என் மனைவி, மகள் என்ன ஆனார்கள்... மயக்கம் தெளிந்து சயன் கேட்ட முதல் கேள்வி
கொடநாடு கொலை வழக்கில் உயிரோடு இருக்கும் முக்கிய குற்றவாளி சயான் மயக்கம் தெளிந்து போலீசாரிடம் தன்னுடைய மனைவி, மகள் குறித்து விசாரித்துள்ளார்.
கோவை : விபத்தில் சிக்கி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் கொடநாடு கொலை வழக்கின் முக்கிய குற்றவாளி சயான் மயக்கம் தெளிந்த உடன் போலீசாரிடம் தன்னுடைய மனைவி, மகள் எப்படி இருக்கிறார்கள் என்று வினவியுள்ளார்.
நீலகிரி மாவட்டம் கொடநாடு எஸ்டேட் காவலாளி கொலை வழக்கில் தொடர்புடைய முக்கிய குற்றவாளியான ஜெயலலிதாவின் கார் டிரைவர் கனகராஜ் சேலம் அருகே நடந்த விபத்தில் இறந்தார். அவரது மற்றொரு கூட்டாளியான கோவையை சேர்ந்த சயான், அவரது மனைவி வினுப்பிரியா, மகள் நீது ஆகியோருடன் கேரள மாநிலம் பாலக்காடு அருகே காரில் சென்றபோது சாலை விபத்தில் சிக்கினர்.
இதில் வினுப்பிரியா மற்றும் குழந்தை நீது சம்பவ இடத்திலேயே பலியானார்கள். படுகாயம் அடைந்த சயான் கோவையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
கொடநாடு கொலை மற்றும் கொள்ளை வழக்கில் போலீசாருக்கு முக்கிய சாட்சியாக இருந்த சயான் பலத்த காயம் அடைந்ததால் அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வம சயான சுயநினைவு திரும்பியது தன்னுடைய மனைவி, மகள் எங்கே அவர்கள் எப்படி இருக்கிறார்கள் என்று போலீசாரிடம் கேட்டுள்ளார்.
சயானின் மனைவி, குழந்தை இறந்த செய்தியை போலீசார் அவரிடம் கூறாமல், அவர்கள் வேறு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகக் கூறியுள்ளனர். விபத்தில் சிக்கி கோமா நிலையில் இருந்து நினைவு திரும்பியுள்ள சயானிடம் அதிர்ச்சியளிக்கும் விஷயம் ஏதேனும் கூறினால் அது அவரின் உயிருக்கு ஆப்தை ஏற்படுத்தும் என்பதோடு, கொலை மற்றும் கொள்ளையின் முக்கிய துப்பாக கருதப்படும் சயானும் இறந்துவிட்டால் வழக்கு மேலும் சிக்கலாகிவிடும் என்று போலீஸ் கருதுகிறது.