Exclusive: மத்திய அமைச்சர்களை பொம்மைகளாக வைத்துள்ளார் மோடி... தகிக்கும் கொங்கு ஈஸ்வரன்
சென்னை: மத்திய அமைச்சர்களை தனித்து செயல்படுவதற்கு பிரதமர் மோடி அனுமதிக்க வேண்டும் என்றும், தொழில்துறையில் ஏற்பட்டுள்ள வீழ்ச்சி அதலபாதாளத்திற்கு சென்று கொண்டிருப்பதாகவும் கூறுகிறார் கொங்கு நாடு மக்கள் தேசியக்கட்சி பொதுச்செயலாளர் ஈஸ்வரன்.
இதனிடையே பல்வேறு விவகாரங்கள் குறித்து ஒன் இந்தியா தமிழ் வாசகர்களுக்காக அவர் அளித்த பிரத்யேகப் பேட்டியின் விவரம் பின்வருமாறு;
கேள்வி: நீங்க நேரடி அரசியலுக்கு வந்து 10 ஆண்டுகளை நிறைவு செய்த நிலையில் எதை சாதித்துவிட்டீர்கள்?
பதில்: மேற்கு தமிழகத்தில் உள்ள மக்கள் குறிப்பாக விவசாயம் செய்பவர்கள், சிறு குறு தொழில் செய்பவர்கள் எதைப்பார்த்தாலும் அச்சப்படும் நிலையில் இருந்தார்கள். அரசியல்வாதிகளை பார்த்தால் பயம், காவல்துறையினரை பார்த்தால் பயம் என்றும் தான் உண்டு தன் பணி உண்டு என்று இருந்தார்கள். அப்படிப்பட்டவர்களை யாராவது சீண்டிப்பார்த்துக் கொண்டே இருந்தார்கள். ஆனால், நாங்கள் கட்சி தொடங்கிய பிறகு ஒவ்வொரு கிராமத்திலும் ஏதாவது ஒன்றென்றால் நமக்காக குரல் கொடுக்க கொங்குநாடு மக்கள் தேசியக் கட்சி இருக்கிறது என்ற தைரியத்தை அவர்களுக்கு கொடுத்திருக்கிறோம். இதை பெரிய வெற்றியாக கருதுகிறேன். ஒரு புகார் கொடுக்கக்கூட காவல்நிலையம் செல்ல தயங்கியவர்களுக்கு இன்று தைரியத்தை கொடுத்திருக்கிறோம். பொதுவாக சொல்லவேண்டும் என்றால் மேற்கு தமிழக மக்களின் மனதில் இடம்பிடித்து அவர்களின் நம்பிக்கையை பெற்றதே பெரிய சாதனை தான்.
கேள்வி: இப்போது உங்கள் கட்சிக்கு ஒரு எம்.பி. இருந்தாலும், கடந்த 10 ஆண்டுகளாக கொங்குநாடு மக்கள் தேசியக் கட்சி தொடர் தோல்வியை சந்தித்து வந்தது, அப்போதெல்லாம் விரக்தி அடைந்தது உண்டா?
பதில்: ஒன்றை புரிந்துகொள்ள வேண்டும், அரசியலில் வெற்றி தோல்வி இயல்பானது. வெற்றி பெறுவது மட்டுமே அரசியல் அங்கீகாரம் இல்லை. அரசியலில் இருப்பதே, செயல்படுவதே அரசியல் அங்கீகாரம் தான். என்னங்க இப்படி தோல்வியா வருதுன்னு என்னிடம் கூட பல பேர் கூறியிருக்கிறார்கள். ஆனால் தொடர்ந்து வெற்றிக்கான பயணத்தை தொடர்ந்தேன். இன்று ஒரு எம்.பி.(நாமக்கல் சின்ராஜ்) இருக்கிறார். ஊரக உள்ளாட்சித் தேர்தலில் மாவட்ட கவுன்சிலர்கள், ஒன்றியகவுன்சிலர்கள், ஊராட்சி தலைவர் என 400-க்கும் மேற்பட்டோர் எங்கள் கட்சியில் இருந்து வெற்றி பெற்றிருக்கிறார்கள்.
கேள்வி: கட்சி தொடங்கிய புதிதில் பாஜகவுடன் நெருக்கமாக இருந்த நீங்கள், திடீரென அதை விட்டு விலகி வந்ததற்கான காரணம்?
பதில்: எதார்த்தத்தை சொல்லவேண்டும் என்றால் தேர்தல் அரசியலில் வெற்றியை குறிவைத்து தான் செயல்பட முடியும். கடந்த 2014-ம் ஆண்டு மோடி பிரதமராக நானும் பிரச்சாரம் செய்தேன். இல்லையென்று சொல்லவில்லை, ஆனால் அவர் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றினாரா என்பது தான் கேள்வி. நதிகளை இணைப்போம் என்றார், தொழில்துறையை வளர்ச்சி அடையச் செய்வோம் என்றார், இந்திய பொருளாதாரத்தை உயர்த்துவோம் என்றார், விவசாயத்தை வளர்ச்சி அடையச் செய்வோம் என்றார், ஆனால் இது எதுவுமே நடக்கவில்லையே. எங்கே எப்படியோ எனக்குத் தெரியாது, திருப்பூர், ஈரோடு, கோவை, நாமக்கல், திருச்செங்கோடு பகுதிகளில் அனைத்துத் தொழில்களும் தொய்வடைந்தன. இதனால் பாஜக மீது மக்களுக்கு ஒரு வெறுப்பும், எரிச்சலும் ஏற்பட்டது. 2014 தேர்தல் பிரச்சாரத்தில் மட்டுமே வளர்ச்சி என்ற வார்த்தையை பாஜக பயன்படுத்தியது. அதற்கு பிறகு பார்த்தீர்கள் என்றால், பொருளாதார வளர்ச்சியை பற்றி அவர்கள் யாருமே கவலைப்படவில்லை.
