கொடநாடு கொலை வழக்கு: கோவை மருத்துவமனையில் சயான் தற்கொலை முயற்சி.. பெரும் பரபரப்பு!
கொடநாடு காவலாளி கொலை வழக்கில் கைதான சயான் கோவை அரசு மருத்துவமனையில் தற்கொலைக்கு முயன்றதாக தகவல் வெளியாகியுள்ளது.
கோவை: கொடநாடு காவலாளி கொலை வழக்கில் கைதான சயானுக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டதால் கோவை அரசு மருத்துமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவர் தற்கொலைக்கு முயன்றதாக தகவல் வெளியாகியுள்ளது.
முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவிற்கு சொந்தமான கொடநாடு எஸ்டேட் நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே உள்ளது. இங்குள்ள பங்களாவில் ஜெயலலிதா வந்து தங்கி ஓய்வெடுத்து செல்வார்.
கொடநாடு எஸ்டேட்டில், கடந்த ஏப்ரல் மாதம் 24ஆம் தேதி நள்ளிரவு காவலாளி ஓம் பகதூர் என்பவர் மர்ம நபர்களால் கொலை செய்யப்பட்டார்.
இந்த வழக்கில் முக்கிய குற்றவாளியாக கருதப்படும் டிரைவர் கனகராஜ் சேலம் அருகே விபத்தில் சிக்கி உயிரிழந்தார்.
அவரது நண்பர் சயான், ஏப்ரல் 30ஆம் தேதி கேரள மாநிலம் பாலக்காடு அருகே நிகழ்ந்த கார் விபத்தில் படுகாயமடைந்தார்.
சயான் மேல் சிகிச்சைக்காக கடந்த மே மாதம் 13ஆம் தேதி கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவர் பூரண குணமடைந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்ததையடுத்து, நீலகிரி மாவட்ட போலீசார் இரு தினங்களுக்கு சயானை கைது செய்தனர்.
கொடநாடு எஸ்டேட்டில் கொலை சம்பவம் குறித்து சயான் செயல் விளக்கம் அளித்ததாக கூறப்படுகிறது. இதன்பின், கோத்தகிரி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட சயானை 15 நாட்கள் நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார்.
இந்நிலையில், சயானுக்கு கையில் கடுமையான வலி ஏற்பட்டதால், அவர் 6ஆம் தேதி நள்ளிரவில் மீண்டும் கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர்.
இதனிடையே அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த சயான் இன்று தற்கொலைக்கு முயற்சி செய்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.