குழந்தை பசித்து அழுதால் கிரண்பேடியா வந்து சோறு ஊட்டுவார்.. ?
சுத்தமான கிராமம் என்ற சான்றிதழுக்கு மட்டுமே அரிசி என கிரண்பேடி தெரிவித்துள்ளார்,
-வந்தனா ரவீந்திரதாஸ்
சென்னை: சுத்தமான கிராமம் என்று சான்றிதழ் பெற்றால் மட்டுமே இலவச அரிசி என புதுச்சேரி ஆளுநர் கிரண்பேடி விசித்திர உத்தரவு போட்டிருக்கிறார்.
20 வருடங்களுக்கு முன்பு கிரண்பேடி என்றால் ஒரு நேர்மையான போலீஸ் அதிகாரி. தைரியமிக்கவர். அனைத்து தரப்பு இந்திய மக்களின் பாராட்டையும் நன்மதிப்பையும் பெற்றவர். ஏராளமானோர் தங்களது புருவங்களை உயர்த்தி பார்க்கும் வகையில் செயல்பட்டவர், லட்சக்கணக்கான பெண்களுக்கு உத்வேகம் அளிக்கக்கூடிய வகையில் ரோல்மாடலாக திகழ்ந்தவர். அவ்வளவு ஏன், 'வைஜெயந்தி ஐபிஎஸ்" என்ற விஜயசாந்தி நடித்த திரைப்படம் எடுத்ததே கிரண்பேடியின் அதிரடி மற்றும் அசத்தல் நடவடிக்கைகளை பார்த்துதான். அதனால் நாடே கிரண்பேடியை புகழ்ந்தது.
ஆனால் ஏன்தான் அவரை வியந்தோம்-புகழ்ந்தோம் என்று சொல்ல மக்கள் ஆரம்பித்துவிட்டனர் . எப்போது தெரியுமா? பாஜகவில் என்று இணைந்தாரோ அன்றிலிருந்துதான். பாஜகவை என்று திருப்திபடுத்த நினைத்தாரோ அன்றிலிருந்துதான். பணியின்போது மக்களிடம் பெற்ற அபரிமிதமான செல்வாக்கை வைத்துக் கொண்டு பாஜகவில் இணைந்தார். அங்கு புதுடில்லியில் முதலமைச்சராக பல வழிகளை கையாண்டார். ஒருவழியாக கெஜ்ரிவாலுக்கு எதிராக பாஜகவால் நிறுத்தப்பட்டார். கடைசியில் டெபாசிட்கூட வாங்க முடியாமல் முகத்தில் கரியை பூசிக் கொண்டார். பிறகு மத்திய பாஜக அவரை சமாதானப்படுத்தி புதுச்சேரிக்கு பொறுப்பு கொடுத்து அனுப்பியது.
மூக்கை நுழைப்பதே வேலையா?
அங்கு போய் சும்மா இருந்தாரா? மாநில அரசுக்கு எதிரான வேலைகளை செய்து, அவர்களை சீண்டிவிட துவங்கிவிட்டார். எங்கெல்லாம் பாஜக ஆட்சி நடக்கவில்லையோ அங்கெல்லாம் மத்திய அரசு 'விவரமான" ஆளுநர்களை தேர்ந்தெடுத்து அவர்களுக்கு "அசைன்மெண்ட்" கொடுத்து அனுப்புகிறது. தமிழக ஆளுநர் பன்வாரிஹாலும் சரி, கிரண்பேடியும் சரி, மாநில அரசின் செயல்பாடுகளில் மூக்கை நுழைப்பது, ஆளுநரின் வரைமுறைக்கு உட்பட்டு எதையும் செய்யாமல் மாநில ஆட்சியாளர்களுடன் மல்லுக்கட்டுவது, மத்திய அரசின் அதிகாரங்களை கொண்டு வந்து அவர்களது மாநிலங்களில் திணிப்பது, அதிரடி ஆய்வு என்ற பேரில் தன்னிச்சையாகவே செயல்படுவது என்று எல்லாமே ஒத்த செயல்களாகவே உள்ளன.
எல்லா அலப்பறைகளும் வீணா?
தூய்மை இந்தியா திட்டத்தை கொண்டு வந்தது இவர்கள்தானே? இந்த திட்டத்துக்கு எவ்வளவு விளம்பரங்கள், எவ்வளவு செலவுகள், எவ்வளவு அலப்பறைகள், எவ்வளவு விதவிதமாக போஸ் கொடுத்து போட்டோக்கள்... எல்லாம் இப்போ என்ன ஆயிற்று? அதுக்கு ஆன செலவையெல்லாம் மக்களுக்கு செலவழித்திருந்தால்கூட உங்கள் புதுச்சேரி மாநிலம் இரண்டு வருடங்களுக்கு முன்பே சுத்தமடைய தொடங்கியிருக்குமே? புதுச்சேரியில் என்ன ஆனது அந்த திட்டம்? ஊரை சுத்தம் செய்கிறேன் என்ற பெயரில் புதுச்சேரியில் பதவி ஏற்ற நாளிலிருந்து இவர் செய்கிற அலப்பறை ஊரறிந்த சங்கதி. வார இறுதிநாட்களில் சுத்தத்தின் அவசியத்தை வலியுறுத்த சைக்கிளில் விழிப்புணர்வு பயணம் மேற்கொண்டு வந்தாரே? அதெல்லாம் வீணா போயிற்றா என்ன?
