கொடநாடு கொலை.. வலுக்கும் சந்தேகம்.. விபத்தில் சிக்கிய சயான் மனைவி, குழந்தை கழுத்தில் வெட்டுக்காயம்
கொடநாடு காவலாளி கொலை வழக்கு தொடர்புடையை சயான் என்பவரிடம் கேரளா போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கோவை: கொட நாடு காவலாளி கொலை வழக்கில் தேடப்பட்டு வந்த குற்றவாளி சயான் கார் விபத்தில் படுகாயமடைந்தனர். விபத்தில் பலியான அவரது மனைவி, குழந்தை கழுத்தில் வெட்டுகாயம் உள்ளதால் மேலும் சந்தேகம் வலுவடைந்துள்ளது. இதுகுறித்து விசாரிக்க கேரளா போலீசார் கோவை வந்துள்ளனர்.
நீலகிரி மாவட்டம் கோத்தகிரியில் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு சொந்தமான கொடநாடு எஸ்டேட்டில் கடந்த 23ம் தேதி நள்ளிரவில் காவலாளி ஓம்பகதூர் என்பவர் மர்மநபர்களால் கொலை செய்யப்பட்டார். மேலும் கிஷன் பகதூர் என்ற காவலாளி படுகாயம் அடைந்தார்.
இந்த கொலை வழக்கின் முக்கிய குற்றவாளியாக கருதப்பட்ட ஜெயலலிதாவின் முன்னாள் கார் ஓட்டுனரான கனகராஜ் என்பவர் இன்று காலை சேலம் அருகே எடப்பாடியில் சாலை விபத்தில் சிக்கி உயிரிழந்ததாக கூறப்படுகிறது.
மேலும் இந்த வழக்கில் முக்கியத் திருப்பமாக கேரளாவின் திருச்சூரை சேர்ந்த சயான் என்பவரும் பாலக்காடு அருகே டேங்கர் லாரி மோதிய விபத்தில் படுகாயமடைந்தார். அவர் கோவையில் உள்ள மருத்துமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த விபத்தில் சயானுடன் காரில் பயணித்த அவரது மனைவி வினுபிரியா, மகள் ஆகியோர் உயிரிழந்தனர்.
இந்நிலையில் பிரேதபரிசோதனையில் சயானின் மனைவி, குழந்தை கழுத்தில் வெட்டுகாயம் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதனால் கேரளா போலீசாருக்கு சந்தேகம் எழுந்துள்ளது. எனவே சயானின் மனைவி, மகள் உடல்கள் திருச்சூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளன. வெட்டுகாயம் குறித்து அறிய மாற்றப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. மேலும் இது விபத்தா அல்லது திட்டமிட்ட கொலையா என்ற கோணத்தில் கேரள போலீசார் விசாரணை துவக்கியுள்ளனர்.
இந்நிலையில் கோவை வந்துள்ள கேரளா போலீசார், சிகிச்சை பெற்று வரும் சயானிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். கொடநாடு காவலாளி கொலை வழக்கில் தேடப்பட்டு வந்த முக்கிய குற்றவாளிகள் இருவர், ஒரே நாளில் அடுத்தடுத்து வெவ்வேறு இடங்களில் சாலை விபத்தில் சிக்கியது போலீசாருக்கு மேலும் சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.