இதை விட பெரிய வியாதி என்னங்க இருக்கு...!
சென்னை: பிடிவாதம்.. இதை விட பெரிய வியாதி எதுவும் இருக்க முடியாது. அதுவும் குழந்தைகளிடம் உள்ள பிடிவாதம் இருக்கே.. ஆனால் அதை எப்படி தவிர்ப்பது.. அதிலிருந்து அவர்களை மீட்பது என்பதில்தான் பெற்றோர்களின் திறமை இருக்கிறது.
குழந்தை பிறப்பதே வரம் என்றால் அக்குழந்தையைப் பிடிவாதம் பிடிக்காமல் வளர்ப்பது ஒரு தவம். பிறந்த குழந்தைக்கு அடம்பிடிக்கத் தெரியாது. நாளாக நாளாக அடம்பிடிக்கக் கற்றுக் கொள்கிறது. பிறந்து மூன்று மாதங்களே ஆன குழந்தை பிடிவாதம் பிடிக்கிறது என்றால் உங்களால் நம்ப முடிகிறதா. நம்பத்தான் வேண்டும். அழுகையை ஆயுதமாக்கித் தன் தாய் தன்னைத் தூக்க வேண்டும் என்று அடம்பிடிக்க ஆரம்பிக்கிறது.
இந்த உலகில் பிறக்கும் போது அவர்களுக்கு எதுவுமே தெரியாது.எல்லாமே புதிதாகத் தான் கற்றுக் கொள்கிறார்கள். அதனால் அவர்களைச் சமாளிப்பது அவ்வளவு எளிதல்ல. இன்றையக் காலக்கட்டத்தில் பெற்றோர்கள் குழந்தைகளை வளர்ப்பது என்பது அவ்வளவு சுலபமில்லை. ஆனால் பிடிவாதம் இல்லாமல் இருக்கும் குழந்தைகள் வாழ்வில் வெற்றியை அடைகிறார்கள்.
அடம் பிடிக்கும் குழந்தை
ஒரு குழந்தை இந்த பொருள் தான் வேண்டும் என்று அடம்பிடித்தால் அச்சமயம் குழந்தையின்அழுகையை நிறுத்த குழந்தையே அங்கே பார் இந்த பந்து ரொம்ப அழகா இருக்கே நம்ம ரெண்டு பேரும் விளையாடலாமா என்று குழந்தையின் கவனத்தை திசைத் திருப்ப முயற்சி செய்யுங்கள். உங்கள் குழந்தை படிக்கும் நேரத்தில் டி.வி பார்க்கப் பிடிவாதம் பிடித்தால் டிவியைப் பார்க்க அனுமதிக்காதீர்கள். ஒரு நாள் நீங்கள் உங்கள் பிடியைத் தளர்த்தினால் பின் அதுவே தொடர்கதையாகி விடும். எக்காரணம் கொண்டும் பிடிவாதம் பிடிக்கும் போது அடிக்காதீர்கள். அது அவர்களைத் தவறான பாதைக்கு இட்டுச் செல்லும்.
தீமையை எடுத்துரைங்க
உங்கள் குழந்தை கடையில் ஒரு பொருள் கேட்டால் நாளைக்கு வாங்கித் தரேன் என்று வாக்குறுதி அளிக்காதீர்கள். அப்பொருளை வாங்கித் தர விருப்பம் இல்லையென்றால் அவற்றின் தீமையைப் பற்றி எடுத்துரையுங்கள். குழந்தை எது கேட்டாலும் உடனே வாங்கிக் கொடுக்காதீர். பணம் இல்லையென்றால் இரண்டு நாட்கள் கழித்து வாங்கித் தருகிறேன் எனக் கூறுங்கள். அடிக்கடி குழந்தைகளுக்கு குடும்ப சூழலைப் புரிய வையுங்கள். பணத்தின் அருமையை அவர்களுக்கு உணர்த்துங்கள்.
நேரம் செலவிடுங்க
உங்கள் குழந்தையைப் பற்றி உங்களுக்குத்தான் நன்றாகத் தெரியும். தினமும் உங்கள் பிள்ளைகளுடன் நேரம் செலவிடுங்கள்.அவர்களிடம் தினமும் பேசி அவர்கள் மனதைப் புரிந்துக் கொள்ள முயற்சி செய்யுங்கள். இன்றுப் பல வீடுகளில் ஒரு குழந்தை தான் இருக்கிறது. கேட்டவுடன் எல்லாம் கையில் கிடைத்து விடும் என்ற நிலை.அப்படியிருக்கும் குழந்தைகளுக்குப் பகிர்ந்து விளையாடும் பண்பினை பெற்றோர்கள் தான் கற்றுத் தர வேண்டும்.
பிடித்த விஷயங்கள்
உங்கள் குழந்தை பிடிவாதம் பிடிக்காமல் இருக்க அவர்களுக்குப் பிடித்த விஷயங்களில் கவனத்தைத் திருப்புங்கள். உதாரணமாக வரைவது வண்ணம் தீட்டுவது போன்றவற்றில் அவர்களை திசை திருப்புங்கள். ஒருவர் குழந்தையின் பிடிவாதத்தைத் தடுக்க நினைக்கும் போது தாயோ அல்லது தந்தையோ அழாதே இங்கு வா நான் தருகிறேன் என்று ஆசை வார்த்தைகள் கூறக் கூடாது.
கண்டுக்காதீர்கள்
உங்கள் குழந்தை அழுது புரண்டு அடம்பிடிக்கிறதா. பரவாயில்லை அதைச் சிறிது நேரம் கண்டும் காணாமல் இருங்கள். நீங்கள் கவனிக்கவில்லையென உங்கள் குழந்தை தன்னால் பிடிவாதத்தை விட்டு விடும். எந்தக் குழந்தையும் நல்ல குழந்தைதான் மண்ணில் பிறக்கையிலே அது நல்லவராவதும் தீயவராவதும் அன்னை வளர்ப்பினிலே என்பார்கள். அது போல சிறு வயதில் குழந்தைகள் பிடிவாதம் செய்யும் போதே அவர்களை மாற்றாவிட்டால் பிற்காலத்தில் என் பையன் நான் சொன்னதைக் கேட்க மாட்டேன் என்கிறான் என்றுப் புலம்ப நேரிடும்.
பிடிவாதம் பிடிக்கும் குழந்தைகள் இனி உங்கள் முயற்சியால் பிடிவாதத்தை விடுத்து பார் போற்றும் குழந்தைகளாகி விடுவார்கள்.