வன்கொடுமை தடுப்பு சட்டம் மீதான தீர்ப்பு : விசிக ஆர்ப்பாட்டத்தை மறுபரிசீலனை செய்க- ஈஸ்வரன்
வன்கொடுமை தடுப்பு சட்டம் மீதான தீர்ப்பு : விசிக ஆர்ப்பாட்டத்தை மறுபரிசீலனை செய்க- ஈஸ்வரன்
சென்னை : வன்கொடுமை தடுப்புச் சட்டம் குறித்த உச்சநீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்புக்கு எதிரான விடுதலைச் சிறுத்தைகள் ஆர்ப்பாட்டத்தை மறுபரிசீலனை செய்யவேண்டும் என்று கொங்குநாடு மக்கள் தேசியக் கட்சி பொதுச்செயலாளர் ஈஸ்வரன் வலியுறுத்தியுள்ளார்.
தாழ்த்தப்பட்டோர் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழங்கப்படும் புகார்களிலும் விசாரணையின்றி கைது செய்யக் கூடாது என உச்சநீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது. இந்நிலையில், உச்சநீதிமன்றத்தின் இந்தத் தீர்ப்பு வன்கொடுமைச் சட்டத்தை பலவீனமாக்கும் வகையில் அமைந்துள்ளதாகவும அதுதொடர்பாக ஆர்பாட்டம் நடத்தவுள்ளதாகவும் விசிக தலைவர் திருமாவளவன் அறிவித்துள்ளார்.
இதுகுறித்து கொங்குநாடு தேசியமக்கள் கட்சித் தலைவர் ஈஸ்வரன் வெளியிட்டுள்ள அறிக்கையில், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர் ஆர்ப்பாட்ட அறிவிப்பை மறுபரிசீலனை செய்யவேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார்.
உச்சநீதிமன்றம் அறிவுரை
அந்த அறிக்கையில், வன்கொடுமை சட்டத்தில் எந்தவிதமான மாற்றத்தையும் செய்யாமல் அதை தவறாக பயன்படுத்துகின்ற முயற்சியை தடுப்பதற்காக உயர் அதிகாரிகளுடைய அனுமதியை பெற்று வழக்கு பதிய வேண்டுமென்று உச்சநீதிமன்றம் அளித்திருக்கின்ற தீர்ப்பு, சமூகத்தில் அமைதியை நிலைநாட்ட எடுத்திருக்கின்ற முயற்சி. இதை தாழ்த்தப்பட்ட சமுதாயத்தில் இருக்கின்ற அனைத்து மக்களும், மற்ற சமுதாய மக்களும் நன்கு அறிவர். கிராமப்புறங்களில் சமூகங்களுக்கு இடையே கலவரத்தை ஏற்படுத்துவதும், அமைதியின்மை உருவாக்குவதும் இந்த சட்டத்தை பயன்படுத்தி தனிப்பட்ட பகையை தீர்த்துக்கொள்ள முயற்சிப்பதுதான் பெரும்பாலும் சாதி கலவரங்களுக்கு காரணமாக இருந்து வருகிறது.
பணம் பறிக்க உதவி
இது தாழ்த்தப்பட்ட சமுதாயத்திற்கும், மற்ற சமுதாயங்களுக்கும் இடையிலான பிரச்சினை அல்ல. தனிப்பட்ட ஒரு சிலரின் சுயலாபத்திற்காக இந்த சட்டம் தவறாக பயன்படுத்தப்படுவதை தடுத்துதான் ஆக வேண்டும். சமூகத்தின் பெயரில் இயங்குகின்ற ஒரு சில அமைப்புகளும், ஒரு சில காவல்துறை அதிகாரிகளும் சேர்ந்து கொண்டு கூட பணம் பறிக்கின்ற முயற்சிகளுக்கு இந்த சட்டம் சில நேரங்களில் தவறாக பயன்படுத்தப்படுகிறது. இதுமாதிரியான சூழ்நிலைகளில் உயர்காவல்துறை அதிகாரிகள் கவனத்திற்கு கொண்டு செல்ல வேண்டுமென்ற நிலை இருந்தால் தவறுகள் தடுக்கப்பட வாய்ப்பிருக்கிறது.
காலத்தின் தேவை
இந்த சட்டம் தவறாக பயன்படுத்தப்படும் போது அதிகமாக பாதிப்புக்குள்ளாவது மற்ற சமூகங்களில் இருக்கின்ற ஏழை மக்கள்தான். சமூகத்தில் அடித்தட்டு நிலையில் இருக்கின்ற மற்ற சமுதாய மக்களுடைய ஜனநாயக உரிமையை, தனிமனித சுதந்திரத்தை பறிப்பதாக இது அமைகிறது. தலித் மக்களுடைய ஓட்டுகளை குறிவைத்து ஒரு சில அரசியல் கட்சிகள் அமைதி காக்கலாம், வாய்மூடி மவுனமாக இருக்கலாம். உச்சநீதிமன்றம் சரியான ஒரு தீர்ப்பை சமூகத்தில் நடக்கின்ற நிகழ்வுகளை நன்கு விசாரித்து சமூக அமைதிக்காக இக்காலக்கட்டத்தில் தேவை என்பதை உணர்ந்து இந்த தீர்ப்பை வழங்கி இருக்கிறது.
அனைத்து சமூக மக்கள்
உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு வன்கொடுமை தடுப்புச் சட்டத்தை நீர்த்துப்போக செய்ய கூடிய முயற்சி அல்ல. மற்ற சமூக மக்களுக்கும் தனிமனித உரிமை பறிபோய்விடக்கூடாது என்ற எண்ணத்தில் வழங்கப்பட்ட தீர்ப்பாகவே கருத வேண்டும். இந்த தீர்ப்பை எதிர்த்து விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் 28ம் தேதி ஆர்ப்பாட்டம் நடக்குமென்று அறிவிக்கப்பட்டிருக்கிறது. இந்த ஆர்ப்பாட்டம் தலித் மக்களை மற்ற அனைத்து சமுதாய மக்களுக்கும் எதிராக தூண்டிவிடுவதாகவும், தலித் மக்களும் மற்ற சமூக மக்களும் வேறுபாடுகளை எல்லாம் மறந்து கொஞ்சம்கொஞ்சமாக இயல்புநிலைக்கு திரும்பி கொண்டிருக்கின்ற சூழ்நிலையில் அதை தடுப்பதாகவும் இதுபோன்ற நிகழ்ச்சிகள் அமைந்து விடக்கூடாது.
ஆர்ப்பாட்ட முடிவு மறுபரிசீலனை
விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் மற்ற இன இளைஞர்களுக்கு எதிராக பேசப்பட்டதாக சொல்லப்படுகின்ற வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் பரவி மற்ற இன மக்களுக்கு வெறுப்பை ஏற்படுத்தியிருக்கிறது என்பதை அனைவரும் அறிவோம். அதனால் நடத்தப்படுகின்ற ஆர்ப்பாட்டமோ, அதில் பேசப்படுகின்ற பேச்சுக்களோ வன்முறையை தூண்டுகின்ற வகையில் இருக்குமானால் தமிழகத்தில் சமூகங்களுக்கு இடையே பகை உணர்ச்சியை உருவாக்குவதாக அமைந்துவிடும். இதையெல்லாம் கருத்தில் கொண்டு விடுதலை சிறுத்தைகள் கட்சி இப்படிப்பட்ட ஆர்ப்பாட்ட முடிவை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.