கொடுங்கையூர் பேக்கரி தீ விபத்து- பலி எண்ணிக்கை 10 ஆக உயர்வு
சென்னை கொடுங்கையூரில் நிகழ்ந்த பேக்கரி தீவிபத்தில் பலியானோர் எண்ணிக்கை 10 ஆக உயர்ந்துள்ளது கூடுதல் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை: சென்னை கொடுங்கையூர் பேக்கரியில் ஏற்பட்ட தீ விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 10 ஆக உயர்ந்துள்ளது. மேலும் பலர் படுகாயங்களுடன் சிகிச்சை பெற்று வருவதால் பலி எண்ணிக்கை அதிகரிக்கும் என்று அஞ்சப்படுகிறது.
கொடுங்கையூர் மீனாம்பாள் நகரில் உள்ள ஒரு பேக்கரியில் கடந்த 15ஆம் தேதி நள்ளிரவு ஏற்பட்ட பயங்கர தீ விபத்தின்போது எதிர்பாராவிதமாக சமையல் கேஸ் சிலிண்டர் வெடித்து தீயணைப்பு வீரர் ஏகராஜ் பலத்த காயமடைந்து சிறிது நேரத்தில் உயிரிழந்தார். மேலும் 3 தீயணைப்பு வீரர்கள், 6 காவலர்கள் உள்பட 47 பேர் தீ விபத்தில் சிக்கி படுகாயமடைந்தனர்.
காயம் அடைந்தவர்களுக்கு ஸ்டான்லி மற்றும் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைகளில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த பேக்கரி கடை உரிமையாளர் ஆனந்தன் உள்பட 5 பேர் சிகிச்சை பலனின்றி அடுத்தடுத்து இறந்தனர்.
இதைத் தொடர்ந்து சனிக்கிழமை மாலை கொடுங்கையூர் சோலையம்மன் கோயில் தெருவைச் சேர்ந்த கண்ணன் செம்பியம், முகுந்தம்மன் நகரை சேர்ந்த பாஸ்கர் ஆகியோரும் உயிரிழந்தனர். இதனால் பேக்கரி தீவிபத்தில் உயிழந்தவர்களின் எண்ணிக்கை 7 ஆக உயர்ந்தது.
இந்நிலையில் தீ விபத்தில் காயமடைந்து ராயபுரத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த பார்த்திபன் என்பவர் நேற்று காலை உயிரிழந்தார். இந்நிலையில், இன்று காலை கீழ்ப்பாக்கம் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நரேஷ் என்பவர் உயிரிழந்தார். இதையடுத்து இறந்தவர்களின் எண்ணிக்கை 10 ஆக உயர்ந்துள்ளது.
தற்போது கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் 11 பேருக்கும், ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் 10 பேருக்கும் தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இவர்களில் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் உள்ள 2 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது என்று மருத்துவமனை வட்டாரத்தினர் தெரிவிக்கின்றனர்.
காயமடைந்தவர்கள் பலர் கவலைக்கிடமான வகையில் சிகிச்சை பெற்று வருவதால் பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என்று அஞ்சப்படுகிறது.