அடுத்தடுத்து மர்ம விபத்து..கொடநாடு கொலையில் சிக்கிய கேரள ஆசாமி டேங்கர் லாரி மோதி படுகாயம்!
ஜெயலலிதாவின் கொடநாடு பங்களாவின் காவலாளி அடித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் சிக்கியுள்ள மற்றொரு கேரள ஆசாமி டேங்கர் லாரி மோதி படுகாயம் அடைந்து மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.
பாலக்காடு: கொடநாடு பங்களா காவலாளி கொலையில் தொடர்பு இருப்பதாக தேடப்பட்டு வந்த கேரளாவைச் சேர்ந்த சாயன் என்பவர் சாலை விபத்தில் சிக்கி படுகாயம் அடைந்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஜெயலலிதாவுக்கு சொந்தமான கொடநாடு எஸ்டேட்டில் காவலாளி ஓம்பகதூர் என்பவர் அடித்து படுகொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. மற்றொரு காவலாளி கிஷன்பகதூர் என்பவர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
ஜெயலலிதா மற்றும் சசிகலா தொடர்பான ரகசிய ஆவணங்களை கொள்ளையடிக்க இந்தக் கொலை நடந்திருக்கலாம் என்ற கோணத்தில் தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது. தனிப்படைகள் அமைத்து கொலையாளிகளை போலீசார் தேடி வந்த நிலையில், நேற்று கேரளாவைச் சேர்ந்த ஒருவர் கைது செய்யப்பட்டார்.
சிக்கிய கார் டிரைவர்
அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையின் அடிப்படையில் ஜெயலலிதாவின் முன்னாள் கார் ஓட்டுநர் கனகராஜ் உள்பட 6 பேர் சிக்கினர். ஆனால் முக்கிய குற்றவாளியாக கருதப்பட்ட கனகராஜ் நேற்று இரவு சாலை விபத்து ஒன்றில் பரிதாபமாக பலியானார் என்று போலீசாரால் தெரிவிக்கப்பட்டது. அதேநேரத்தில் அவர் என்கவுண்டரில் பலியானர் என்று சேலத்தில் பரபரப்பு நிலவி வருகிறது.
மற்றொரு விபத்து
இந்தப்பதற்றம் அடங்குவதற்குள் கொடநாடு எஸ்டேட் காவலாளி கொலையில் தொடர்புடைய மற்றொரு கேரள ஆசாமியான சாயன் என்பவர் கார் ஓட்டிச் செல்லும் போது டேங்கர் லாரி மோதி படுகாயம் அடைந்துள்ளார் என்ற தகவல் வெளியாகி மேலும் பரபரப்பை அதிகரித்துள்ளது. சயான் போலீசாரால் தேடப்பட்டு வருவதால் குடும்பத்துடன் தப்பிச் சென்று கொண்டிருந்த போது இந்த விபத்து நடந்துள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
இருவர் பலி
பாலக்காடு அருகில் நிகழ்ந்த விபத்தில் சாயனின் மனைவி வினுப்ரியா மற்றும் 5 வயதான நீலு ஆகியோர் சம்பவ இடத்திலேயே பலியாகியுள்ளனர். படுகாயம் அடைந்த சாயன் பாலக்காடு மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் சேர்க்கப்பட்டுள்ளார்.
மர்மம்
கொடநாடு எஸ்டேட் காவலாளி கொலையில் தொடர்புடைய அதுவும் ஜெயலலிதாவின் மாஜி கார் ஓட்டுநர் நேற்று இரவுதான் சாலை விபத்தில் மரணம் அடைந்துள்ளார். அதே பாணியில் மற்றொருவரும் சாலை விபத்தில் சிக்கியுள்ளது, கொடநாடு கொலையில் உள்ள மர்மத்தை மேலும், மேலும் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது.