76 ரவுடிகளை ஒரே நேரத்தில் கைது செய்த காவல்துறைக்கு பாராட்டுகள் : ஈஸ்வரன்
ரவுடியின் பிறந்தநாள் விழாவில் கூடிய 76 ரவுடிகளை கைது செய்த காவல்துறைக்கு ஈஸ்வரன் பாராட்டு தெரிவித்து உள்ளார்.
சென்னை : பல்வேறு வழக்குகளில் சம்பந்தப்பட்ட 76 ரவுடிகளை ஒரே இடத்தில் வைத்து கைது செய்த காவல்துறையினருக்கு கொங்குநாடு தேசிய மக்கள் கட்சியின் பொதுச்செயலாளர் ஈஸ்வரன் பாராட்டு தெரிவித்து உள்ளார்.
சென்னை சூளைமேட்டை சேர்ந்த ரவுடி பினுவின் பிறந்த நாளை சென்னை மாநகரம் முழுவதும் உள்ள ரவுடிகள் ஆட்டம் பாட்டத்துடன் மலையம்பாக்கத்தில் நேற்று கோலகலமாக கொண்டாடினர்.
இதனையறிந்த காவல்துறையினர், திட்டமிட்டு அங்கு கூடி இருந்த ரவுடிகளைக் கையும் களவுமாகப் பிடித்தனர். அவர்களில் பினு, கனகு, விக்கி ஆகிய மூன்று பேர் தப்பியோட 76 பேரை கையும் களவுமாக துப்பாக்கி முனையில் சுற்றி வளைத்தனர்.
காவல்துறையின் இந்த துணிச்சலான நடவடிக்கைக்கு பலரும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர். இதுகுறித்து கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் பொதுச்செயலாளர் ஈஸ்வரன் அறிக்கை ஒன்றை வெளியிட்டு உள்ளார்.
அந்த அறிக்கையில், நேற்று சென்னையில் பல்வேறு வழக்குகளில் சம்பந்தப்பட்ட 70க்கும் மேற்பட்ட ரவுடிகளை ஒரே இடத்தில் சுற்றிவளைத்து பிடித்த தமிழக காவல்துறைக்கு பாராட்டுக்கள்.
ரவுடி ஒருவரின் பிறந்தநாள் விழாவில் ஒன்றுக்கூடிய அனைத்து ரவுடிகளையும் காவல்துறையினர் திட்டமிட்டு கூண்டோடு கைது செய்திருக்கும் சம்பவத்தால் இந்திய அளவில் தமிழக காவல்துறையின் மதிப்பு உயர்ந்திருக்கிறது. கொலை, கொள்ளை போன்ற நிகழ்வுகள் அன்றாட செய்திகளாகிவிட்டன.
நகை பறிப்பு, ஆள் கடத்தல் உள்ளிட்ட சம்பவங்கள் பொது இடங்களில் சர்வசாதாரணமாக நடந்து வருகிறது. குற்றச்செயல்களில் ஈடுபடும் நபர்களின் மீது காவல்துறை தகுந்த நடவடிக்கை எடுத்தால் மட்டுமே வருகின்ற காலங்களில் குற்றங்களை முழுமையாக தடுக்க முடியும்.
பள்ளி, கல்லூரி செல்ல வேண்டிய மாணவர்கள் சிறுவயதிலேயே தவறான பாதையை தேர்ந்தெடுக்கும் சூழல் உருவாகி இருக்கிறது. ஆரம்பத்தில் திருட்டில் ஈடுபடுபவர்கள் நாளடைவில் கொலை குற்றங்களை செய்யவும் துணிகின்றனர்.
சிறு விஷயம் கூட தற்போது கொலையில் முடிகின்றன. இளைய சமுதாயத்தினரை நல்வழிப்படுத்துவதும், கொலை குற்றங்களில் ஈடுபடுவர்களின் மீது கடுமையான நடவடிக்கை எடுப்பதும் தமிழக அரசின் தலையாயக்கடமை.
தமிழகத்தில் கொலை குற்றங்களை முழுமையாக தடுக்க தமிழக காவல்துறையினர் தொடர் நடவடிக்கைகளில் ஈடுபடுவதோடு, குற்றம் செய்தவர்களுக்கு தக்க தண்டனையை பெற்று தரவும் முன்வர வேண்டும். ரவுடிகளை கைது செய்வதற்கு களமிறங்கிய காவல்துறையினர் அனைவருக்கும் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் சார்பாக வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறோம் என்று அந்த அறிக்கையில் குறிப்பிட்டு உள்ளார்.