கொடநாடு கொலை வழக்கில் கைதான சயான் மீண்டும் மருத்துவமனையில் அனுமதி
தமிழகத்தை அதிர்ச்சிக்குள்ளாக்கிய கொடநாடு கொலை மற்றும் கொள்ளை வழக்கில் கைதான சயானுக்கு திடீர் உடல் நலக்குறைவு ஏற்பட்டதையடுத்து அவர் மீண்டும் கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளா
கோவை: கொடநாடு கொலை மற்றும் கொள்ளை வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட சயான், உடல்நலக் குறைவு காரணமாக மீண்டும் கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
கடந்த ஏப்ரல் மாதம் கோடநாடு பங்களாவிற்குள் புகுந்த கும்பல் ஒன்று, ஓம்பகதூர் என்ற காவலாளியை கொலை செய்துவிட்டு, கொள்ளை முயற்சியில் ஈடுபட்டது.
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா தங்கிய எஸ்டேட் பங்களாவில் குற்றச் செயல் நடந்தது தமிழகம் முழுக்க பெரிய அளவுக்கு அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
9 பேர் கைது
இந்த வழக்கு தொடர்பாக சயான், மனோஜ் உள்ளிட்ட 9 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். அதில் சயான் சாலை விபத்திற்குள்ளாகி நீண் நாட்கள் மருத்துவமனையில் இருந்து வெளியே வந்தார்.
கோவை சிறையில் அடைப்பு
கைது செய்யப்பட்ட அவர், கைவலி காரணமாக 10 நாட்களாக சிகிச்சை பெற்று வந்தார். பின்னர், சயான் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.
மீண்டும் மருத்துவமனையில் அனுமதி
இந்நிலையில் நேற்றிரவு மீண்டும் தனக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டதாக சயான் கூறினார். இதனை அடுத்து அவரை பலத்த பாதுகாப்புடன் சிறைத்துறை அதிகாரிகள் மீண்டும், கோவை அரசு மருத்துவமனையில் சிறைக் கைதிகளுக்கான தனிப்பிரிவில் அனுமதித்தனர்.
மர்மம் நீடிப்பு
இந்த வழக்கில் சயான் கைது செய்யப்பட்டது முதல் மருத்துவமனையில் அவர் சிகிச்சைக்காக அடிக்கடி அனுமதிக்கப்படுவது சந்தேகத்தை ஏற்படுத்துவதாக கூறுகிறார்கள் அதிமுகவில். முக்கிய குற்றவாளியான இவருக்கு சாலை விபத்து நடைபெற்றதில் இருந்து இன்று வரை மர்மங்கள் பல நீடித்தே வருகிறது.