கேள்வி: நீங்கள் கூறும் புகார்களுக்கு என்ன காரணமாக இருக்கும் எனக் கருதுகிறீர்கள்?
பதில்: மத்திய அமைச்சர்கள் யாரும் தனித்து செயல்படவில்லை, இதுதான் உண்மை. மத்திய அமைச்சர்கள் தனித்து இயங்கி ஒரு முடிவெடுக்கக்கூடிய சூழல் இப்போது இல்லை. பொருளாதார வீழ்ச்சிக்கு இதுவும் ஒரு முக்கிய காரணம். இந்தியாவில் 2017-ம் முதல் பொருளாதார வீழ்ச்சி தொடங்கியது, அப்போதே இதை கவனித்தில் கொண்டு சீர்செய்திருக்க வேண்டும். முந்தைய பாஜக அரசில் ஸ்மிருதி ராணி அவர்கள் தான் ஜவுளித்துறை அமைச்சராக இருந்தார், அப்போது ஜவுளித்துறை சொல்லிக்கொள்ளும் படி வளர்ச்சிப்பாதையில் செல்லவில்லை. சரிவை நோக்கித்தான் சென்றது. இப்போது மீண்டும் அவருக்கே ஜவுளித்துறையை கொடுத்தால் அந்ததுறை எப்படி வளர்ச்சியடையக்கூடும். பிரதமர் ஒவ்வொரு மத்திய அமைச்சரையும் அழைத்து உங்கள் துறையில் இந்த அளவுக்கு வளர்ச்சி வேண்டும் என இலக்கு நிர்ணயித்து அவர்கள் செயல்பட சுதந்திரம் வழங்கினால் மட்டுமே வளர்ச்சி வரும்.
கேள்வி: திமுகவுடனான கூட்டணி உறவு எப்படி இருக்கிறது?
பதில்: திமுகவுடனான கூட்டணி நல்ல முறையில் இருக்கிறது. கடந்த 2011-ல் திமுகவுடன் கூட்டணி அமைத்து கொங்குநாடு மக்கள் தேசியக்கட்சி போட்டியிட்டது. அதன்பிறகு கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் கூட்டணியாக போட்டியிட்டோம். எங்களுக்கு உரிய மரியாதையை திமுக தருகிறது. அதில் எந்த குறையும் இல்லை.
கேள்வி: அமைச்சர் தங்கமணிக்கும் உங்களுக்கும் என்ன பிரச்சனை.. மேடைகளில் கருத்து மோதல் அதிகம் நடக்கிறதே?
பதில்: இப்ப நாங்க திமுக கூட்டணியில் இருப்பதால், அண்ணா திமுக காரர்கள் எங்களை தாக்கி தான் பேசுவார்கள். இதில் என்ன ஆச்சரியம் உள்ளது. தாக்கி பேசவில்லை என்றால் யார் தான் வளர முடியும். அரசியல் ரீதியாக அவருக்கும் எங்களுக்கும் கருத்து மோதல்கள் வரும். மற்றபடி அமைச்சர் தங்கமணிக்கும் எனக்கும் எந்தப் பிரச்சனையுமில்லை. நாங்கள் எந்த தனி நபருக்கும் எதிரானவர்கள் அல்ல.
கேள்வி: தமிழக அரசின் செயல்பாடுகளை பற்றிய உங்கள் பார்வை என்ன?
பதில்: தமிழக அரசின் செல்பாட்டை பிளஸ், மைனஸ் என இரண்டாக பிரிக்கலாம். முதலில் பிளஸ் என பார்த்தால் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை யார் வேண்டுமானாலும் எளிதாக சந்திக்க முடிகிறது. அரசியல் கட்சித் தலைவர்களோ, அதிகாரிகளோ உடனடியாக முதல்வரை சந்திக்கமுடிகிறது. அதேபோல் உடனடியாக கோப்புகள் கையெழுத்தாகிறது. ஜெயலலிதா இருந்தபோது கூட மாதக்கணக்கில் கோப்புகள் கையெழுத்தாகாமல் கிடப்பில் இருக்கும். அதேநேரத்தில் மைனஸ் எனப் பார்த்தால், அதிமுகவில் இன்னும் யாரும் மாஸ்லீடர் உருவாகாததால் அச்சத்துடனேயே ஆட்சியை நடத்துகிறார்கள். தெரிந்தோ தெரியாமலோ எதற்கெடுத்தாலும் டெல்லியை கேட்டு செயல்பட வேண்டிய கட்டாயத்திற்கு அதிமுக ஆட்சி தள்ளப்பட்டுள்ளது. குடியுரிமைச் சட்டத்தில் அதிமுகவில் உள்ள பலருக்கும் உடன்பாடில்லை, ஏன் முதல்வருக்கே கூட அந்தச் சட்டத்தில் உடன்பாடு உள்ளதா என்பது சந்தேகமே. தொழில்வளர்ச்சி பெருகியுள்ளதாக தமிழக அரசு கூறுகிறது, ஆனால் வேலைவாய்ப்பை உருவாக்கவில்லை. தமிழகத்தில் எந்த வளர்ச்சியும் இல்லை என்பது தான் உண்மை.