தீக்குளிக்காதீங்க... செத்தா உங்க மனைவி, புள்ள குட்டிங்க பாவம்.. அதிமுகவினருக்கு ஈஸ்வரன் அட்வைஸ்
சென்னை: அதிமுகவினர் யாரும் தற்கொலை செய்து கொள்ளக் கூடாது. அப்படி செத்தால் அனாதைகள் போல மருத்துவமனைகளில் வைத்திருந்து விட்டு தூக்கிப் போட்டு விடுவார்கள். கடைசியில் உங்க புள்ள குட்டிகளும், குடும்பமும்தான் கதறிக் கொண்டிருக்கரும் என்று கொங்கு மக்கள் தேசியக் கட்சியின் தலைவர் ஈஸ்வரன் கூறியுள்ளார்.
விலை மதிக்க முடியாத உயிரை மாய்த்துக் கொள்ள முயற்சிக்கும் அதிமுக தொண்டர்களும், அவர்களைத் தூண்டி விடுவோரும் தயவு செய்து இதை நிறுத்த வேண்டும் என்றும் ஈஸ்வரன் கோரிக்கை விடுத்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கை:
முட்டாள்தனமான முடிவு
சில அதிமுக தொண்டர்கள், முதலமைச்சரின் உடல் நிலையைக் கேட்டு பொறுக்க முடியாமல் தற்கொலை செய்து கொள்ள முயற்சிப்பது வேதனைக்குரியது. அதுபோன்ற முட்டாள்தனமான எண்ணங்களுக்கு முற்றுப்புள்ளி வையுங்கள். உங்களின் விழிப்புணர்வற்ற இந்த செயல்பாடுகளால் முதலமைச்சரைக் குணமடைய வைக்க முடியுமா. இதனால் நீங்கள் சாதிக்கப்போவது, உங்களையே நம்பியிருக்கின்ற உங்கள் குடும்பத்தை அனாதை ஆக்குவதுதான்.
உங்களை விட முட்டாள் யாருமில்லை
உங்கள் உயிரை துறப்பதன் மூலம் உங்கள் குடும்பத்தை உங்கள் கட்சி காப்பாற்றும் என்று நீங்கள் நினைத்தால் உங்களைவிட முட்டாள் வேறு யாருமில்லை. இதைப்போல் உயிரை விட்டவர்களுடைய நான்கைந்து குடும்பங்களை நேரில் சென்று பார்த்து வாருங்கள். இப்படிச் செய்தால் உங்கள் முடிவை மாற்றிக் கொள்வீர்கள்.
மனைவி, குழந்தை படும் பாட்டைப் பாருங்கள்
உங்களைப் போன்ற தொண்டர்களுடைய மனைவியும், குழந்தைகளும் படும் பாட்டைப் பார்த்தால் புரிந்து கொள்வீர்கள். உங்கள் குடும்பத்திற்கு நீங்கள் முக்கியம் என்பதை உணருங்கள். நீங்கள் இப்படி செய்வதன் மூலம், உங்கள் குடும்பத்தை தவிக்கவிடுவது மட்டுமல்ல, இன்னும் ஒரு சிலரையும் இப்படிச் செய்ய தூண்டுகிறீர்கள் என்பதை புரிந்து கொள்ளுங்கள்.
தூக்கிப் போட்டு விடுவார்கள்
நீங்கள் விஷம் குடித்தாலோ, தீக்குளித்தாலோ அரசாங்க மருத்துவமனையில் அனாதைகள் போல வைத்திருந்து, இறந்தவுடன் தூக்கிப் போட்டுவிடுவார்கள். உங்களைச் சுற்றி நின்று கதறுவது உங்கள் குடும்பம் தான். நீங்கள் பெற்ற பிள்ளைகள் தான்.
அடிமட்டத் தொண்டர்களே
முதலமைச்சருக்கு உலகத்திலேயே உயர்ந்த மருத்துவ சிகிச்சை அளிக்கப்படும். ஒவ்வொரு நொடியும் கண்காணிக்கப்படுகிறார்கள். சிறந்த மருத்துவர்கள் உலகத்தின் எந்த மூலையிலிருந்து வேண்டு மென்றாலும் நொடிப் பொழுதில் வரவழைத்துவிடுவார்கள். அதைப்பற்றிக் கவலைப்படாமல் அடிமட்ட தொண்டர்கள் அமைதி காக்க வேண்டும்.
உங்களுக்கு ஏன் புரியவில்லை
முதலமைச்சரால் அளவில்லாத பலனடைந்தவர்கள் யாராவது இந்த முடிவுக்கு வருகிறார்களா? ஏன் உங்களுக்கு மட்டும் இது புரியவில்லை. தயவு செய்து தவறான முடிவுகளை எடுத்து உங்கள் குழந்தைகளை கேட்பாரற்ற அனாதைகளாக தெருவிலே அலைய விட்டுவிடாதீர்கள். முதலமைச்சர் குணமடைவார் என்ற நம்பிக்கையோடு எல்லோரையும் போல் காத்திருங்கள் என்று கூறியுள்ளார் ஈஸ்வரன்.