கொடநாடு கொலையில் தேடப்பட்ட சயானிடம் கேரள போலீசார் துருவித் துருவி கேள்வி.. மருத்துவமனையில் பரபரப்பு
கொடநாடு கொலை வழக்கில் தேடப்பட்டு வந்த சயானிடம் கேரள போலீசார் துருவித் துருவி விசாரணை நடத்தி வருகின்றனர்.
கோவை: கொடநாடு கொலை வழக்கில் தேடப்பட்டு வந்த கேரளாவைச் சேர்ந்த சயானிடம் கேரள போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இதனால் கோவை அரசு மருத்துவமனையில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
ஏப்ரல் மாதம் 24ம் தேதி ஜெயலலிதாவிற்கு சொந்தமான பல கோடி ரூபாய் மதிப்புள்ள கொடநாடு எஸ்டேட்டின் காவலாளி ஓம்பகதூர் அநியாயமாக அடித்துக் கொல்லப்பட்டார். அப்போது கிஷன் பகதூர் என்ற மற்றொரு காவாளிக்கு படுகாயம் ஏற்பட்டது.
இதற்கிடையே, ஓம்பகதூர் கொலையில் தொடர்புடையதாகக் கூறி, ஜெயலலிதாவின் மாஜி கார் டிரைவர் கனகராஜ் தேடப்பட்டு வந்தார். அவர் மர்மான முறையில் இறந்தார். அவர் சாலை விபத்தில் பலியானதாக போலீசார் அறிவித்தனர்.
சாலை விபத்து
இதே போன்று கொடநாடு கொலையில் சம்பந்தப்பட்டதாக கேரளத்தைச் சேர்ந்த சயான் என்பவரும் தேடப்பட்டு வந்தார். அவரும் கார் விபத்தில் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் கவலைக்கிடமாக சேர்க்கப்பட்டார்.
கண் திறந்த..
அதன் பின்னர் கண் திறந்த சயானிடம் தமிழக போலீசார் விசாரணை நடத்தினார்கள். அதே போன்று கேரள போலீசாரும் சயானிடம் விசாரணை நடத்தினார்கள்.
மருத்துவமனை மாற்றம்
இந்நிலையில், தனியார் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்த சயான் கோவை அரசு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். இதனால் அங்கு போலீஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டது.
மீண்டும் விசாரணை
இதனைத் தொடர்ந்து, கேரள போலீசார் சயானிடம் விசாரணை நடத்த கோவை அரசு மருத்துவமனைக்கு இன்று சென்றனர். அங்கு சயானிடம் மீண்டும் விசாரணையை மேற்கொண்டுள்ளனர். குறிப்பாக, சாலை விபத்து குறித்து கேள்விகளை கேட்டு குடைந்தெடுப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.