பாப்பாக்கு பீட்சா பர்கர் வாங்கித் தர்றா அப்பாவா நீங்க.. அப்டீன்னா உடனே திருந்துங்க டாடி!
சென்னை: என் குழந்தைக்கு பீட்சா பர்கர் தான் பிடிக்கும் என்று பெருமைக் கொள்ளும் பெற்றோரா நீங்கள். அப்போ இந்த பதிவு உங்களுக்குத் தான்.
பிறக்கும் போது குழந்தைகளுக்குத் தாய்ப்பாலை விட வேறு எந்த சுவையும் தெரியாது. நாம் தான் சிறு வயதிலேயே சாக்லேட் முதல் பர்கர் வரை எல்லாம் வாங்கிக் கொடுத்துவிட்டு சில காலம் கழித்து அது உடலுக்கு உகந்தது அல்ல வாங்கித் தர இயலாது என்று நீங்கள் கூறினால் அக்குழந்தை அடம்பிடிக்கத் தான் செய்யும்.
நாம் வளர்ந்த காலத்தில் பீட்சாவும் பர்கருமா சாப்பிட்டு வளர்ந்தோம். கம்மங்கூழ் கேப்பங்கூழ் என்று சாப்பிட்டு நாம் வளர்ந்ததால் இன்று ஆரோக்கியமாக இருக்கிறோம். ஆனால் இன்றையக் குழந்தைகளுக்கு பாரம்பரிய உணவுகளையா தருகிறோம்.
தேன் மிட்டாய் எங்க போச்சு
நாகரிகம் என்ற பெயரில் பிறந்தநாள் கொண்டாட்டங்களுக்கு சாக்லேட் வாங்கித் தரும் நாம் ஏனோ வேர்க்கடலை மிட்டாய் எள்ளு மிட்டாய் தேன் மிட்டாய் போன்றவற்றை வாங்கித் தருவதில்லை. இன்றைய நவநாகரிக உலகில் குழந்தையின் ஸ்நாக்ஸ் பாக்ஸில் சிப்ஸ் பிஸ்கட் போன்ற உணவுகளைத் தான் காண முடிகிறது. என் குழந்தை இதை சாப்பிடாது அதைச் சாப்பிடாது என்றுக் கூறாமல் அக்குழந்தையைச் சாப்பிட வைப்பதற்கான வழியை நாம் தான் கண்டறிய வேண்டும்.
உணவே வலு
உணவு தான் உடலுக்கு வலுவூட்டுகிறது. அந்த உணவு ஆரோக்கியமாகவும் சுவையாகவும் மணமாகவும் இருந்தால் எல்லாக் குழந்தையும் சாப்பிடும். பாகற்காயும் கீரையும் குழந்தைகளுக்குக் கொடுக்கலாம். பாகற்காயைக் கூட கசப்புத் தெரியாமல் பிள்ளைகளுக்குச் சுவையாக செய்துக் கொடுக்கலாம். இன்றைய சூழலில் அனைவரும் நிற்பதற்குக் கூட நேரமில்லாமல் காலையில் இருந்து ஓடிக் கொண்டிருக்கிறோம்.
குழந்தைகள் ஆரோக்கியம்
உங்கள் குழந்தைகள் ஆரோக்கியமாக வளர பெற்றோர்கள் தான் முயற்சி செய்ய வேண்டும். வேலைக்குச் செல்லும் தாய்மார்களே உங்கள் குழந்தைக்குத் தினமும் பேரீச்சம்பழமும் நட்ஸ் வகைகளும் கொடுங்கள். சாப்பிட மாட்டேன் என்று அடம்பிடித்தால் அந்த உணவுகளின் நன்மையைக் கூறி சாப்பிடப் பழக்குங்கள். நோய் எதிர்ப்புச் சக்தி இல்லாத காரணத்தினால் தான் குழந்தைகள் அடிக்கடி நோய்வாய்ப்படுகின்றனர். அவர்களை அதிலிருந்துக் காக்க சத்தான உணவுப்பழக்கம் தேவை.
சாக்லேட் வேண்டாம்
ஐஸ்க்ரீம் மற்றும் சாக்லேட்டுகளை முடிந்த வரையில் தவிர்த்து விடுங்கள். சிறுதானிய வகைகளையும் உணவில் சேர்த்து விருந்துப் படையுங்கள் உங்கள் குடும்பத்தாருக்கு. வெளியில் சமோசா பீட்சா பர்கர் போன்றவற்றை வாங்கித் தராமல் கடலை மிட்டாய் தேன் மிட்டாய் பொரி உருண்டை போன்றவற்றை வாங்கிக் கொடுங்கள். அவர்களை சிறுவயதில் நாமே பழக்கி விட்டு இன்று அவர்களையே குறைக் கூறுவதில் என்ன நியாயம்.
நலன் முக்கியம்
சற்றுச் சிந்தியுங்கள் பெற்றோர்களே. அவர்களுக்காகத் தான் பெற்றோர்கள் ஓடி ஓடி உழைக்கின்றனர். ஓடி ஓடி உங்கள் பிள்ளைகளுக்காகப் பொருட்செல்வத்தை மட்டும் சேர்க்காமல் அவர்கள் உடல் நலனையும் பாதுகாத்திடுங்கள். குழந்தைகள் மென்மையானவர்கள். கண்ணாடிப் போன்றவர்கள். நாம் எதை விதைக்கிறோமோ அதைத் தான் அறுவடை செய்ய இயலும் என்றுப் புரிந்துக் கொள்ளுங்கள்