ஊரடங்கால் வறுமையில் தவிக்கும் கொடைக்கானல் கிராம மக்கள்.. அரசு உதவ கோரிக்கை
கொடைக்கானல் : கொரோனா வைரஸ் தொற்று ஊரடங்கு கொடைக்கானல் மலைப்பகுதி மக்களின் வாழ்வாதாரத்தை முற்றிலும் சீரழித்துள்ளது. கொடைக்கானலின் நகரப்பகுதி மக்கள் சுற்றுலா இல்லாமல் முடங்கி உள்ள நிலையில், கீழ்மலைப்பகுதிகளில் உள்ள பதினாறு பழங்குடியினர் கிராமங்களை சேர்ந்த மக்கள் பசி, பட்டினியுடன் தவித்து வருகிறார்கள்.
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் உலகப்பிரசித்த பெற்ற சுற்றுலாத் தலம் ஆகும். இங்கு ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் சுற்றுலா சீசன் களை கட்டும். மலர் கண்காட்சி நடக்கும். படகு போட்டிகள் நடைபெறும். பல்லாயிரம் மக்கள் ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் கொடைக்கானலுக்கு குவிவார்கள். ஆனால் கொரோனா ஊரடங்கால் மலர் கண்காட்சி ரத்து செய்யப்பட்டுள்ளது. கொடைக்கானலில் நடைபெறும் கோடை விழாவும் ரத்து செய்யப்பட்டுள்ளது. சுற்றுலாவிற்கும் அனுமதி அளிக்கப்படவில்லை. இதனால் மொத்த கொடைக்கானலும் சுற்றுலா தொழில் முடங்கி நொடிந்து போய்கிடக்கிறார்கள்.
கொடைக்கானலின் நகரப்பகுதிகளில் இப்படி தொழில் முடக்கம் என்றால், கொடைக்கானல் கீழ்மலை கிழக்கு செட்டி பட்டி பகுதிகளில் உள்ள கிராம மக்கள் ஊரடங்கால் வறுமையில் தள்ளப்பட்டு பசியோடு தவிக்கிறார்கள். குறிப்பாக எழுத்திரைக்காடு, சேம்படி ஊத்து, பள்ளத்து வளவு, கவுச்சிக்கொம்பு, கடையமலை, கள்ளக்கிணறு, கொரவனாச்சி ஓடை, பாறைப்பட்டி, புலையன் கால்வாய், சொடலைப்பாறை, கரடிப்பாறை, நடனங்கால்வாய், கூட்டப்பாறை, குன்றுக்காடு உள்ளிட்ட கீழ் மலையில் உள்ள மக்கள் வறுமையில் வாடி வருகிறார்கள்.
அரசு அளித்த நிவாரண பொருட்களும், 1000 ரூபாய் பணத்தை வைத்து தான் இத்தனை நாள் வாழ்க்கையை ஓட்டும் நிலையில் அந்த மக்கள் உள்ளார்கள். சில இடங்களில் தன்னார்வலர்கள் மற்றும் அரசியல் கட்சியினர் உதவி உள்ளனர். இன்னும் பலர் உதவிகள் கிடைக்காமல் அத்தியாவசிய தேவைகளை கூட பூர்த்தி செய்ய முடியாமல் தவிக்கிறார்கள்.
இதற்கிடையில் கொடைக்கானல் மேல்மலை பகுதியில் இடி-மின்னலுடன் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது, பலத்த காற்றும் வீசி வருகிறது.. இதனால் பல்வேறு இடங்களில் மரங்களின் கிளைகள் முறிந்து விழுந்தன. இந்நிலையில் கொடைக்கானலில் இருந்து பாம்பார்புரம் மற்றும் சுற்றுலா இடங்களுக்கு செல்லும் மலைப்பாதையில் மரம் ஒன்று நேற்று முன்தினம் வேரோடு சாய்ந்தது.
இதனால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதையடுத்து அவ்வழியாக வந்த வாகனங்கள் அப்சர்வேட்டரி வழியாக திருப்பி அனுப்பப்பட்டன. இதுகுறித்து தகவல் அறிந்த வனச்சரகர் ஆனந்தகுமார், வனவர் ஜாபர் தலைமையிலான வனத்துறையினர் நேற்று காலை சம்பவ இடத்திற்கு சென்று சாலையில் விழுந்த மரத்தை வெட்டி அகற்றினர். இதனைத்தொடர்ந்து போக்குவரத்து இயல்பு நிலைக்கு திரும்பியது .