கொடநாடு எஸ்டேட் கொலை வழக்கு.. சாமியார் மனோஜுக்கு 11 நாள் ஜெயில்!
கொடநாடு எஸ்டேட் காவலாளி கொலை வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட சாமியார் மனோஜை 11 நாள்கள் நீதிமன்றக் காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார்.
கோத்தகிரி: கொடநாடு எஸ்டேட் காவலாளி கொலை வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட சாமியார் மனோஜை 11 நாட்கள் நீதிமன்றக் காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார்.
கடந்த 24-ஆம் தேதி ஜெயலலிதாவுக்கு சொந்தமான கொடநாடு எஸ்டேட்டில் காவலாளி ஓம்பகதூர் கொலை செய்யப்பட்டு கிடந்தார். மற்றொரு காவலாளி கிஷன் பகதூர் படுகாயமடைந்து கோவை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
திகில் படம் போல் பல்வேறு திருப்பங்களைக் கொண்டுள்ள இந்த கொலை வழக்கில் 6 பேர் கைது செய்யப்பட்டனர். கிஷன் பகதூரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் மொத்தம் 11 பேர் வரை இந்த கொலை சம்பவத்தில் ஈடுபட்டனர் என்று அவர் தெரிவித்ததை வைத்து தனிப்படை போலீஸார் குற்றவாளிகளை தேடி வந்தனர்.
இதனிடையே, ஜெயலலிதாவின் முன்னாள் கார் ஓட்டுநர் கனகராஜ் சாலை விபத்தில் உயிரிழந்துவிட்டார். மற்றொருவர் சயானும் விபத்தில் சிக்கி மனைவி, குழந்தையை இழந்த நிலையில் கோவை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரது நிலைமை மோசமாக உள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில் 8 பேர் கைது செய்யப்பட்டனர்.
கேரள மாநிலம், வாளையாறு பகுதியைச் சேர்ந்த சாமியார் மனோஜ் என்பவரை போலீஸார் நேற்று கைது செய்தனர். இந்நிலையில் அவரை இன்று கோத்தகிரி குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். அப்போது அவரை வரும் 12-ஆம் தேதி வரை நீதிமன்றக் காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார்.