தே.பா. சட்டம் ரத்து- சேலம் சிறையில் இருந்து கொளத்தூர் மணி விடுதலை!
சேலம்: தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கைது செய்ததை சென்னை உயர் நீதிமன்றம் ரத்து செய்ததை அடுத்து சேலம் சிறையில் இருந்து திராவிடர் விடுதலை கழகத்தின் தலைவர் கொளத்தூர் தா.செ. மணி இன்று காலை விடுதலை செய்யப்பட்டார்.
இலங்கையில் நடைபெற்ற காமன்வெல்த் மாநாட்டில் இந்தியா பங்கேற்க கூடாது என்பதை வலியுறுத்தி திராவிடர் விடுதலை கழகத்தின் சார்பில் கடந்த ஆண்டு நவம்பர் 2ஆம் தேதி தமிழகம் முழுவதும் போராட்டம் நடைபெற்றது.
அப்போது, மத்திய அரசு அலுவலகங்கள் மீது பெட்ரோல் குண்டு வீசி தாக்கியதாக திராவிடர் விடுதலை கழகத்தின் தலைவர் கொளத்தூர் மணி உள்பட 4 பேர் தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டனர்.
இந்நிலையில், தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டதை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் கொளத்தூர் மணி மனுத் தாக்கல் செய்தார். இந்த மனுவை விசாரித்த உயர் நீதிமன்றம், கொளத்தூர் மணியை தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டதை ரத்து செய்தது.
இதைத் தொடர்ந்து சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்த கொளத்தூர் மணி இன்று காலை விடுதலை செய்யப்பட்டார்.
இதேபோல் தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட திராவிடர் விடுதலைக் கழகத்தின் இதர நிர்வாகிகளும் இன்று விடுதலை செய்யப்பட்டனர்.