அரிசிக்கு தடைபோடுவதா?
ஏழை மக்களின் இலவச உணவில்போய் கை வைக்க ஒரு பெண்மணிக்கு எப்படி மனம் வந்தது? புதுச்சேரியில் ஏழை மக்கள் மட்டும்தான் அசுத்தம் செய்கிறார்களா? வேறு ஒருவரும் செய்யவில்லை என்று கிரண்பேடியால் உறுதியாக சொல்ல முடியுமா? அப்படியே நல்லெண்ணத்துடன் சுத்தப்படுத்த வேண்டும் என்று நினைத்தாலும் பொதுமக்களின் ஒத்துழைப்பைதான் கேட்க வேண்டும். ஆதரவைதான் திரட்ட வேண்டும். விழிப்புணர்வைதான் மேற்கொள்ள வேண்டும். மக்களை வழிநடத்ததானே அரசாங்கம் உள்ளதே தவிர இப்படி மிரட்ட இல்லை என்பதுகூட ஒரு மாநில ஆளுநருக்கு தெரியாதா என்ன? புதுச்சேரியில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆட்சி நடந்துகொண்டிருக்கிறது. மாநில முதலமைச்சர், அமைச்சர்கள், எம்.எல்.ஏக்கள், உயர் அரசு அதிகாரிகள் என பல பேர் பொறுப்பிலும் உத்தரவு போடவும் இருக்க, இவர் யார் மக்களுக்கு வழங்கும் அரிசிக்கு தடை போட?
அழும் குழந்தைக்கு பதிலென்ன?
மாநில அரசுகள் செய்ய வேண்டியதையெல்லாம் ஆளுநர்களை விட்டு செய்ய சொல்லி அதிகாரம் வழங்கி, பதவியில் தூக்கி உட்கார வைத்தவர்களே.. அவர்களை சொல்லவேண்டும். இந்த வீரத்தையெல்லாம் லோக்பால் மசோதா அமைப்பதிலே போய் கிரண்பேடி காட்டவேண்டியதுதானே? அம்மா பசிக்கிறது என்று குழந்தை அழுதால், கொஞ்சம் பொறும்மா... அதிகாரிகள் சுத்தமான கிராமம் என்ற சான்றிதழ் வாங்கிவந்துடட்டும், அதுக்கப்பறம் நமக்கு அரிசி கொடுப்பாங்க, உனக்கு சோறு பொங்கி தருகிறேன் என்று ஒரு ஏழை தாயால் சொல்ல முடியுமா? அல்லது பசியால் அழும் குழந்தைக்கு கிரண்பேடிதான் வந்து பதிலளித்து சோறு ஊட்டுவாரா? விளம்பரத்திற்காகவும், புகழுக்காகவும் எதை வேண்டுமானாலும் செய்வதே கிரண்பேடிக்கு ஒரு வழக்கமாகி விட்டது. இவரை போய் ஒருகாலத்தில் தலையில் தூக்கி வைத்து கொண்டாடினோமே என்று வருத்தப்பட வேண்டியது. இதையெல்லாம் பார்த்தால் பிக்பாஸ் நிகழ்ச்சியில் வந்த ஜூலிதான் எனக்கு நினைவுக்கு வருகிறார்,
ஜூலியும்-கிரண்பேடியும் ஒன்றே
ஜல்லிக்கட்டு பிரச்சினையின்போது ஒரு வீடியோ முழக்கத்தை பார்த்து வீர தமிழச்சி, மறத்தமிழச்சி என தமிழர்கள் ஜூலியை தலையில் தூக்கி வைத்துக் கொண்டார்கள். பிறகு பிக்பாஸ் என்ற "ரியாலிட்டி"யில் அவரது "ஒரிஜினிலாட்டி" தெரிந்ததும், தூக்கி வைத்தவர்களே ஜூலியை நாறடித்து ஓய்ந்துவிட்டார்கள். அதுபோல் கிரண்பேடியும், ஒரு காலத்தில் தூக்கிவைத்து கொண்டாடியதை நினைத்து இப்போது ஒவ்வொரு தமிழனும் வெட்கப்பட்டுக் கூனிக்குறுகி கொண்டிருக்கிறான்.