பாஜகவுக்கு டாட்டா காட்டியது கொ.ம.தே.க.! கெயில், அவினாசி- அத்திக்கடவு விவகாரத்தில் விளாசிய ஈஸ்வரன்!!
கோவை: பாரதிய ஜனதா தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இருந்து கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியும் கழன்றுவிட்டது. கெயில் எரிவாயு குழாய், அவினாசி- அத்திக்கடவு திட்டம் ஆகியவற்றில் மத்திய பா.ஜ.க. அரசின் நடவடிக்கைகளை மிகக் கடுமையாக விமர்சித்திருக்கிறார் கொ.ம.தே.க.வின் தலைவர் ஈஸ்வரன்.
லோக்சபா தேர்தலின் போது பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் கொ.ம.தே.க.வும் இடம்பெற்றிருந்தது. தேர்தலுக்குப் பின்னர் மதிமுக, தேமுதிக, பாமக, இந்திய ஜனநாயகக் கட்சி என அனைத்து கட்சிகளுமே கூட்டணியில் இருந்து கழன்று கொண்டு விட்டன.
ஆனாலும் சட்டசபை தேர்தலில் வலுவான தேசிய ஜனநாயகக் கூட்டணி களமிறங்கும் என்றே பாஜக கூறிவருகிறது. கொங்குநாடு மக்கள் தேசியக் கட்சியுடன் பேச்சுவார்த்தை நடத்த குழுவையெல்லாம் கூட பாஜக அமைத்திருந்தது. இந்நிலையில் கோவை வடவள்ளியில் நடைபெற்ற கொ.ம.தே.க. பொதுக்கூட்டத்தில் பாஜக அரசை வெளுவெளுவென வெளுத்து வாங்கியிருக்கிறார் அதன் தலைவர் ஈஸ்வரன்.
என்ன கிழித்தார்கள்?
அவர் பேசியதாவது:
அவினாசி அத்திக்கடவு திட்டத்துக்காக போராடுபவர்களுக்கு தமிழக காங்கிரஸ் கமிட்டித் தலைவர் இளங்கோவனும், தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜனும் ஆதரவு தருகிறார்கள். காங்கிரஸ் ஆட்சியில் இத் திட்டத்தை கொண்டு வரவில்லை. பாஜகதான் இப்போது மத்தியில் ஆட்சியில் உள்ளது. கடந்த ஓராண்டில் இவர்கள் என்ன செய்து கிழித்தார்கள்?
நடவடிக்கை எடுக்கலையே...
சில மாதங்களுக்கு முன்பு நிர்மலா சீத்தாரமனை நேரில் சந்தித்து போராட்டக்காரர்கள் சில கோரிக்கைகளை வழங்கினர். ஆனால் இதுவரை பாஜக அரசு நடவடிக்கை எடுக்கவில்லையே...
கெயில் விவகாரம்
தமிழகத்தை தவிர மற்ற மாநிலங்களில் கெயில் எரிவாயு குழாய் நெடுஞ்சாலைகள் ஓரம் செல்கிறது. இங்கு மட்டும் விவசாய நிலத்தில் செல்வதா? மத்தியில் ஆளும் பாஜக என்ன செய்து கொண்டிருக்கிறது?
மோடியை ஏன் சந்திக்கலை?
தமிழகத்தில் உள்ள பாஜக தலைவர்கள் என்ன செய்து கொண்டிருக்கிறீர்கள். உங்கள் பிரதமர் தானே மோடி. அவரை நேரில் பார்த்து நிலைமையை சொல்லி பிரச்னையை தீர்க்க வேண்டியது தானே. அதை செய்யாமல் என்ன செய்து கொண்டிருக்கிறீர்கள்?
இவ்வாறு ஈஸ்வரன் ஏகத்துக்கும் விமர்சனம் செய்தார்.
இத்தகைய பேச்சால் பாஜக தலைமையிலான கூட்டணியில் இருந்து கொ.ம.தே.க.வும் வெளியேறிவிட்டது உறுதியாகி உள்ளது.