காலையில் தினமும் கண் விழித்தாலே.. கை தொழும் தேவதை.. அம்மா இல்லிங்க.. செல்லு!
சென்னை: இன்றைய காலக்கட்டத்தில் குழந்தைகள் முதல் பெரியவர் வரை அனைவரும் சமூக வலைதளங்களைப் பயன்படுத்துகின்றனர்.
சமூக வலைதளங்களால் நன்மைகள் இருப்பினும் அதை விட தீமைகளே அதிகமாக இருக்கின்றன.
காலையில் விடியும் போது அனைவரும் கண் விழித்து முதலில் பார்ப்பது செல்போனைத் தான். சிறு வயதிலேயே குழந்தைகளும் செல்போனைப் பயன்படுத்துகின்றனர். சமூக வலைதளங்களை இரவில் அதிக நேரம் பயன்படுத்துவதால் கண்கள் சோர்வு அடைகிறது.
இரவு வெகு நேரம் விழித்திருப்பதால் உடலின் செயலியக்கம் மாறிப் போய் விடுகிறது. இதன் காரணமாக உடல் பருமன் தூக்கமின்மை அஜீரணம் போன்றவை ஏற்படுகின்றன.
உடனடி ஆபத்து
சமூக வலைதளங்களில் நம்முடைய படங்கள் மற்றும் வீடியோக்களைப் பதிவிட்டால் உங்களுக்கு நீங்களே ஆபத்தை உண்டாக்குகிறீர்கள் என்று அர்த்தம். இன்று சமூக வலைதளங்களில் நிறைய பொய்யான ஐ.டி க்கள் பயன்படுத்தப்படுகின்றன. சமூக வலைதளங்களில் இன்று சர்வசாதாரணமாக லைவ் வீடியோக்கள் பதிவிடப்படுகின்றன.
உடனே போடாதீங்க
உதாரணமாக நான் என் குடும்பத்துடன் பீச்சில் இருக்கிறேன் என்று நீங்கள் லைவ் வீடியோ பதிவிட்டீர்கள் என்றால் உங்கள் குழந்தைக்கான ஆபத்தை நீங்களே உருவாக்குகிறீர்கள் என்று அர்த்தம். ஆம் இன்றுக் குழந்தை கடத்தல் கும்பல் பலர் சமூக வலைதளங்களைப் பயன்படுத்துகிறார்கள்.
அதிக நேரம் சமூக வலைதளங்களைப் பயன்படுத்துவதால் கண்கள் பாதிப்பு அடைகிறது.
எல்லாவற்றையும் மறக்கிறோம்
நம்முடைய வேலைகளையெல்லாம் மறந்து சமூக வலைதளங்களிலேயே மூழ்கி விடுகிறோம். குழந்தைகளைக் கூடக் கவனிக்காமல் டிக்டாக் போன்ற ஆப்களை அதிகமாகப் பயன்படுத்துகின்றனர் பெற்றோர்கள். பொழுதுபோக்குக்காக சமூக வலைதளங்களைப் பயன்படுத்தும் நாம் நாளடைவில் அதற்கு அடிமையாகி விடுகிறோம். சிறுவயதிலேயே குழந்தைகள் சமூக வலைதளங்களைப் பயன்படுத்துவதால் அவர்கள் மனதளவில் பாதிப்படைகின்றனர்.
குழந்தைகளுடன் நேரம் செலவிடுங்க
பெற்றோர்களே சமூக வலைதளங்களைப் பயன்படுத்தும் நேரத்தைக் குறைத்துக் கொண்டு உங்கள் குழந்தைகளோடு நேரம் செலவிடுங்கள். இரவில் அதிக நேரம் கண் விழிக்காதீர். உங்கள் குழந்தைகளையும் சமூக வலைதளங்களைப் பயன்படுத்த அனுமதிக்காதீர்கள். பிள்ளைகளின் வாழ்வு சிறக்க சமூக வலைதளங்களில் செலவிடும் நேரங்களைக் குறைத்துக் கொள்ளுங்கள்.
அதை ஆப் பண்ணுங்க
கொஞ்சம் செல்போனின் நச்சரிப்பை அணைத்து கொஞ்சம் செடிகளின் நச்சரிப்பைக் கேட்போம் என்பது போல சமூக வலைதளங்களின் மூலம் வெளியுலகில் என்ன நடக்கிறது என்றுத் தெரிந்துக் கொள்ளும் நாம் நம்மைச் சுற்றியிருக்கும் பகுதிகளில் நடக்கும் நிகழ்வுகள் தெரிவதில்லை. சமூக வலைதளங்களின் பயன்பாட்டைக் குறைத்து உறவுகளிடம் அதிக நேரம் செலவழிக்கலாம்.