அரிசி தர மாட்டேன் என்ற பேச்சுக்கு கடும் எதிர்ப்பு.. உத்தரவை திரும்பப் பெற்று கிரண் பேடி பல்டி!
சுத்தமான கிராமங்களுக்குதான் இலவச அரிசி என்ற உத்தரவை புதுச்சேரி ஆளுநர் கிரண் பேடி திரும்பப் பெற்றார். கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டதால், உத்தரவை அவர் திரும்பப் பெற்றார்.
புதுச்சேரி: சுத்தமான கிராமம் என்று சான்றிதழ் பெற்றால் மட்டுமே இலவச அரிசி வழங்கப்படும் என்ற உத்தரவை புதுச்சேரி ஆளுநர் கிரண்பேடி திரும்பப் பெற்றார்.
புதுச்சேரி துணை நிலை ஆளுநராக 2016 மே மாதம் கிரண்பேடி பொறுப்பேற்றார். முன்னாள் ஐபிஎஸ் அதிகாரியான கிரண்பேடியின் இந்த நியமனம் பெரும் வரவேற்பை பெற்றது. திஹார் ஜெயிலில் சீர்திருத்தம் கொண்டு வந்ததுபோல், புதுச்சேரியிலும் மாற்றம் வரும் என்ற எதிர்பார்ப்பு இருந்தது.
திடீரென்று ஆய்வு செய்வது என்று பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு திக்குமுக்காட வைத்தார் கிரண்பேடி. அந்த வரிசையில் கிராமங்களில் தூய்மைப் பணியை வலியுறுத்தும் வகையில் வறுமைக் கோட்டுக்கு கீழ் வசிக்கும் மக்களுக்கு வழங்கப்படும் இலவச அரிசி திட்டத்தில் புதிய கெடுபிடியை ஆளுநர் கிரண்பேடி கொண்டு வந்தார்.
சுத்தமான கிராமம் என சான்றிதழ் பெற்றால் மட்டுமே இலவச அரிசி வழங்கப்படும் என்று கிரண்பேடி உத்தரவிட்டார். சான்றிதழ் பெறாத கிராமங்களில் இலவச அரிசி வழங்கப்படாது என்று அவர் கூறினார்.
இந்த அறிவிப்புக்கு கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. திமுக செயல் தலைவர் ஸ்டாலின் உள்பட பல்வேறு கட்சித் தலைவர்கள் இந்த உத்தரவுக்கு கண்டனம் தெரிவித்தனர். மக்களும் தங்களுடைய அதிருப்தியை தெரிவித்தனர். அதையடுத்து, சுத்தமான கிராமம் சான்றிதழ் பெற்றால்தான் இலவச அரிசி வழங்கப்படும் என்ற உத்தரவை, புது்சசேரி ஆளுநர் கிரண்பேடி திரும்பப் பெற்றார்.