஜ், செல்வம் இருவரும் சம்பவ இடத்திற்கு வரவில்லை. ஆலங்குளம் வந்த இருதரப்பிற்கும் மீண்டும் தகராறு ஏற்பட்டுள்ளது அதில் சரவணகுமாரும், ரவிச்சந்திரனும் கூடுதல் பணம் தரவேண்டும் என்றும் தரவில்லை என்றால் கொலை செய்து விடுவோம் என்றும் மிரட்டியுள்ளனர். பிரச்னை நடைபெறுவதை காவல் நிலையத்திற்கு தகவல் வந்ததன் மூலம் அனைவரும் கைது செய்யபட்டனர். இதனால் தலைமறைவானார்கள். ஜெரால்டு வில்லியம் ரோச் களக்காடு பள்ளியில் ஆசிரியராக உள்ளார்.