களக்காடு முண்டன்துறை புலிகள் காப்பகத்தில் இன்று முதல் புலிகள் கணக்கெடுப்பு தொடக்கம்
நெல்லை: களக்காடு முண்டன்துறை புலிகள் காப்பகத்தில் இன்று புலிகள் உள்ளிட்ட வன விலங்கினங்கள் குறித்த கணக்கெடுப்பு நடைபெறுகிறது
மேற்குத் தொடர்ச்சி மலையில் திருநெல்வேலி மாவட்டத்தில் திருக்குறுங்குடியில் இருந்து கடையம் வரை 895 சதுர கி.மீ பரப்பளவில் களக்காடு முண்டன்துறை புலிகள் காப்பகம் அமைந்துள்ளது. பல்லுயிர் பெருக்கத்திற்கு புகழ்பெற்ற இக்காப்பகத்தில் அரிய வகை விலங்குகள், தாவர வகைகள் உள்ளன. இங்கு ஆண்டுதோறும் புலிகள் உள்ளிட்ட விலங்குகள் குறித்த கணக்கெடுக்கும் பணி மேற்கொள்ளப்படும். கடந்த 2015 இல் பிப். 17 இல் தொடங்கி கணக்கெடுப்பு நடைபெற்றது. இந்தாண்டு கணக்கெடுப்பு இன்று முதல் தொடங்குகிறது.
இதுகுறித்து முண்டத்துறை புலிகள் காப்பக இணை இயக்குனர் காஞ்சான கூறியதாவது: அம்பை கோட்டத்தில் 17 பீட், களக்காடு கோட்டத்தில் 13 பீட்கள் மற்றும் கன்னியாகுமரி மாவட்ட பம்பர் ஜோன் பகுதிகளில் உள்ள வனப்பகுதிகளில் வனவிலங்கு கணக்கெடு்க்கும் பணி இன்று தொடங்குகிறது. இந்த பணி வரும் 27ம் தேதி வரை நடைபெறுகிறது. கணக்கெடுப்பாளர்களுக்கு கள இயக்குனர் வெங்கடேஷ் தலைமையில் பயிற்சி அளிக்கப்பட உள்ளது. முண்டத்துறை அகஸ்தியர் கள பயிற்சி மையத்தில் பயிற்சி அளிக்கப்படும்.
கணக்கெடுப்பின் போது புலி, சிறுத்தை, பிற ஊன் உண்ணிகள், சிங்கவால் குரங்கு, யானை, மான், கரடி போன்ற இதர விலங்குகளின் கால் தடம், எச்சம், பறண்டம் உள்ளிடவற்றை நேர்முக மற்றும் மறைமுகமாக கணக்கெடுக்கும் பணியில் போது கடைபிடிக்க வேண்டிய முறை குறித்து பயிற்சி அளிக்கப்படும்.
பயிற்சியில் அம்பாசமுத்திரம், களக்காடு கோட்டம், மற்றும் கன்னியாகுமரி மாவட்ட வன அலுவலர்கள், வேட்டை தடுப்பு காவலர்கள், சுற்று சூழல் ஆர்வலர்கள், கல்லூரி மாணவர்கள் உள்ளிட்ட பலர் பங்கேற்கின்றனர். இந்த கணக்கெடுப்பில் ஈடுபடுபவர்களுக்கு உணவு, தங்கும் வசதி செய்து தரப்படும்.
விலங்குகள் குறித்த கணக்கெடுப்பு நடத்தப்படுவதை முன்னிட்டு புலிகள் காப்பகம் ஜன. 23 முதல் 30 ஆம் தேதி வரை மூடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இங்குள்ள மாஞ்சோலைத் தேயிலைத் தோடடப் பகுதி மற்றும் மணிமுத்தாறு, பாபநாசம் அகஸ்தியர் அருவிகள், களக்காடு தலையணை உள்ளிட்ட சுற்றுலாத் தலங்களுக்கு சுற்றுலாப் பயணிகள் செல்ல தடை விதிக்கப்படும் என புலிகள் காப்பக அதிகாரிகள் தெரிவித்தனர்.