கோவில்களை இடிக்க வேண்டும் என்று திருமாவளவன் பேசுவதா?- கொந்தளிக்கும் கொ.ம.தே.க ஈஸ்வரன்
கோவில்கள் இடிப்பது குறித்து திருமாவளவன் பேசி இருப்பது வருத்தம் அளிப்பதாக ஈஸ்வரன் தெரிவித்து உள்ளார்.
சென்னை : கோவில்களை இடித்து விட்டு புத்தவிகார்கள் கட்ட வேண்டும் என்று திருமாவளவன் பேசி இருப்பது வருத்தம் அளிப்பதாக உள்ளது என்று கொ.ம.தே.க பொதுச்செயலாளர் ஈஸ்வரன் தெரிவித்து உள்ளார்.
கடந்த 6ம் தேதி பெரம்பூரில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் சிவன் மற்றும் பெருமாள் கோயில்களை இடித்துவிட்டு புத்த விகார்களை கட்ட வேண்டுமென்று பேசி இருந்தார்.
இதற்கு தொடர்ந்து கண்டனங்கள் எழுந்து வரும் நிலையில், இந்தப் பேச்சு வருத்தமளிக்கும் விதத்தில் இருப்பதாக கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சி பொதுச்செயலாலர் ஈஸ்வரன் அறிக்கை ஒன்றை வெளியிட்டு உள்ளார்.
அரசியல் லாபத்திற்கான பேச்சு
அந்த அறிக்கையில், கோவில்களை இடிக்க வேண்டும் திருமாவளவனின் பேச்சு மிகுந்த வருத்தமளிக்கிறது. புத்த மதத்தை சார்ந்தவர்களே இப்படிப்பட்ட கருத்துக்களை ஏற்றுக்கொள்ளமாட்டார்கள். சாதியையும், மதத்தையும், வழிபாட்டையும் அரசியல் லாபத்திற்காக எந்தவொரு தலைவரும் கொச்சைப்படுத்தி பேசுவதை தவிர்க்க வேண்டும். சிவனையும், பெருமாளையும் வழிபடுபவர்கள் விடுதலை சிறுத்தைகள் கட்சியிலும் இல்லாமல் இல்லை. வழிபாடு என்பது எந்த மதத்தை சார்ந்தவர்களாக இருந்தாலும் அது அவர்களுடைய தனிப்பட்ட சுதந்திரம்.
அமைதியைக் குலைக்கும் பேச்சு
ஒருவரின் தனிப்பட்ட சுதந்திரத்தில் தலையிடுவதை யாரும் விரும்பமாட்டார்கள். எந்தவொரு உணர்ச்சி வேகத்திலும் சாதி, மதம் பற்றியோ, கடவுள் வழிபாடுகளை பற்றியோ அரசியல் கட்சி தலைவர்கள் பேசுவதை இவ்வளவு விழிப்புணர்வு அடைந்தப் பின்னால் தமிழ்நாட்டு மக்கள் விரும்பமாட்டார்கள். ஒருவர் தன்னுடைய வழிபாட்டு முறைகளை பற்றி உயர்த்தி பேசுவதே மற்றவர்களை பாதிக்கும் என்ற நிலை இருக்கும் போது மற்றவர்களுடைய வழிபாட்டையும், கடவுள் நம்பிக்கையையும் கொச்சைப்படுத்தி பேசுவது ஏற்புடையதல்ல. வாதத்திற்காக கூட இதுபோன்று மக்கள் அமைதியை குலைக்கின்ற விஷயங்களை பொதுமேடைகளில் பேசுவதை கண்டிப்பாக தவிர்க்க வேண்டும்.
சாதி மதம் குறித்த பேச்சு வேண்டாம்
இதைபோன்று அந்த கூட்டத்தில் இருந்தவர்களை மகிழ்ச்சிப்படுத்துவதற்காக பேசுவதும், அதை எதிர்த்து வேறுசில தலைவர்கள் எதிர்கருத்து தெரிவிப்பதும் மக்களிடையே அமைதியின்மை ஏற்படுத்தும். இதுபோன்ற விஷயங்களை பொதுமேடைகளில் பேசுவது தமிழகத்திற்கு எந்தவிதத்திலும் பயன் தராது. இன்றைய சூழ்நிலையில் அனைத்து துறைகளிலும் இறங்குமுகமாக இருக்கின்ற தமிழகத்தை முன்னேற்றுகின்ற முயற்சிகளில் அனைத்து தலைவர்களும் இறங்க வேண்டும். முன்னேற்றம் தடைப்பட்டு லட்சக்கணக்கானவர்கள் வேலை இழந்து கொண்டிருக்கின்ற இந்த சூழ்நிலையில் மக்களின் கவனத்தை மதம், சாதி போன்ற விஷயங்களில் திசை திருப்புவது நாம் அமர்ந்திருக்கின்ற மரத்தின் கிளையை நாமே வெட்டி சாய்ப்பதற்கு சமமாகி விடும்.
அனைவரும் கை கோர்க்க வேண்டும்
எந்தவொரு அரசியல் தலைவரும் மற்றவர்கள் மனம் புண்படுகின்ற வகையிலே பேசக்கூடாது. மக்கள் தாங்கள் சார்ந்துள்ள மதத்தின் அடிப்படையில் அவரவர் நம்பிக்கைக்கும், விருப்பத்திற்கும் ஏற்ப இறைவழிபாடு செய்வதென்பது தொன்றுதொட்டு நடக்கின்ற நிகழ்வு. அது அவரவர் உரிமை. தற்போதைய சூழ்நிலையில் மதத்திற்குள்ளும், சாதிக்குள்ளும் நல்ல விதமான உறவை ஏற்படுத்த அரசியல் கட்சி தலைவர்கள் முயற்சிக்க வேண்டுமே தவிர, பாகுப்பாட்டையும், வெறுப்பையும் உண்டாக்கி அரசியல் ஆதாயம் தேட முயற்சிப்பது சரியானதாக இருக்காது. இதைவிடுத்து அனைவரும் தமிழகத்தை வளர்ச்சிப்பாதையில் கொண்டு செல்ல உழைப்போம் என்று அந்த அறிக்கையில் ஈஸ்வரன் குறிப்பிட்டு உள்ளார்.