உள்ளாட்சித் தேர்தல்: திமுக கூட்டணியில் கொ.ம.தே.க.- ஸ்டாலினுடன் ஈஸ்வரன் சந்திப்பு!
சென்னை: உள்ளாட்சித் தேர்தலில் திமுக கூட்டணியில் இடம்பெறுவது தொடர்பாக திமுக பொருளாளர் மு.க. ஸ்டாலினை கொங்கு நாடு மக்கள் தேசியக் கட்சியின் பொதுச்செயலர் ஈஸ்வரன் இன்று சந்தித்து பேசினார்.
உள்ளாட்சித் தேர்தலில் திமுக மெகா கூட்டணியை அமைக்க முயற்சித்து வருகிறது. திமுக கூட்டணியில் ஏற்கனவே காங்கிரஸ், இந்திய யூனியன் முஸ்லிம் லீக், மனிதநேய மக்கள் கட்சி, புதிய தமிழகம் ஆகியவை உள்ளன.
இந்த நிலையில் திடீரென ஸ்டாலினை தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் சந்தித்து பேசினார். இதையடுத்து திமுக கூட்டணியில் தமாகா இடம்பெறும் என்றும் வாசன் அறிவித்தார்.
அதே நாளில் திமுக தலைவர் கருணாநிதியை தமிழக காங்கிரஸ் கமிட்டித் தலைவர் திருநாவுக்கரசர் சந்தித்தார். அவரும் திமுக கூட்டணியில் காங்கிரஸ் நீடிக்கும் என்றார். இருந்தபோதும் திமுக-தமாகா கூட்டணி அமைத்தால் அந்த அணியில் இருக்கக் கூடாது என காங்கிரஸ் கட்சியில் கலகக் குரல் எழுந்துள்ளது.
இதனிடையே சென்னையில் மு.க.ஸ்டாலினை கொங்குநாடு மக்கள் தேசியக் கட்சியின் பொதுச்செயலர் ஈஸ்வரன் இன்று சந்தித்து பேசினார். இச்சந்திப்பின் போது உள்ளாட்சித் தேர்தலில் திமுக கூட்டணியில் கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சி இடம்பெறுவது குறித்து விவாதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.