அரசு பள்ளியில் படித்து ஐ.ஏ.எஸ் தேர்வில் சாதித்த வான்மதி!: கலெக்டர் ஆகும் கார் டிரைவரின் மகள்!!
ஈரோடு: யு.பி.எஸ்.சி தேர்வில் 152வது ரேங்க் பெற்று கலெக்டர் ஆகவேண்டும் என்ற தனது கனவை நனவாக்கியுள்ளார் சத்தியமங்கலம் வான்மதி. இவர் பொருளாதாராத்தில் பின்தங்கிய குடும்பத்தைச் சேர்ந்த கார் டிரைவரின் மகளாவார்.
ஈரோடு மாவட்டம் சத்திய மங்கலத்தைச் சேர்ந்தவர் சென்னியப்பன் என்கிற ராஜா. கார் டிரைவர். இவரது மனைவி சுப்புலட்சுமி. இந்த தம்பதியரின் மகள் வான்மதி (வயது 26), குடும்ப வறுமையிலும் முழு முயற்சியோடு படித்து ஐ.ஏ.எஸ் கனவை எட்டியுள்ளார்.
அரசு பள்ளியில் படித்து, தனியார் கல்லூரியில் பி.எஸ்.சி படித்த வான்மதி, கல்பனா என்ற ரிசர்வ் வங்கி அதிகாரி மூலம் சென்னையில் தனியார் ஐஏஎஸ் பயிற்சி மையத்தில் சேர்ந்தார். தீவிர பயிற்சிக்குப் பிறகு கடந்த 2011ம் ஆண்டு சிவில் சர்வீஸ் தேர்வெழுதினர். நேர்முகத்தேர்வு வரை சென்றவருக்கு வெற்றி கிடைக்கவில்லை. ஆனாலும், முயற்சியைக் கைவிடவில்லை. மூன்று முயற்சிகளுக்குப் பின்னர் வான்மதிக்கு வெற்றிக்கனி கைகூடியுள்ளது. சிவில் சர்வீஸ் தேர்வில் அகில இந்திய அளவில் 152வது ரேங்க் எடுத்து வெற்றி பெற்றுள்ளார்.
கல்லூரியில் கனவு
சிவில் சர்வீசஸ் தேர்வில் வெற்றிபெற்றது பற்றி செய்தியாளர்களிடம் பேசிய வான்மதி, கல்லூரியில் படிக்கும்போது தான் ஐஏஎஸ் ஆகவேண்டும் என்ற ஆசை எனக்கு ஏற்பட்டது. படித்து முடித்துவிட்டு ஐஏஎஸ் தேர்வுக்காக படிக்கப் போகிறேன் என்றதும் மற்ற பெற்றோரைப் போலவே எனது பெற்றோரும் யோசித்தனர். அதற்கு பொருளாதாரப் பிரச்சினைதான் முக்கிய காரணம். என்னால் ஐஏஎஸ் அதிகாரி ஆக முடியுமா என்ற சந்தேகம் அவர்களுக்கு ஏற்பட்டிருக்கலாம்.
அரசு பள்ளியில் மாணவி
எனது தந்தை சிறிய நிறுவனத்தில் கார் டிரைவாகப் பணிபுரிந்து வந்தார். படிக்கும்போது எங்களுக்கு குடிசை வீடுதான் இருந்தது. அந்த நிலையிலிருந்து குடும்ப நிலையை மாற்ற வேண்டுமானால் கல்வியால் மட்டுமே முடியும் என்ற நம்பிக்கையுடன் படித்தேன். ஆறாம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை அரசுப் பள்ளியில்தான் படித்தேன்.
4வது முயற்சியில் வெற்றி
பி.எஸ்சி. கம்ப்யூட்டர் தொழில்நுட்பமும், பகுதிநேரமாக எம்.சி.ஏ.வும் முடித்தேன். 2010ம் ஆண்டிலிருந்து குடிமைப்பணித் தேர்வு எழுதி வருகிறேன். முதல் முயற்சியில் நேர்முகத் தேர்வில் வெற்றி கை நழுவியது. இப்போது 4வது முயற்சியில் வெற்றி கிடைத்துள்ளது. மாணவர்களும், இளைஞர்களும் தங்களது இலக்கை தெளிவாக நிர்ணயித்துக்கொண்டு அதை நோக்கி உழைத்தால் நிச்சயம் வெற்றி கிடைக்கும் என்றார்.
தடைகாளை தாண்டலாம்
ஐஏஎஸ் தேர்வைப் பொருத்த வரையில், அனைத்துப் பாடங்களைப் பற்றிய அடிப்படை நமது அறிவை அவ்வப்போது கூர்மைப்படுத்தி வர வேண்டும். கடின உழைப்பும், விடாமுயற்சியும் இருந்தால் போதும், எந்த தடைகளையும் தாண்டிவிடலாம் என்கிறார் வான்மதி.
வங்கியில் அதிகாரி
கடந்த ஆண்டு வங்கி அதிகாரி தேர்வெழுதியதில் வெற்றிபெற்று தற்போது ஈரோடு நம்பியூரில் இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் உதவி மேலாளராக அவர் பணியாற்றி வருகிறார்.