எலும்பை ஸ்டெம்ப்பாக்கி.. மண்டை ஓட்டை பந்தாக்கி.. சுடுகாட்டில் கிரிக்கெட் ஆடும் ‘பிதாமகன்கள்’!
நகரி: ஆந்திராவில் உள்ள சுடுகாடு ஒன்றில் கடந்த நாற்பது ஆண்டுகளாக வாழ்ந்து வரும் சுமார் 100 குடும்பங்களைச் சேர்ந்த குழந்தைகள் கல்வி வாசனையே இல்லாமல் வளர்ந்து வருவதாக அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது.
தேசிய விருது பெற்ற பாலாவின் ‘பிதாமகன்' படத்தைப் பார்த்திருப்பீர்கள். அதில், சுடுகாட்டில் பிறந்த குழந்தையான விக்ரம், அங்குள்ள சடலங்களுடனே தனது குழந்தைப் பருவத்தைக் கழிப்பார். இதனால், வெளி உலக தொடர்பே இல்லாமல் சராசரி மனிதர்களின் பழக்க வழக்கங்களுக்கு அப்பாற்பட்டு வாழ்க்கை நடத்துவார்.
திரையில் காட்டப்பட்ட இந்தக் கதை தற்போது ஆந்திரா அருகே உள்ள நெல்லூரில் நிஜமாகியுள்ளது. அதிலும், ஒரு குழந்தையல்ல சுமார் 300 குழந்தைகள் சுடுகாட்டிலேயே வாழ்ந்து வருவது தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
சமாதி தான் பெட்...
ஆந்திர மாநிலம் நெல்லூரில் உள்ள போடிகனிகுண்டா சுடுகாடு ஒன்றில் சுமார் 40 ஆண்டுகளுக்கு முன்னர் 100 தமிழ்க் குடும்பங்கள் குடியேறினர். சுடுகாட்டு வளாகத்திலேயே குடிசை போட்டு தங்கியுள்ள இவர்கள், சமாதிகளையே தங்களது படுக்கை அறைகளாக பயன்படுத்தி வருகின்றனர்.
மயான கிரிக்கெட்...
சிறிய ஊர் போன்று தோற்றமளிக்கும் இந்த சுடுகாட்டில் கிட்டத்தட்ட 300 குழந்தைகள் உள்ளனர். இவர்களுக்கு தேவையான கல்வியறிவு கிடைக்காததால், சுடுகாட்டில் உள்ள எலும்புகளை ஸ்டம்புகளாக்கி, மண்டை ஓடுகளை பந்துகளாக்கி இவர்கள் விளையாடுகின்றனர்.
புகார்...
இக்குழந்தைகளின் வாழ்க்கை முறை தொடர்பாக மாநில குழந்தைகள் உரிமை நல கமிஷனுக்கு சமூக ஆர்வலர்கள் சார்பில் புகார் அளிக்கப் பட்டது. அதைத் தொடர்ந்து போடிகனிகுண்டா சுடுகாட்டில் ஆய்வு மேற்கொண்டனர் அக்கமிஷனின் உறுப்பினர்கள்.
பயமறியா இளங்கன்றுகள்...
கல்வியின் நிழலே மேலே படாத இப்பிள்ளைகள் பிணம் எரிவதை கண்டு ஆர்ப்பரிப்பதும், சிதையில் இருந்து எகிறி எழும்பும் உடலை கட்டையால் அடித்து கிடத்துவதையும் எந்த பயமும் இல்லாமல் செய்து வருவதாக அக்குழந்தைகளை நேரில் கண்ட அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
தமிழ்க் குடும்பங்கள்...
மேலும், இதில் மற்றொரு அதிர்ச்சி என்னவென்றால் பிழைப்புக்காக நெல்லூர் வந்தவர்கள் தங்க இடம் கிடைக்காமல் தான் மயானத்தில் குடியேறியுள்ளனர். பின்னர், அதுவே பிடித்துப் போக 40 ஆண்டு காலமாக அங்கேயே வசித்து வருகின்றனர்.
பாலியல் தொழில்...
இங்குள்ள மக்கள் குப்பை காகிதங்களை பொறுக்கி விற்று வாழ்க்கை நடத்துகிறார்கள். மயானத்தில் இருப்பதால் இங்குள்ள பெண்களை யாரும் வீட்டு வேலைக்கு வைத்துக் கொள்வதில்லை. இதனால் வருமானத்துக்காக சில பெண்கள் பாலியல் தொழிலில் ஈடுபடுகிறார்களாம்.
வாக்கு வங்கிகள்...
ரேசன் கார்டு, ஆதார் அட்டை எதுவும் இல்லாத இவர்களுக்கு வாக்காளர் அடையாள அட்டை மட்டும் உள்ளது. வாக்குகளை பெறும் கருவிகளாக மட்டுமே இம்மக்கள் இதுவரைப் பயன் படுத்தப் பட்டு வந்துள்ளனர்.
நடவடிக்கை...
இங்கிருக்கும் குழந்தைகளை மீட்டு மறுவாழ்வு தர குழந்தை நல உரிமை இயக்கம் உரிய நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது.