காவிரி : ஏப்ரல் 5ல் நடக்கும் வேலைநிறுத்தப் போராட்டத்திற்கு கொமதேக முழு ஆதரவு - ஈஸ்வரன்
ஏப்ரல் 5ல் நடக்கும் வேலைநிறுத்தப் போராட்டத்திற்கு கொமதேக முழு ஆதரவு அளிக்கும் என்று ஈஸ்வரன் தெரிவித்துள்ளார்.
சென்னை : காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசைக் கண்டித்து எதிர்க்கட்சிகள் நடத்த இருக்கும் வேலைநிறுத்தப் போராட்டத்திற்கு கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி ஆதரவு அளிக்கும் என்று அக்கட்சியின் பொதுச்செயலாளர் ஈஸ்வரன் தெரிவித்துள்ளார்.
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசைக் கண்டித்து வரும் 5ம் தேதி தமிழகம் தழுவிய மாபெரும் வேலைநிறுத்தப்போராட்டத்திற்கு திமுக அழைப்பு விடுத்துள்ளது.
இதுகுறித்து கொமதேக பொதுச்செயலாளர் ஈஸ்வரன் வெளியிட்டுள்ள அறிக்கையில், காவிரி மேலாண்மை வாரியத்தை உச்சநீதிமன்றம் கொடுத்த காலக்கெடுக்குள் மத்திய அரசு அமைக்காமல் கர்நாடகா தேர்தலின் வெற்றிக்காக காலம் கடந்து 'ஸ்கீம்' என்பதற்கு விளக்கம் கேட்டு தமிழகத்தை திட்டமிட்டு ஏமாற்றியிருப்பது கடும் கண்டனத்திற்குரியது.
போராட்டக்களமான தமிழகம்
மத்திய அரசின் கபட நாடகத்தை தமிழக விவசாயிகளும், இளைஞர்களும் மற்றும் அனைத்துதரப்பு மக்களும் புரிந்து கொண்டதால் தான் தமிழகம் முழுவதும் போராட்டக்களமாக மாறி வருகிறது. மத்திய அரசுக்கு தமிழகத்தின் ஆளுங்கட்சி எந்தநிலையிலும் அரசியல் அழுத்தத்தை கொடுக்கமாட்டார்கள் என்று நேற்றையதினம் நடந்தேறிய ராஜினாமா நாடகத்தின் மூலமாக தமிழக மக்கள் உணர்ந்து இருக்கிறார்கள்.
உச்சநீதிமன்றத்தின் விளக்கம்
தமிழக அரசு தனது தோல்வியை ஒப்புக்கொண்டு போராடும் இளைஞர்களுக்கு ஆதரவாக செயல்பட முன்வர வேண்டும். காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது மட்டும் தான் காவிரி பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு என்று கடந்த பல வருடங்களாக போராடி வரும் நிலையில், தீர்ப்பில் உள்ள 'ஸ்கீம்' என்ற வார்த்தைக்கு அர்த்தம் காவிரி மேலாண்மை வாரியம் இல்லை என்று உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சொல்லியிருப்பது தமிழகத்திற்கு பேரிடியாக அமைந்துள்ளது.
கொமதேக ஆதரவு
காவிரி தொடர்பான அனைத்து விவகாரங்களிலும் தமிழகம் மட்டுமே தொடர்ந்து பாதிப்பை சந்தித்து வருகிறது. எனவே காவிரி பிரச்சினைக்கு இத்தோடு முற்றுப்புள்ளி வைத்து தமிழக விவசாயிகளின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க வேண்டியுள்ளது.காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்காத மத்திய அரசை கண்டித்தும் வருகின்ற 5ம் தேதி தமிழகத்திலுள்ள அனைத்து எதிர்க்கட்சிகளும் இணைந்து நடத்தும் முழு அடைப்பு போராட்டத்திற்கு தமிழக விவசாயிகளும், இளைஞர்களும் மற்றும் பொதுமக்களும் ஆதரவு தந்து போரட்டத்தை வெற்றி பெற செய்ய வேண்டும்.
முழு ஆதரவு வழங்கிய கட்சிகள்
இந்த முழு அடைப்பு போராட்டத்தில் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் நிர்வாகிகளும், தொண்டர்களும் பெருந்திரளாக கலந்துகொள்ள உள்ளதாகவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே இந்தப் போராட்டத்திற்கு காங்கிரஸ், விடுதலைச் சிறுத்தைகள் மற்றும் பாட்டாளி மக்கள் கட்சி ஆதரவு தெரிவித்துள்ளது.