சபாஷ்.. நாராயணசாமியைப் பாராட்டிய மோடி.. ஆமா, கிரண் பேடி ஏன் இன்னும் பாராட்டலை??
Recommended Video
சென்னை: வேட்டியை மடித்துக் கட்டிக் கொண்டு கால்வாயில் இறங்கி, கழிவுநீரை சுத்தப்படுத்திய முதல்வர் நாராயணசாமியை பிரதமர் நரேந்திர மோடி பாராட்டியுள்ளது வரவேற்கக் கூடிய விஷயம். ஆனால் அந்த மாநிலத்தின் துணை நிலை ஆளுநராக உள்ள கிரண் பேடிதானே முதல் பாராட்டை தெரிவித்திருக்க வேண்டும்?
நெல்லித்தோப்பு நாராயணசாமியின் சொந்த தொகுதியாகும். அப்பகுதியில் தூய்மை பணியை தொடங்கி வைத்தார் நாராயணசாமி. அப்போது நெல்லித்தோப்பு மார்க்கெட் அருகே வாய்க்காலில் அடைப்பு ஏற்பட்டுள்ளதை முதல்வர் கவனித்தார்.
இதையடுத்து வாய்க்காலில் தானே இறங்கி குப்பைகளை அகற்றினார். தன்னுடைய வேட்டியை மடித்துக் கட்டிக் கொண்டு கால்வாயில் இறங்கி அடைப்புகளை நீக்கினார். ஒரு முதல்வர் சாக்கடைக்குள் இறங்கி சுத்தம் செய்ததை அனைவரும் பாராட்டினர்.
பாராட்டு
இதுகுறித்து பிரதமர் நரேந்திர மோடியும் தனது டுவிட்டர் பக்கத்தில் நாராயணசாமியை பாராட்டியுள்ளார். அதில் அவர் கூறுகையில் நாராயணசாமி அனைவருக்கும் முன்மாதிரியாகவும், எடுத்துக்காட்டாகவும் திகழ்கிறார். தூய்மை இந்தியா திட்டத்தை வலிமைப்படுத்துவதாக அவரது நடவடிக்கை அமைந்துள்ளதாக பாராட்டியுள்ளார்.
கிரண் பேடிக்கு இல்லை
நாராயணசாமி காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவராக இருந்த போதிலும் அவரை மோடி பாராட்டியது வரவேற்கத்தக்க விஷயமாகும். ஆனால் மோடிக்கு இருக்கும் பரந்த மனம் கிரண் பேடிக்கு இல்லையே என்று புதுச்சேரிக்காரர்கள் புலம்புகின்றனர்.
சகிப்புத்தன்மை
நமது வீட்டு கழிப்பறையை சுத்தம் செய்வதையே கேவலமாக கருதி ஆட்களை வைத்து சுத்தம் செய்வோர் மத்தியில் ஒரு ஆட்சி அதிகாரத்தில் உள்ள முதல்வர் சாக்கடைக்குள் இறங்கி சுத்தம் செய்துள்ளார் என்றால் அவரது சகிப்புத்தன்மையை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.
பிரதமரே பாராட்டினார்
புதுச்சேரி நிர்வாகத்தில் எப்போது பார்த்தாலும் தலையிடுபவர் ஆளுநர் கிரண் பேடி. ஆனால் நாராயணசாமியை அவர் முதல் ஆளாக பாராட்டவில்லை. மாறாக கண்டுக்காமல் விட்டு விட்டார். இவரும் மோடியின் கொள்கையை பின்பற்றுபவர்தானே. அவ்வப்போது நாராயணசாமி அரசை குறை கூறும் கிரண் பேடி தற்போது பிரதமரே பாராட்டியுள்ள சம்பவத்தை கண்டும் காணாமலும் இருப்பது ஏன் என்று மக்கள் கேட்கிறார்கள்..
ஈகோ
அரசு விழாக்களிலும் ரக்ஷாபந்தன் உள்ளிட்ட கலாசார விழாக்களிலும் மட்டும் போலியாக நாராயணசாமியுடன் கைகுலுக்கினால் போதுமா. ஒருவர் மீது எத்தகைய விமர்சனம் வைக்கிறோமே அந்த அளவுக்கு அவரது நல்ல செயல்களை பாராட்ட வேண்டும். இதெல்லாம் ஈகோ என்பதில்லாமல் வேறு என்ன சொல்வது? என்பது மக்களின் குற்றச்சாட்டாக உள்ளது.