பெரியபாண்டியன் மரணம் குறித்து எதுவும் தெரிவிக்கவில்லை.. சென்னை போலீஸ்!
காவல் ஆய்வாளர் பெரியபாண்டியன் மரணம் குறித்து எதுவும் தெரிவிக்கவில்லை என சென்னை காவல்துறை அறிக்கை வெளியிட்டுள்ளது.
Recommended Video
சென்னை:காவல் ஆய்வாளர் பெரியபாண்டியன் மரணம் குறித்து எதுவும் தெரிவிக்கவில்லை என சென்னை காவல்துறை அறிக்கை வெளியிட்டுள்ளது.
சென்னை மதுரவாயல் சட்டம் ஒழுங்கு காவல் ஆய்வாளர் பெரியபாண்டியன் கடந்த 13 ஆம் தேதி அதிகாலை ராஜஸ்தானில் சுட்டுக்கொல்லப்பட்டார்.
கொளத்தூர் நகைக்கடையில் கொள்ளையடித்தவர்களை பிடிக்க சென்றபோது பெரியபாண்டியன் சுட்டுக்கொல்லப்பட்டார்.
பெரியபாண்டியன் மரணம்
கொள்ளையர்கள் பெரியபாண்டியனை சுட்டுக்கொன்றதாக கூறப்பட்டது. இந்த சம்பவம் பெரும் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
முனிசேகர்தான் சுட்டார்
அண்மையில் ராஜஸ்தான் எஸ்பி தீபக் பார்கவ் பெரியபாண்டியன் மரணம் குறித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டார். அதில் கொள்ளையன் நாதுராமை நோக்கி கொளத்தூர் காவல் ஆய்வாளர் முனிசேகர் சுட்டபோது குறி தவறி பெரியபாண்டியன் மீது குண்டு பாய்ந்தது என்று அறிக்கை வெளியிட்டிருந்தார்.
உறுதி செய்த சென்னை போலீஸ்
இந்நிலையில் ராஜஸ்தான் காவல்துறை கூறியதை சென்னை காவல்துறை உறுதி செய்ததாக இன்று மாலை தகவல் பரவியது. காப்பாற்ற சென்றபோது பெரியபாண்டியனை முனிசேகர் தவறுதலாக சுட்டார் என சென்னை போலீஸ் தெரிவித்ததாக வெளியான தகவலால் பரபரப்பு ஏற்பட்டது.
துறைரீதியில் நடவடிக்கை
கொள்ளையர்களை சுட முயன்றபோது தவறுதலாக முனிசேகரின் துப்பாக்கி குண்டு பெரியபாண்டியன் மீது பாய்ந்ததாகவும் கூறப்பட்டது. இதுதொடர்பாக முனிசேகரிடம் ராஜஸ்தான் காவல்துறை விசாரணை முடிந்தபின் துறைரீதியில் நடவடிக்கை எடுப்பது குறித்து முடிவு செய்யப்படும் என்றும் சென்னை போலீஸ் தெரிவித்ததாக தகவல் பரவியது.
சென்னை போலீஸ் மறுப்பு
இந்நிலையில் ஆய்வாளர் பெரியபாண்டியன் மரணம் தொடர்பாக எந்த தகவல்களையும் வெளியிடவில்லை என தமிழக காவல்துறை தெரிவித்துள்ளது. முனிசேகர் தவறுதலாக சுட்டார் என வெளியான தகவல்களுக்கு காவல்துறை மறுப்பு தெரிவித்துள்ளது. பெரியபாண்டியன் மரணம் தொடர்பாக ராஜஸ்தான் மாநில போலீசார் விசாரித்து வருகின்றனர் என சென்னை போலீஸ் வெயிளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.