ஸ்டாலினை முதல்வராக்க திமுக தொண்டர்கள் தீவிரமாகக் களப்பணியாற்ற வேண்டும்: கே.என்.நேரு வேண்டுகோள்
ஸ்டாலினை முதல்வராக்க தொண்டர்கள் தீவிர களப்பணியாற்ற வேண்டும் என்று கே.என்.நேரு வேண்டுகோள் விடுத்துள்ளார்.
திருச்சி : விரைவில் வரவிருக்கும் தேர்தலில் தீவிர களப்பணியாற்றி திமுகவின் செயல்தலைவர் ஸ்டாலினை முதல்வராக்க வேண்டும் திருச்சியில் நடந்த மாநகர செயற்குழுவில் கே.என். நேரு தொண்டர்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
திருச்சியில் உள்ள கலைஞர் அறிவாலயத்தில் மாநகர தி.மு.க. செயற்குழு கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் முன்னாள் அமைச்சரும், மாவட்ட செயலாளருமான கே.என்.நேரு கலந்து கொண்டு நிர்வாகிகளிடம் உரையாற்றினார்.
கூட்டத்தில் அவர் பேசுகையில், வரவிருக்கும் கூட்டுறவு சங்கத் தேர்தல்களில் வெற்றி பெறுவதன் மூலம் மக்களுக்கு எந்த அளவிற்கு பயனுள்ள வகையில் செயல்பட முடியும் என்பது பற்றி விரிவாகப் பேசினார்.
ஒவ்வொரு பொறுப்புகளிலும் போட்டியிட தேவையான தகுதிகள் என்னென்ன என்பது பற்றி விளக்கிக் கூறியும், அதற்கான சந்தேகங்களையும் தீர்த்து வைத்தார்.
இந்தத் தேர்தலில் வெற்றி பெற்று அடுத்தடுத்து நடைபெறவிருக்கும் உள்ளாட்சி தேர்தல், சட்டமன்றத் தேர்தல், பாராளுமன்றத் தேர்தல்களுக்கான வெற்றிக்கு படிக்கட்டாக இருக்கும் என்று கே.என்.நேரு தெரிவித்தார்.
மேலும், ஈரோட்டில் நடைபெறவிருக்கும் மாநாட்டிற்கு நகரம், ஒன்றியம், பேரூர் என அனைத்து பகுதிகளிலும், ஆயிரக்கணக்கில் தொண்டர்கள் திருச்சியில் இருந்து அணிவகுத்துச் செல்ல வேண்டும், அதற்கான ஏற்பாடுகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் குறிப்பிட்டார்.
இப்போதில் இருந்தே வரவிருக்கும் சட்டப்பேரவைத் தேர்தலை, மனதில் வைத்து திமுக தொண்டர்கள் அனைவரும் களப்பணியாற்ற வேண்டும் என்று கே.என்.நேரு வேண்டுகோள் விடுத்துள்ளார்.